இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0230



சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை

(அதிகாரம்:ஈகை குறள் எண்:230)

பொழிப்பு (மு வரதராசன்): சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.

மணக்குடவர் உரை: சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து.
இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.

பரிமேலழகர் உரை: சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது.
(பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஓர் ஏழைக்கு உதவ முடியாத போது விரும்பாச் சாவும் விரும்பத்தகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சாதலின் இன்னாதது இல்லை; அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது .

பதவுரை:
சாதலின்-இறத்தலைவிட; இன்னாதது-கொடியது; இல்லை-இல்லை; இனிது-நன்றானது; அதூஉம்-அதுவுங்கூட; ஈதல்-கொடுத்தல்; இயையாக்கடை-முடியாதவழி.


சாதலின் இன்னாதது இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாதலின் மிக்க துன்பமில்லை;
பரிதி: மரணம் என்று சொல்லுகிறது பாரமிகுதி;
காலிங்கர்: இவ்வுலகத்து ஒருவர் இனிது வாழாது இறந்துபடுதலின் இன்னாங்குடையது இல்லையன்றே;
பரிமேலழகர்: ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை;

'சாதலின் மிக்க துன்பமில்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுக்குச் சாவதுபோலத் துன்பம் தருவது வேறில்லை', 'சாவைக் காட்டிலும் துன்பம் தரக்கூடிய நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை', 'சாவது போலத் துன்பந்தரத் தக்கது இல்லை', 'சாதலைவிடத் துன்பம் தருவது வேறொன்றும் இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சாதல்போல் விரும்பத்தகாதது வேறு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

இனிததூஉம் ஈதல் இயையாக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.
பரிதி: அதிலும் நன்று கொடாமல் வீணாள் கழித்தல் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுவும் இனிது பிறர்க்கு ஒன்று கொடுத்தல் கூடாத இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது.
பரிமேலழகர் குறிப்புரை: பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.

'அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் ஏழைக்குக் கொடுத்துதவ இயலாத இடத்து அச்சாதலும் இனியதாம்', 'ஈகைக் குணம் இல்லாதவனைப் பற்றிய அந்தச் சேதிகூட இன்பமுண்டாக்கும்', 'அதுவும், வறியவர்க்கு விரும்பிய தொன்றைக் கொடுக்க முடியாத இடத்தாயின் நல்லதே', 'அத்தன்மைத்தாகிய சாதலும் வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாத வழி இனிதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதுவும் இனிதாகிறது இரந்துவந்தவர்க்கு உதவ முடியாத போது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சாதல்போல் விரும்பத்தகாதது வேறு இல்லை; அதூஉம் இனிதாகிறது இரந்துவந்தவர்க்கு உதவ முடியாத போது என்பது பாடலின் பொருள்.
'ஈதல் இயையா' குறிப்பது என்ன?

சாதல் எவர்க்கும் விரும்பத்தகாதது; இரந்துவந்தவர்க்கு கொடுக்க இயலாமல் இருக்கும் நிலையில் ஒருவர்க்கு அந்தச் சாவும் விரும்பத்தக்கதாகும்.
உலகத்து வறியவர் பசி தீர்ப்பது தனி ஒருவரால் இயலாதது. அரசு இப்பணியை மேற்கொள்கிறது. ஆதரவற்றோர், முதியோர் ஆகியோரைப் பேணுவதற்குக் காப்பகங்கள் அரசு உதவியுடன் இயங்குகின்றன. பல உலக அமைப்புகளும் தனியார் அறக்கட்டளைகளும் இப்பணியில் ஈடுபட்டு தொண்டு செய்கின்றன. இவையெல்லாம்கூட தேவையுள்ள அனைத்து இடங்களுக்கும் செல்ல முடிவதில்லை; அனைவருக்கும் உதவ முடிவதில்லை. ஆயினும் தனி மனிதர் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் ஈகையில் அதாவது பசிப்பிணி தீர்ப்பதில் அக்கறை காட்டவேண்டும். இது அடிப்படை மனிதமாண்பு.
வறுமையால் துயருற்றுக்கொண்டிருக்கின்றவனுக்கு உதவ ஒருவன் விழைகிறான். ஆனால் அப்படி விரும்புகிறவனிடம் ஆள், கருவி, பணம், சொத்து போன்ற எந்தவிதமான வளமும் இல்லை, மனமிருந்தும் செயலற்றுநிற்கும் நிலையில், பசித்திருப்பவன் அல்லல் படுவதைப் பார்த்துப் பொறுத்துக் கொண்டிருப்பதைவிட செத்துப் போய்விடலாம் என அவனுக்குத் தோன்றுகிறது. வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் மிகக் கொடுமை செய்யும். ஈகை நெஞ்சுடையவனுக்கு இறப்புத் துன்பத்திலும் ஈயாத்துன்பம் பொறுத்தற்கு அரியதாதலால், சாதல் அவனுக்கு இனிதென்று இக்குறள் கூறுகிறது.

மாந்தர் வாழ்வில் தன்னுயிர் நீத்தல் எப்பொழுது நிகழும்? தன் மானம் கெட நேரும்போது, மனச்சான்று உறுத்தும்பொழுது, காதல் தடை உண்டாகும்போது, இன, நாடு, மொழிப் பற்றுக் கொண்டவர்கள் போராட்டம் தோல்வியை எதிர்கொள்ளும்போது போன்ற இவ்வேளைகளில் சாதல் இனிது என முடிவுக்கு வருவர். இப்பாடல் ஈயமுடியாத நிலை வரும்பொழுது தன்னுயிர் நீக்கலாம் என்கிறது. வறியவர்க்கு உதவமுடியாத வேளைகளில் உயிர்விட்டவர்கள் பற்றி பழம்நூல்களும் குறிப்பிடுகின்றன.
ஆபுத்திரன் அமுத சுரபி, உணவு கேட்டு வருவார் இல்லாமையால் தானே உண்டு வாழல் அறமன்று என்று உயிர்விட்டான் என்பது மணிமேகலைச் செய்தி.
குமணன் என்ற வள்ளல் குணம் கொண்ட அரசன் தன் தம்பியின் சூழ்ச்சியால் நாடிழந்து காட்டில் மறைந்து வாழ்ந்தான். அவன் தலைக்கு விலை அறிவித்திருந்தான் தம்பி. பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் தான் வறுமையுற்ற நிலையில் ஈகையாளன் குமணனிடம் ஏதாவது பெறக் கருதி காடு சென்று அவனைச் சந்தித்தார். புலவரின் வறுமை நிலை கொடியதாய் இருந்ததால் அவர் குமணனின் தற்போதைய பொருள்நிலையைக் கூட சிந்தியாமல் அவனிடம் இரந்து நின்றார். புலவர்க்குக் கொடுப்பதற்கு தன்னிடம் பொருள் இல்லையே என்று ஏங்கியவன், பிறகு தன்னுடைய தம்பி தன்னுடைய தலைக்கு விலை கொடுப்பதாகக் கூறியிருத்தலை நினைவு கூர்ந்தவனாய் தன்னுடையத் தலையைக் கொய்து கொண்டுபோய் தம்பியிடம் கொடுத்தும் பொன் பெற்றுக் கொள்ளுமாறு கூறி சாத்தனார் கையில் வாளைத் தந்தான். ஈய முடியாது இருக்கும் நிலையில் சாதல் இனிது என்பதற்கு இக்கதை சிறந்த காட்டாகும்.
இன்னொரு கதையில் திருநின்றவூர் காளத்தி வள்ளல் பொருள் எல்லாம் இழந்த நிலையில் புலவர் ஒருவர் இரந்து நிற்க, கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று செய்வதறியாது, இனி வாழ்வென்ன என்று, அங்கிருந்த பாம்புப் புற்றுக்குள் கையை விட்டார். அதில் இருந்த பாம்பு அந்தக்கரத்தில் மாணிக்கக் கல்லைக் கொடுத்தது. அந்த மாணிக்கத்தை அவர் புலவர்க்கு ஈந்தாராம்,
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால், தன் மெய் துறப்பான் மலை (கலித்தொகை 43:26 பொருள்: மிடியாலே பொருளின்மையைச் சொன்னார்க்கு அப்பொருளை [அவர்க்கு] நிறைத்தலாற்றாதபொழுது தன்மெய்யைத் துறக்குமவன்மலை) என்றும் ....ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின், சாதலும் கூடுமாம் மற்று (கலித்தொகை 61: 11 பொருள்: தம்பால் இரந்தவர்களுக்கு யாதானு மொன்றை முகமாறாது ஈதலைநடத்தாது உயிர் வாழலிற் பின்னைச் சாதலுங்கூடும்) என்றும் கலித்தொகை ஈதல் இல்லாது வாழ்தலின் சாதல் பற்றிக் கூறும்.

கொடுப்பதற்கு இல்லை என்ற நிலை வந்தால் சாவது இனிமையானது என்கிறது இப்பாடல். இந்தக் கூற்றில் கடுமை மிகையாகத் தோன்றுகிறது. கொடுக்கமுடியவில்லை என்பதற்காக சாவது என்பது உலக நடைமுறை வாழ்வோடு பொருந்துமா?
'அறநெறி உணர்ந்தவர்கள் அவ்வாறு ஈயாமல் வாழ முடியாது. சாவது போல் துன்பமாவது வேறு இல்லை; ஆனால் வறியவர்க்கு ஈகையால் உதவ முடியாதபோது சாவதே இனியதாகிவிடும்; இவ்வாறு உணர்வதே அறவோர் இயல்பு' என விளக்கம் அளிப்பார் மு வரதராசன்.
'ஈத்து உவந்து வாழும் வகையில் முயற்சி உடையவராக வேண்டுமாம். சாக வேண்டுமென்பது கருத்தன்று. 'இதைச் செய்ய முடியாவிட்டால் சாகலாம்' என்றால் எவ்வாறாவது செய்து முடிக்க வேண்டுமென்பதே கருத்து. திருவள்ளுவர் மொழிநடை உலகப் பேச்சு மொழிநடையை ஒட்டியிருக்கும்' என்பது தமிழண்ணல் விளக்கம்.
'வறியவன் விரும்பிய ஒன்றைக் கொடுக்க முடியாத நிலையில் அச் சாவும் இன்பமேயாம் (என்று எண்ணத் தோன்றும்)' என்பதும் 'இரந்து வந்தவன் இனிய முகத்தைக் காணும் அளவும், இரக்கப்படுதலும் துன்பமாகவே இருக்கும்' என்று வண்மையர் உண்மையியலை வள்ளுவர் சுட்டுதலை அறிந்து கொள்ளல் (224) பயன் செய்யும்' என்பதும் இரா இளங்குமரன் தரும் விளக்க உரைகளாம்.

'ஈதல் இயையா' குறிப்பது என்ன?

'ஈதல் இயையா' என்றதற்கு இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாத, கொடாமல் வீணாள் கழித்தல், பிறர்க்கு ஒன்று கொடுத்தல் கூடாத, வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாத, வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத, வறுமையால் வந்து இரந்தவர்க்குப் பொருள் இசையாத, ஈதல் இயையாத, ஈதல் இயலாத, ஓர் ஏழைக்கு உதவ முடியாத, ஏழைக்குக் கொடுத்துதவ இயலாத, ஈகைக் குணம் இல்லாதவனைப் பற்றிய சாவுச் சேதி, வறியவன் விரும்பிய ஒன்றைக் கொடுக்க முடியாத, வறியவர்க்கு விரும்பிய தொன்றைக் கொடுக்க முடியாத, வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாத, ஓர் எளியவன் ஓரு பொருளைக் கேட்க அப்பொருளைத் தம்மால் கொடுக்க முடியாத, பசித்தவனுக்கு ஒன்று கொடுக்க முடியாத, வறியார்க்கொன்றீதல் இயலாத, பிறன் யாசிக்கும் போது அவனுக்கு உதவி செய்ய முடியாத, ஈதல் இயலாத என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'ஈதல் இயையா' என்பதற்கு ஈதலுடன் மனம் ஒவ்வாமை என்றும் பொருள் கொள்ளமுடியும். அதுதான் பொருள் என்றால் 'இனிது' தவிர்த்த வேறு சொற்கள் கடுநடையில் பெயப்பட்டிருக்கும். 'இனிது' என்ற சொல்லாட்சியால் 'ஈதல் இயையா' என்ற தொடர் ஈதல் இயலாமை என்ற பொருள் தருகிறது. இங்கு ஈதல் இயலாமை என்பது பொருளிருந்தும் மனம் இல்லாமையைக் குறிக்காது மனமிருந்தும் கொடுக்க இயலாத வறுமையைச் சொல்லும். எனவே 'ஈதல் இயையா' என்பது ஈதல் முடியாமை பற்றியதாகத்தான் இருக்க முடியும்.

சாதல்போல் விரும்பத்தகாதது வேறு இல்லை; அதுவும் இனிதாகிறது இரந்துவந்தவர்க்கு உதவ முடியாத போது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வறுமைத் துயர் நீக்கும் ஈகைசெய்ய முடியாத நிலை மிகக் கொடியது.

பொழிப்பு

சாவதுபோலத் விரும்பத்தகாதது வேறில்லை. இரந்துவந்தவர்க்கு கொடுத்துதவ முடியாதபோது அச்சாதலும் இனியதாம்