அவாவினை ஆற்ற அறுப்பின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆசையை மிகவும் போக்குவானாயின்;
பரிப்பெருமாள்: ஆசையை மிகவும் போக்குவானாயின்;
பரிதி: ஆத்மாவுக்கு வினையான ஆசையை விடுப்பானாகில்;
காலிங்கர்: அவாவினை ஒன்றின்கண் வளராது; ஒன்றின் கண் தவிர (ரா; மற்றவையும் இங்குச்) செய்தவினை இறுதிக்கண் கெடும் என்பது கருதி; .
காலிங்கர் குறிப்புரை: ஆற்ற என்பது மிகவும் என்றது.
பரிமேலழகர்: ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின்;
'ஆசையை மிகவும் போக்குவானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆசையை முழுதும் அறுத்து விட்டால்', 'ஆசைகளின் தொடர்பை முற்றிலும் அறுத்தொழித்துவிட்டால்', 'ஒருவன் ஆசையினை முற்றிலும் தொலைக்க வல்லன் ஆயின்', 'பெரு விருப்பினை அஞ்சி முழுதும் நீங்கிவிடுவானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஆசையை முற்றிலும் நீங்கிவிடுவானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.
தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.
பரிப்பெருமாள்: கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கேடில்லாத வினையாவது அறத்தொழில்; அவ்வறம் ஆசையில்லாதார்க்கு முயலாம லெய்தும் என்றது.
பரிதி: தவமான காரியந் தான் நினைத்தபடியே வரும் என்றவாறு.
காலிங்கர்: மற்றதனால் கேடில்லாத தேர்ச்சியாகிய தெளிவுணர்வானது பின்பு ஒரு வருத்தம் இன்றித்தான் நினைந்தாங்கு வந்தெய்தும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தவா வினை என்பது கெடாத விசாரம் என்றது.
பரிமேலழகர்: அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.
'கேடில்லாத வினை தான்வேண்டின நெறியாலே வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்வினை நாம் விரும்பியபடி வரும்', 'கேடற்ற நிலைமை என்னும் பிறவாமை தானாகவே வரவேண்டிய முறையில் வந்து சேரும்', 'அவன் கெடாமைக் கேதுவாய நன்முயற்சி அவன் விரும்பிய வழியிலே தானே ஏற்படும்', 'கெடாமைக்குக் காரணமாகிய வினை தான் விரும்பும் வழியால் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கெடாதற்குரிய செயல்கள் தாம் விரும்பும் வழியால் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|