இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0271



வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:271)

பொழிப்பு (மு வரதராசன்): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

மணக்குடவர் உரை: கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும்.
பூதங்களைந்தும் என்றது அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.

பரிமேலழகர் உரை: வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.
(காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.)

வ சுப மாணிக்கம் உரை: வஞ்சகனது மறைந்த நடத்தையைக் கண்டு ஐம்பூதங்களும் உடம்பினுள்ளே சிரிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

பதவுரை:
வஞ்ச-ஏமாற்றும்; மனத்தான்-உள்ளமுடையவன்; படிற்று-மறைவான; ஒழுக்கம்-ஒழுக்கம்; பூதங்கள்-மண், நீர், எரி, கால், விசும்பு என்ற இயற்கைப் பெரும் படைப்புகள்; ஐந்தும்-ஐந்தும்; அகத்தே-மனத்தில்; நகும்-எள்ளி நகைக்கும்.


வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும்;
பரிப்பெருமாள்: கள்ள மனத்தை யுடையவனது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும்;
பரிதி: தவநெறி செய்கையிலே. அவநெறி செய்வானை;
காலிங்கர்: இங்ஙனம் கூடா ஒழுக்கமாகத் தவநெறி ஒழுகுகின்ற வஞ்ச மனத்தானது பொய்யான ஆசாரத்தினைக் கண்டு;
காலிங்கர் குறிப்புரை: படிற்றொழுக்கம் என்பது பொய்யான ஆசாரம்.
பரிமேலழகர்: வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை;

'கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வஞ்சம் பொருந்திய மனமுடையானது பொய் ஒழுக்கத்தைக் கண்டு', 'துறவறத்தை மேற்கொண்டு கபடமாகக் கள்ள வாழ்க்கை நடத்துகிறவனைப் பற்றி', 'வஞ்சகம் பொருந்திய மனத்தை யுடையவனது மறைந்த தீய ஒழுக்கத்தை', 'வஞ்சனை பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும்.
மணக்குடவர் குறிப்புரை: பூதங்களைந்தும் என்றது அவையிற்றின் காரியமாகிய பொறிகளை.
பரிப்பெருமாள்: தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அதனுள்ளே நகாநிற்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பூதங்களைந்தும் என்றது அவையிற்றின் காரியமாகிய பொறி. பொறிகளறியவே அவற்றின் குறிப்பினானே பிறராலறியப்படும். இது பிறரறியா தொழியினும் தானே யறிவிக்கு மென்றது.
பரிதி: ஐந்து பூதமும் நகைக்கும் என்றது;
பரிதி குறிப்புரை: அது எது எனில், இவன் அவநெறி செய்ய நாம் நரகத்திலே வீழ ஏதுவானோம் என்பதால் என்றவாறு.
காலிங்கர்: யாவரும் அச்சம் கூறுவர்; மற்று அஃதன்றித் தம்முள்ளே இகழ்ந்து சிரிப்பதுஞ் செய்வார்கள் என்றவாறு.
பரிமேலழகர்: உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்.
பரிமேலழகர் குறிப்புரை: காமம் தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும், அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப் 'படிற்று ஒழுக்கம' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.

'உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'நகும்' என்றதற்கு பரிதி கூறும் காரணம் பொருந்தி வரவில்லை. ‘பூதங்கள் ஐந்தும்’ என்பதற்கு யாவரும் எனக் காலிங்கர் உரைக்கிறார்; மேலும் குறள் 'கரந்து ஒழுகுபவன்' எனக் கூறியிருக்க பிறர் அக்கூடா ஒழுக்கினை அறிந்து கொண்டனர் என்பதாக உள்ள அவர் உரை ஏற்காது.

இன்றைய ஆசிரியர்கள் 'அவனோடு கலந்து நிற்கும் ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும்', 'அவன் தேகத்திலுள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள் சிரித்து ஏளனம் செய்யும்', 'அவன் உடம்பின் பகுதிகளாய ஐந்து பூதங்களுந் தமக்குள்ளே பார்த்துச் சிரிக்கும்', 'உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (பரிகசிக்கும்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு, பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்பது பாடலின் பொருள்.
ஐந்து பூதங்கள் எவை, அவை நகும் என்று ஏன் சொல்லப்பட்டது?

கள்ள ஒழுக்கம் கொள்வானது குற்றங்களையும் அவற்றை மறைக்க அவன் செய்யும் வழிமுறைகளையும் கண்டு ஐந்து பூதங்களும் சிரிக்கும்.

வஞ்சனை மனம் உடையவனது பொய்யொழுக்கத்தைக் கண்டு, ஐந்து பூதங்களும் தமக்குள்ளே சிரித்துக் கொள்ளும்.
மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி தீயநெறியில் ஒழுகுதலைப் 'படிற்றொழுக்கம்' என்கிறார் வள்ளுவர். படிற்றொழுக்கம் என்பது பொய்யொழுக்கம் எனப் பொருள்படும். அவ்விதம் ஏமாற்றும் எண்ணத்துடன் தீயநெறியில் ஒழுகுபவன் தன் நெஞ்சாலேயே இகழப்படுவான் என்கிறது பாடல்.
பிறர் அறியாமல் தீங்கு செய்வதற்கு புறக்கோலத்தைப் பயன்படுத்துவது வஞ்சம் ஆகும். தாம் செய்வது மற்றவர்களுக்குத் தெரியாது என்று கருதி, நல்லவன் போல நடித்து, மற்றவரை ஏமாற்றி, கரந்த உள்ளத்தோடு மறைவான தீய ஒழுக்கங்களைப் பேணி வாழ்பவர்கள் வஞ்சமனத்தார் ஆவர். இவரது பொய்யொழுக்கம் புறத்தார்க்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் அறியாமல் உலகில் எதுவும் நடக்க இயலாது. இவனது குற்றங்களைக் காணும் ஐந்தும் அகத்தே 'அட மூடனே! யாருக்கும் தெரியாதென்றா செய்கிறாய்' என்று அவனது பொய்யொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற வழிகளையும் அறிந்து, தம்முள்ளே அவை இகழ்ச்சிக் குறிப்புடன் எள்ளலாய்ச் சிரிக்குமாம். புறக்கோலம் பூண்டு கள்ள வழி செல்வோரைப் பார்த்து இயற்கை சிரிக்கத்தான் செய்யும்.
ஐந்து பூதங்கள் என்பதற்கு ஒருவனது மனச்சான்று என்றும் பொருள் கொள்ளலாம். கூடாஒழுக்கதினரைப் பார்த்து அவனது மனச்சான்று நகைக்கும் என்பது கருத்தாகும்.

இங்கு சொல்லப்படும் வஞ்சமனத்தான் தவவேடம் தரித்துத் துறவியாகக் காட்சியளித்து மனத்திற்குள் வஞ்சகமாக நடந்துகொள்ளுகின்றவன் எனவும் மனத்தைச் சென்ற இடத்தெல்லாம் செலுத்தும் மன உறுதி இல்லாத போலித் துறவியினது படிற்றொழுக்கம் பற்றியது இப்பாடல் என்பர்.
துறவிகளுக்குப் பொதுவாக மக்களிடத்தில் நல்ல மதிப்பு உண்டு. ஆதலால் முறையாக வாழும் திறனற்றவர்கள் உலகியல் வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தவவேடத்தினை மேற்கொள்கின்றனர். துறவுகொண்டவர் போன்று வெளியில் காட்டி, உள் நிலையில் பொருந்தா ஒழுக்கம் புரிகின்ற போலிமை நிலைகளை எள்ளி நகையாடத்தக்கதாக வள்ளுவர் இங்கு சுட்டிக் காட்டுகிறார்.

ஐந்து பூதங்கள் எவை, அவை நகும் என்று ஏன் சொல்லப்பட்டது?

ஐந்து பூதங்கள் எவை, அவை ஏன் நகும் என்பதற்கான காரணங்களாகக் கிடைக்கப்பெறும் விளக்கங்கள்:

  • உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்'.
  • பூதங்களைந்தும் என்றது அவையிற்றின் காரியமாகிய பொறி. பொறிகளறியவே அவற்றின் குறிப்பினானே பிறராலறியப்படும். இது பிறரறியா தொழியினும் தானே யறிவிக்கு மென்றது.
  • தவநெறி செய்கையிலே. அவநெறி செய்வானை ஐந்து பூதமும் நகைக்கும் என்றது எது எனில், இவன் அவநெறி செய்ய நாம் நரகத்திலே வீழ ஏதுவானோம் என்பதாம்.
  • நிலம் நீர் தீ காற்று வானம்-ஐம்பூதம். ஐம்பூதச் சேர்க்கையே இவ்வுடம்பு. எல்லோரும் வெளியே 'சாமியாராய்' நடிக்கப் பயன்படுவது உடம்பேயாதலால், அவ்வுடம்பின் உருவாக்கத்திற்கு அடிப்படையான பூதம் ஐந்தும் அவனுள்ளேயிருந்து 'அட கயவனே' எனச் சிரிக்குமாம்.
  • வெளி, வளி, நீர், நெருப்பு, மண் என்னும் பூதங்கள் சடமாதலின் அவை அறிதல் இல்லை. ஆகவே, அவற்றினைப் பற்றி எழும் புலன்களைக் கொள்க.
  • ஐம்பெரும் பூதங்கள் சடமாகலின் அவை சான்றாதல் கூடாமையின், அவற்றின் அதிதேவதைகளைக் கொள்க. பிருதிவிக்குப் பிரமனும் அப்புவிற்கு அரியும், தேய்விற்கு அரனும், வாயுவிற்கு மகேசனும், ஆகாயத்திற்குச் சதாசிவனும் அதிதேவதைகளாம் என்க. ஆகவே வஞ்சமனத்தான் படிற்றொழுக்கங் கண்டு ஐம்பூதங்களின் அதி தெய்வங்கள் நகும் என்பர்.
  • உள்ளே வெறுப்பையும் பகையையும் வைத்து அன்பும் அருளுடையர் போல நடந்தால் உள்ளிருக்கும் வெறுப்பையும் பகையையும் தாங்க மாட்டாது உடல்நலம் கெட்டுப் போதலால் ஐம்பூதங்களும் நகும் என்றார்.
  • பொய் ஒழுக்கத்தைக் கண்டு அவனோடு கலந்து நிற்கும் ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும்
  • ஐந்து பூதங்களும் 'அகத்தே நகும்' என்றதனால் அவனுடைய மனச்சாட்சியே அவனை ஏளனம் செய்யும் என்பது கருத்து.
  • மறைந்த தீய ஒழுக்கத்தை, அவன் உடம்பின் பகுதிகளாய ஐந்து பூதங்களுந் தமக்குள்ளே பார்த்துச் சிரிக்கும்.
  • மண், நீர், தீ வளி வான் என்ற ஐம்பூதங்களும் அறியா வினையில்லை யாகலின், நான்கும் அறியாததனை வான் அறிந்து விடும். ஐந்தன் கூறுகளே உடலின் ஐம்பொறிகளும் அவை உடலுள் உள்ள மனவொழுக்கத்தை அறியும் என்பது.
  • தங்களையே ஏமாற்றுவதாகக் கருதி ஐம்பூதங்களும் உடலுக்குள் நகைக்கும்
  • இவ்வைம் பெரும்பூதங்களாலானதே உடம்பு. மனவலிமையின்மையால் தீயவொழுக்கம் ஒழுகினவன் பின் தானே வருந்துவானென்பதற்குப் 'பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்' என்றார்.
  • இது மறைவொழுக்கத்திற்குத் தெய்வச்சான்றும் மனச்சான்றும் மட்டுமன்றிப் பூதச் சான்றும் உள்ளதெனக் கூறியவாறு.
  • பூதங்கள் ஐந்தின் நுண்வடிவாகியசுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தும் இவற்றின் உதவியால் தொழிற்படும் வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் ஐந்தும், இவற்றால் உருவமடைந்து அவாவும் மணமும் ஆகிய இம்முடிப்பினையே பூதங்கள் ஐந்தும் என்றார். எனவே, அவாவுகிற மனமே அவன் வேடத்தைக் கண்டு, அவனையே வஞ்சித்ததோடல்லாமல், அவனை இகழ்ந்தும் பழிக்கும் என்பதனை அகத்தே நகும் என்று கூறினார். இயல்புக்கு மாறான செயலை, இயற்கையாகிய பூதங்கள் கண்டு அவன் இழிநிலையை இகழ்ந்து பரிகசிக்கின்றன என்ற உண்மையும் கூறினார்.
  • ஐம்பொறிகளாகிய மெய், வாய்,கண், மூக்கு, செவி என்பவற்றிற்கு முறையே மண், நீர், தீ, காற்று, ஆகாயம் தன் மாத்திரைகள். அதனால், பொறிகளைப் பூதங்கள் என்றார்.
  • கால் (நிலம்), குடல் (நீர்) நுரையீரல் (தீ) கழுத்து (காற்று) தலை (வெளி அல்லது விண்) என ஐம்பூத அமைவு கூறுவர். திருவள்ளுவர் உடலில் ஐம்பூதம் இடமாகி இருப்பதைக் கூறினார். மாந்தர் குடியிருக்கும் மனையும் அடி முதல் முடிவரை ஐம்பூத அமைவு கொண்டுள்ளமையை அறியலாம். கீழே மண்; அதன்மேல் நீர்; அதன்மேல் தீ; மேல் வெளி. வெளி இனி ஊழ் என்பது உலகத்தியற்கை என்று தெளிவுபடுத்துவார்.
  • மனச்சான்று ஒருவனை எள்ளி நகைக்கும்போது ஒருவன் கண்ணுக்கும் செவிக்கும் மூக்கிற்கும் நாக்கிற்கும் உடம்பிற்கும் இன்பமாக என்னென்ன தேடித் தரினும் அவை இன்பம் நல்கா; அறம் ஒன்றே மனச்சான்றை மகிழ்விக்கும்; அந்த மனச்சான்றின் மகிழ்ச்சியே உண்மையான இன்பமாகும்.
  • நமது உடல் விண், மண், காற்று, நெருப்பு, நீர் ஆகிய ஐம்பூதச் சேர்க்கையே. இறைவன் அவ்வைம் பூதங்களுள் விரவியுள்ளான். தாம் செய்யும் தவற்றினை ஊரார் அறியாவிட்டாலும் தன் உள்ளத்துள் உறையும் இறைவன் அறிவான். (மனச்சான்றே இறைவன்).
  • தவம் செய்வோருக்கு நிறைநலம் மிக்க ஒழுக்கம் வேண்டும். சிலர் பழக்கத்தினால் புறத்தேயுள்ள ஐம்பூதங்கள் அதாவது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவற்றில் உடலைப் பழக்கி அவற்றினாலாய துன்பத்தினில் வெற்றி பெறுவர். அதாவது நீரில் பலகால் தோய்தல், நிலத்தில் கிடத்தல், நெருப்பில் நடத்தல், விண்வழிச் செல்லுதல், வளியின் திசையினை மாற்றுதல் ஆகிய சாதனைகளில் வெற்றி பெறுவர். ஆயினும் அகத்துறுப்புகளில் ஒட்டியிருக்கும் ஆசை நீங்காது வாழ்வர். இவர்தம் எளிய நிலையினைப் பார்த்து அவர்தம்முன்னே ஒன்றித்துக் கலந்து நிற்கும் ஐம்பூதங்கள் நகைக்குமாம்.
  • போலித் துறவியோடு எப்போதும் இருக்கும் ஐந்து பூதங்களும் -ஐந்து புலன்களும் -அப்போலித் துறவிகளின் தீய ஒழுக்கத்தைப் பார்த்துத் தங்களுகுள்ளேயே நகைத்துக் கொள்ளுமாம். புறத்தார்க்குப் போலித் துறவிகளின் செயல்கள் தெரியாவிட்டாலும் அத்துறவியின் உடலோடு உறையும் ஐந்து பூதங்களும் துறவியைப் பார்த்து நகைக்கும் என்பார்.
  • துறவியின் நெஞ்சில் கள்ளத்தனம் கூடாது. இப்படித் துறவிவேடம் தரித்தவன் நெஞ்சில் கள்ளத்தனம் புகும் என்றால் அவனுக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்ற பூதங்கள் ஐந்தும் தமக்குள் சிரித்துக் கொள்ளும். பூதங்கள் நல்லவை. வல்லமை மிக்கவை. இவற்றின் சேர்க்கையால் தான் மனிதனுக்கு உடம்பு வாய்த்துள்ளது. உடம்பினுள்ளும் இருக்கிற பூதங்கள் நல்லதையே விரும்புகின்றன. உடம்பை வைத்து நல்லதே நினைக்க வேண்டும். நல்லதையே செய்ய வேண்டும்.
  • பூதங்கள் ஐந்து என்று வள்ளுவர் குறிப்பிடும்-நிலம் நீர் வளி தீ வான் ஆகியன முறையே திண்மம் (Solid) நீர்மம் (liquid) வளிமம் (Gas) மின்மம் (Plasma state) வெறுமம் (n) எனும் இயற்பியலில் பொருள் நிலைகள்.
  • நிலம் நீர் தீ காற்று விண் என்று பேசப்படுகின்ற ஐந்தும் இயற்கையின் கூறுபாடுகள்-ஐந்து பூதங்கள் ஆகும். இந்த ஐந்தினாலும் ஆனதுதான் உடம்பின் அமைப்பு. இவை அறியாத நிகழ்ச்சி இல்லை. எனவே நாம் செய்யும் அனைத்தும் அவைகளுக்குத் தெரியும் அன்றோ? வஞ்சகமான செயல் செய்பவனுக்கு இது புரியாமல் போயிற்றே. 'படிற்றொழுக்கம்' செய்கின்றானே! யாருக்கும் தெரியாதென்று எண்ணி நடந்து கொள்ளுகின்றானே! என அவன் அறியாமலே தாம் அறிந்துகொண்டு சிரிக்கின்றன என்பதைத்தான் 'அகத்தே நகும்' என்றும் சுருக்கமாகக் குறிக்கின்றார்
  • ஒருவனின் உண்மையான ஒழுக்கத்தை அவனே அறிவான். உலகின் கண்களில் இருந்து முழுமையாகவே தன் தீயஒழுக்கத்தை ஒருவன் மறைத்துவிடமுடியும். அந்நிலையில் தீய ஒழுக்கத்தின் எந்த சமூக விளைவையும் அறியாமல் அவனால் வாழ்ந்துவிட முடியும். அப்படியானால் அவன் தப்பிவிடமுடியுமா? அவன் ஒழுக்கங்களை அறியக்கூடிய, அதன் இன்பதுன்பங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அவனுடன் உள்ளது. அவன் உடல். அது அறியும். அது அச்செயல்களின் எல்லா எதிர்விளைவுகளையும் அது அனுபவிக்கும். பூதங்கள் ஐந்தும் உடலெனும் வடிவம் எடுத்துள்ளது.
  • நிலம்தீ, நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்... (தொல்.1589) நிலம், தீ, நீர், காற்று வானம் -என்பன ஐம்பெரும்பூதங்கள். இந்த உலகம் அனைத்தும் இவ் ஐம்பூதங்களின் கலப்பால்-கூடுதல், குறைவு, கலத்தல், மாறியமைதல் என்ற பல்வேறு கலவைகளால் ஆனவையே. இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளையும் இவை ஐந்தினுட்பட்ட சிலவாகவோ, பலவாகவோ பிரித்துவிடலாம். மனிதனும் இந்த ஐந்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பொருளே. உடல் மண்ணாலானது. இதில் வளி (காற்று, வாயு) ஒளி (சூடு, பித்தம்) குளிர் (நீர் சீதளம்) இதனை வாதப்பகுதி, பித்தப்பகுதி, ஐயப்பகுதி என்பர். இவை நான்கும் தவிர்த்து, இவை கலந்தொன்றாகும் போது பிறக்கும் உயிர் அருவமாய், வானம் எனப்படும். இவ்வாறு ஐம்பூதங்களாலானவையே எல்லா உயிர்களும் என்றாலும், மக்களிடம் மனம்-அறிவு என்ற ஒன்று கூடுதலாகவுளது. எனவே ஐம்பூதங்களால் ஆனதில் உள்ள மனம் -தானறி குறப்படிநவை ஐந்தும் அறிந்தே தீரும். அதனால், வஞ்சக மனமுடையவன், அதனை உலகத்திற்கு மறைத்தாலும், அவனுள்ளிருக்கும் இவ் ஐம்பூதங்கள் அறிந்தே தீரும். அவ்வாறு அறியும்போது, இம் மனிதன் மறைப்பதை உள்ளுள் அறியும் அவ் ஐம்பூதங்கள் சிரிக்குமாம். வெளியே தெரியாமல் ஒருவன் செய்வதை நாம் அவனறியாது அறிய நேர்ந்தால் அதை பார்த்த நமக்குச் சிரிப்பு வராதா?

பெரும்பாலோர் 'வஞ்சனை பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும்' என்ற பொருளில் உரை செய்தனர்.
பரிமேலழகரது 'உலகத்துக் களவு உடையார் பிறர் அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள் சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின், 'அகத்தே நகும்' என்ற பொருளே சிறந்து நிற்கிறது.

நிலம், தீ, நீர், காற்று வானம் என்ற ஐந்து பூதங்கள் ஒருவனது செயல்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருப்பதால், அவன் மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் செய்கிறோம் என்று எண்ணி தீச்செயல்களில் ஈடுபட்டால் பூதங்கள் ஐந்தும் தமக்குள்ளேயே சிரிக்கும்.

வஞ்சக மனமுடையானது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு, ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூடாஒழுக்கம் உடையவனது செயல்களை ஐம்பூதங்களினின்றும் மறைக்க முடியாது.

பொழிப்பு

வஞ்சகனது மறைந்த ஒழுக்கத்தைக் கண்டு ஐம்பூதங்களும் தம்முள்ளே சிரிக்கும்.