இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0420



செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:420)

பொழிப்பு (மு வரதராசன்): செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?

மணக்குடவர் உரை: செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.

பரிமேலழகர் உரை: செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: செவியால் நுகரப்படும் கேள்விச் சுவையினை அறியாதாராய், வாயால் உண்ணப்படும் உணவின் சுவையுணர்வை மட்டும் உடையார் இறந்தால் என்ன? உயிரோடு இருந்தால் என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?

பதவுரை: செவியின்-காதினால்; சுவை-கேள்விச்சுவை; உணரா-தெரியாத; வாய்உணர்வின்-வாயால் நுகரப்படும் (சுவைகளை உணரும்) உணர்வுடைய; மாக்கள்-(பகுத்தறிவில்லாத), விலங்குப் பண்பு கொண்ட மக்கள்; அவியினும்-அழிந்தாலும், இறந்தாலும்; வாழினும்-வாழ்ந்தாலும்; என்-என்ன?


செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள்; [மாக்கள்-மன உணர்ச்சி இல்லாதவர்]
பரிப்பெருமாள்: செவியால் நுகரும் இன்பத்தை யறியாது, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள்;
பரிதி: செவியின் சுவையாகிய கேள்வியில்லாதார்;
காலிங்கர்: சான்றோரால் தம் செவியிற் சொல்லுவதாகிய கேள்விச் சுவையை நுகர்ந்தறியா மாந்தர் ஆகலான், வெறும் வாயுணர்வினையே ஓர் உணவாக மதித்திருக்கின்றனர்;
பரிமேலழகர்: செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்;
பரிமேலழகர் குறிப்புரை: செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். [சொற்சுவை-சொல்லில் தோன்றும் சுவை; பொருட்சுவை-பொருளில் தோன்றும் சுவை; குணம்-தொடைகளைப் பற்றி நின்று காப்பியத்திற்கு அழகு செய்வது; அலங்காரம்-சொல்லையும் பொருளையும் பற்றி நின்று அழகு செய்வது; உருத்திரம்-பிறர் செய்யும் தீங்கினாலாகும் மனக் கொதிப்பு]

'செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாந்தர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். வாயுணர்வின் என்று மற்றவர்கள் கொள்ள காலிங்கர் வாயுணவின் என்று பாடம் கொண்டார். வள்ளுவர் சொல்லாகிய மாக்கள் என்றதையே மணக்குடவர் குறிக்க, பரிப்பெருமாள் மக்கள் என்று அதை மாற்றி அமைத்தார். காலிங்கரும் பரிமேலழகரும் மாக்கள் என்றதை மாந்தர் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள்', 'செவிச்சுவையறியாத வாய்ச்சுவை மட்டும் அறிகின்ற கீழ்மக்கள்', 'செவியுணவாகிய கேள்விச் சுவைகளை அனுபவிக்கப் பழகாமல் (வெறும்) வாயுணவின் நாக்கு ருசிகளை மட்டும் அனுபவிக்கிற மனிதப் பிறவிகள்', 'செவியினாலே நற்கல்வியின் நயத்தினை நுகரமுடியாது. நாவினாலே நல்ல உணவின் சுவையினை மாத்திரம் அறியக்கூடிய மாந்தர்கள்' என்றபடி உரை தந்தனர்.

செவியால் கேட்டறியும் சுவைகளை உணராத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

அவியினும் வாழினும் என்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
மணக்குடவர் குறிப்புரை: இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிப்பெருமாள்: செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிதி: செத்தால் என் இருந்தால் என் என்றவாறு.
காலிங்கர்: மாய்ந்தால் வரும் சேதமும் இருந்தால் வரும் இலாபமும் என் உலகோர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
பரிமேலழகர் குறிப்புரை: செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது. [இரண்டும்-சாவதும் வாழ்வதும்]

'கேள்வியில்லாதார் உலகத்தார்க்கு பயன்படாராதலால் அவர்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது?' என்றபடி மணக்குடவரும் பரிமேலழகரும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். பரிதி 'அவர்கள் செத்தால் என்ன இருந்தால் என்ன' என்கிறார். காலிங்கர் 'அவர்கள் செத்தால் ஒரு இழப்பும் இல்லை இருப்பதால் பயனும் இல்லை' என்று உரை தருவார். பரிமேலழகர் 'சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?' என்று முன்னவர்கள் உரைகளைத் தொகுத்துக் கூறுவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெந்தால் என்ன? இருந்தால் என்ன?', 'செத்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு வருவதென்ன?', 'இறந்தாலென்ன? இருந்தாலென்ன?', 'செத்தாலும் வாழ்ந்தாலும் உலகத்திற்கு வருவதென்ன?' என்றபடி பொருள் உரைத்தனர்.

செத்தால் என்ன? இருந்தால் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செவியால் கேட்டறியும் சுவைகளை உணராது, வாயால் நுகரும் இன்பத்தை மட்டுமறியும் மாக்கள் செத்தால் என்ன? இருந்தால் என்ன என்பது பாடலின் பொருள்.
'மாக்கள்' எனும் சொல் குறிப்பது என்ன?

கேள்வியறிவு பெற நினையார் உலகில் வாழ்ந்தும் வாழாதாரே!

கேள்விச் சுவையினை உணராது நாவின் சுவையுணர்வு மட்டுமே உள்ள மனிதர்கள் இறந்தால் தான் என்ன? வாழ்ந்தால்தான் என்ன?
செவியிற் சுவையுணரா என்ற தொடர்க்கு நல்லவற்றைக் காதுகளால் கேட்டு இன்புறத் தெரியாத என்பது பொருள். செவிவழி கேட்டுப் பயனடைவது செவிச்சுவை எனப்படும். ஒரு பொருளைப் பற்றிநின்று நுகரப்படும்போது துய்ப்பானிடம் தோன்றும் உள்ளுணர்வு சுவையாம். அதுவே சிரித்தல், அழுதல் முதலான செய்கைகளாக-மெய்ப்பாடுகளாகவும் வெளிப்படும். சொற்சுவையும் பொருட்சுவையுமான நூற்பொருள் அறிதல், அன்றாட நிகழ்வுகள் பற்றிய செய்திகள், சொல்லொடு கூடிய இசை போன்றவற்றைக் கேள்விக்கருவிகள் மூலம் கேட்பது செவியிற்சுவையாம். பலவகையான மாந்தருடன் ஊடாடுவது, பொது அரங்கில் நடைபெறும் கருத்துரையாடல், கலந்துரையாடல், வானொலி, போன்றவற்றைக் கேட்டல், நாடகம், திரைப்படம் பார்ப்பது போன்றவை செவிக்கு விருந்தாகுவனவாம்.
வாயுணர்வு என்பது வாயால் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு எனப் பொருள்படும். அவற்றை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு என்னும் ஆறில் அடக்குவர். வாயுணர்வின் மாக்கள் என்றதற்கு ‘வாயுணவின் மாக்கள்’ என்றும் சிலர் பாடம் கொள்வர். இத்தொடர் செவியிற் சுவையுணராது வாயினால் சுவையுணர்பவர்கள் என்பதைச் சொல்வது.
அவியினும் என்றது அழிந்தாலும் என்ற பொருள் தருவது.

இக்குறளில் மனிதர் நுகரும் இருவேறுவகை சுவைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று செவிச்சுவை. மற்றது வாய்ச்சுவை. மனித நல்வாழ்வுக்கு இவ்விருசுவையும் தேவையே. செவிச்சுவை மாந்தர் அறிவை வளர்க்கும் கல்வி வாயிலாகும். வாயின் சுவை ஒருவர் உடலை மட்டுமே வளர்க்க உதவும். செவியறிவில் சுவைகண்டு, அதில் ஈடுபாடு காட்டாது, தின்பதற்கான உணவை வகைவகையாகத் தேடி நுகர்வோர்- நல்ல உணவின் சுவையே போதும் என்பவர்கள் - இவ்வுலகில் இல்லாமல் செத்தால்தான் என்ன? வாழ்ந்தால்தான் என்ன? எனக் காட்டமாகக் கேட்கிறார் வள்ளுவர். விலங்குகள்கூட உழைப்பால் பிறர்க்கு நல்லவகையிற் பயன்படுதல் கூடும். ஆனால் இவர்கள் அதற்கும் உதவமாட்டாராதலால் 'அவியினும் வாழினும் என்' என்று சொல்லப்பட்டது.

'மாக்கள்' எனும் சொல் குறிப்பது என்ன?

கேள்விச் சுவை மனிதனுக்கு அவ்வளவு தேவையா என்று படிப்போரைத் திகைக்க வைக்கும் மொழி கொண்டது இக்குறட்பா. முன்னர் செவிக்கு உணவு இல்லாதபோது சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று உண்ணுவதை இனியநடையில் கூறிய வள்ளுவர் இங்கு வெறுமனே உண்டு உறங்கும் மக்களை விலங்குகள் என்று வசைபாடி அவ்வாயுணர்வின் மாக்கள் இருந்தும் என்ன பயன் என வெறுப்பும் சலிப்பும் கொண்ட நடையில் கடுமையாகத் திட்டுகிறார்.
கேள்விச் சுவையற்றோரை மாக்கள் என்றும் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் வள்ளுவர் சினம் கொண்டு கூறுகிறார் இப்பாடலில். ஐயறிவுடைய உயிர்கள் மாக்கள் எனப்படுவர்; பகுத்தறிவு உளதாயின் மக்களெனப்படுவர். குறளின் பிறிதோரிடத்தில் கொலை வினையராகிய மாக்கள்... (329) எனக் கொலைஞர் மாக்கள் என்று குறிப்பிடப்படுகிறார். மாக்கள் என்ற சொல் மன உணர்ச்சி இல்லாதவரைக் குறிப்பது; விலங்குப் பண்பு கொண்ட மக்கள் என்ற பொருள்தருவது.
முந்தைய அதிகாரக் குறள் ஒன்றில் (குறள் 410) கல்லாதவனை விலங்கு என்றார். இங்கு கேட்டுப்பெறும் அறிவை நாடாதவனை மாக்கள் என்று கூறி அவன் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என இன்னும் மிகையாக வசை பாடுகிறார் வள்ளுவர்.
மாக்கள் இயல்பு என்ன? அவை நாளும் உண்ணும்; உறங்கும்; உறவுகொள்ளும். அவ்வளவுதான். அதற்குமேல் அவற்றிற்குச் சுவை ஒன்றும் தெரியாது. சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை என்று செவிக்கும் உள்ளத்திற்கும் இன்பம்தரும் ஒன்றையும் அவை அறியா. உணவால் வயிறு நிரப்பும் நாக்குச் சுவை ஒன்றையே அவை எண்ணும். அவைபோன்று வாய்ச்சுவைக்கு முதன்மை கொடுப்போரை மாக்கள் என இக்குறள் கூறுகிறது. அவர்கள் மனிதராய்ப் பிறந்து விலங்கைப்போல் உண்டு வாழ்வோர் ஆவர். விலங்குகள் போல உணவை மட்டும் சுவைத்து உண்டு வாழ்பவர் என்ற கருத்திலேயே மாக்கள் என்று செவியின் சுவை உணரா மாந்தரை இக்குறள் இகழ்ந்துரைக்கிறது.

அறிவுள்ள மக்களாலே உலகம் நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்புவர் வள்ளுவர். செவிகொடுத்துக் கேட்டல் கல்வியறிவு பெற ஒரு சிறந்த வழியாகும். மிகக் கடினமின்றி கிடைக்கும் கேள்விச் செல்வம் பெற முயலாமல், வீணே இரைதேடி அலையும் மனிதரை அவர் வெறுக்கிறார்.
அறுசுவை உணவை உணர்ந்து நுகர்வதில் குற்றமில்லை. ஆனால் செவி உணவை நாடாமல், வாயுணவை மட்டுமே உணவாக எண்ணும் மக்களை அவர் கீழாகப் பார்க்கிறார்.
குறளில் வேறு சில இடங்களிலும் சினப் பார்வை கொண்டு மக்களைப் பேய், பூமிக்குப் பாரம், நடைபிணம் என்று கூறியுள்ளவர்தாம் அவர். அன்புடையார் இரக்கம் கொள்வது போல், அறமுரைப்பார் தீமையைக் கண்டு சினம் கொள்வது இயல்பு. சமுதாய அக்கறையோடு வள்ளுவர் கொண்ட சினம் ஆக்கம் பயப்பதே. மக்களை மாண்புறுத்தும் நோக்கம் மட்டுமே அறநெறியாளரான வள்ளுவர்க்கு உண்டு. அதனால் சிலவேளைகளில் சொல்லின் கடுமை மிகையாகி அதில் இனியது இன்னாது என்று பாராமல், நல்விளைவு ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கடுஞ்சொற்களை ஆள்கிறார். வள்ளுவரின் இன்னா நடையை, திருந்த முயலாத மக்களைப் பண்படுத்தும் நோக்கில் ஆளப்பட்டதாக எடுத்துக் கொள்ளவேண்டும். எப்படியாகிலும் கேள்விச்சுவையை மக்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்ல வருபவர், கேள்விச்சுவை என்ற ஒன்றை அறியாமல், அதனால் கிடைக்கின்ற இன்பங்களை உணராமல், நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பொழுதும் நினைத்துகொண்டு வயிற்றை நிரப்பும் மனிதர்கள் செத்தால்தான் என்ன என்று கேட்கிறார் அவர். விலங்கிலிருந்து மனிதநிலைக்கு உயரவேண்டுமானால் செவிச்சுவையை உணருங்கள் என்கிறார் அவர்.

'மாக்கள்' என்ற சொல் இங்கு வாயுணவால் விலங்கொடு ஒக்கும் மக்களைக் குறிக்கிறது.

செவியால் கேட்டறியும் சுவைகளை உணராது வாயால் நுகரும் இன்பத்தை மட்டுமறியும் மக்கள் செத்தால் என்ன? இருந்தால் என்ன? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கேள்விச் சுவை அறியாது நாளும் தின்றுகொண்டே இருப்பவர்கள் நிலவுலகிற்குப் பாரம் என்னும் பாடல்.

பொழிப்பு

செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள் செத்தாலும் வாழ்ந்தாலும் என்ன?