இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0184



கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:184)

பொழிப்பு (மு வரதராசன்): எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.



மணக்குடவர் உரை: ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

பரிமேலழகர் உரை: கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவன் நேரே எதிரே நின்று, கண்ணோட்டமின்றிச் சுடுசொற்களைக் கூறினாலும் கூறுக. அவன் இல்லாத இடத்தில் அவனைப் பற்றிய குற்றங்களைக் கூறாதொழிக. புறங்கூறலின் பின்விளைவு, துன்பமாக அமையும் என்பது கருத்து. பின்னோக்காச் சொல்- நேற்று முன் தினம் பழி சுமத்துபவரிடம் அன்பொழுகப் பேசிய சொற்களை நினையாது கூறல். புறங்கூறல் மூலம் நட்பு கெடுதலால், பின் முகம் நோக்கி வாழ முடியாமை வரம் என்பதும் கருத்து.



பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்நின்று கண்ணறச் சொல்லினும், முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க.

பதவுரை: கண்நின்று-கண்ணெதிரே நின்று; கண்அற-கண்ணோட்டம் இன்றி, இரக்கமில்லாமல்; சொல்லினும்-சொன்னாலும்; சொல்லற்க-சொல்லவேண்டாம்; முன்-எதிரில்; இன்று-இல்லாமல்; பின்நோக்காசொல்-பின்விளைவினைக் கருதாத சொற்கள், பின்பு முன்னே நின்று எதிர் முகம் நோக்க முடியாத சொல்.

கண்நின்று கண்ணறச் சொல்லினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்;
பரிப்பெருமாள்:ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்;
பரிதி: ஒருவர் முகம் பார்த்துத் தோஷம் சொல்வது நன்று;
காலிங்கர்: ஒருவனிடத்து நின்று வைத்துக் கண்ணோடங்கெடச் சில சொல்லுவானாயினும்;
பரிமேலழகர்: ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்;

'ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை 'கேட்டவர்கள் கண்ணை மூடிக்கொள்ள' என்ற பொருள் தருவது.

இன்றைய ஆசிரியர்கள் 'எதிரே கடுமையாகச் சொல்லினும் சொல்லலாம்', 'ஒருவன் கண் எதிரே நின்று கண்ணோட்டம் அறப் பேசினாலும்', 'ஒருவனுக்கு முன்னால் நின்று தாட்சண்ணியமில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை', 'ஒருவன் கண்முன்பு நின்று கடுஞ்சொல் சொல்லுவதில் கூடத் தவறில்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
பரிப்பெருமாள்: பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
பரிதி: அவனைக் காணாதவிடத்தில் புறஞ் சொல்லவொண்ணாது என்றவாறு.
காலிங்கர்: சொல்லாது ஒழிக; யாதினை எனில் ஒருவன் தன் முன்பிலனாகக் கண்டு மற்றவனைப் பின்பு முகநோக்கத் தகாத சொல்லினை என்றவாறு.
பரிமேலழகர்: அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.

'பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத/பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆளில்லாத போது கோள் சொல்லற்க', 'அவன் எதிரே நின்று பின் முகத்தில் விழிக்க முடியாத சொல்லைக் கூறாதொழிக', 'ஆனால் அவன் உனக்கு முன்னால் இல்லாதபோது பின்னாலுண்டாகும் தீங்குகளை நினைத்துப் பார்க்காமல் கோள் சொல்லக்கூடாது', 'அவன் இல்லா இடத்துப் பின் விளைவு கருதாது பழிப்புரை கூறுதல் தகாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும், பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம் என்பது பாடலின் பொருள்.
'முன்இன்று பின்நோக்காச் சொல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

எதுவாயிருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுக. நாளைக்கு அவன் முகத்தில் முழிக்கவேண்டுமே!

கடுஞ்சொற்களே ஆனாலும் ஒருவன் முகத்துக்கு எதிரே சொல்லுக; ஆனால் பின்னர் அவனை முகம் நோக்கமுடியாத வண்ணம் அவன் இல்லாத இடத்து இகழ்ந்து கூறுதல் வேண்டாம்.
ஒருவரது நலம் கருதுவார் அவர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என அறிகிறார். அவரைத் திருத்த வேண்டும் என உந்துதல் உண்டாகிறது. என்ன செய்ய வேண்டும்? அவரை நேரில் கூப்பிட்டு அவரைப் பற்றி எதைச் சொல்ல எண்ணுகிறாரோ, அதை இரக்கமின்றி முகத்தெதிரேலேயே கடிய சொற்களால் உரக்கச் சொன்னாலும் குற்றமில்லை; காலப் போக்கில் தன் குறையை உணர்ந்து அவர் திருந்துவார். ஆனால், அவரைத் திருத்தும் நன்னோக்கிலேதான் என்றாலும், பின்னர் அவரை முகத்துக்கு முகம் பார்க்கமுடியாதபடி, அவர் இல்லாதபோது, அவரை இகழ்ந்துரைக்க வேண்டாம் என்கிறது பாடல்.
இவ்விதம் குற்றம் கண்டு பொங்கி நேரடியாகவே மனம் புண்படும்படியான சொற்களானாலும் குறைகளைச் சுட்டிக் காட்டுவது அச்சமற்ற குணம். அதைவிடுத்து நேரில் ஏதும் சொல்லாமல் அவர் செய்யும் குற்றங்கள் பற்றியும் அவரைப்பற்றியும் இழிசொற்களல் அவர் இல்லாதபோது பிறரிடம் சொல்வது கோழைத்தனம். புறம்பே சொல்லுவதால் நல்லது எதுவும் நடக்கப்போவதில்லை. மாறாக பின்விளைவுகள் தீங்காகவே முடியும். அவர் புறத்தே சொல்பவை உண்மையாகவே இருந்தாலும் கூட. ஒருவர் மாற்றி ஒருவர் அதைச் சொல்லும்போது செய்தி திரிபுற்குள்ளாகி கடைசியில் அது பொய்மிகக் கலந்ததாகவே முடியும். இது பின்னால் எப்படி மாறும் என்று அறியாமல் பேசுவது. மேலும் சொல்லப்பட்ட இழிசொற்கள் பின்னர் அவர் செவிக்குச் சென்றால், அது அக்குற்றவாளியிடம் மனமாற்றத்தை விளைவிப்பதை விடவும் அவர் மனம் இன்னும் கடினமாவதற்கும் காரணம் ஆகிவிடும். அதன்பின்னர் நல்லது கருதியவரை 'முன்பு அவர் முன் நின்று பேசினோம்; இப்பொழுது அவரைப் நோக்கவும் முடியாது போயிற்று' என எண்ண வைக்கும். எனவே அவர் முன்சென்று எதிர் முகம் நோக்க முடியாதவாறும் ஆகிவிடும் சொற்களைப் புறங்கூறாதே.

புறங்கூறல் என்பது ஒருவரைக் காணாதபோது அவரைப்பற்றி மற்றவர்களிடம் இழித்துக் கூறுவது பற்றியது.
தமக்கு உரிமையுள்ள ஒருவரது குற்றங்களைக் கண்ட ஒருவர் பண்பு கருதியோ அல்லது அவற்றை நேரில் சொல்ல அஞ்சியோ புறங்கூறுவர்களை நோக்கிய பாடல் இது.
கண்ணற என்ற சொல் மனம்‌ புண்படவுரைத்துக்‌ கடிதலையே‌ குறிக்கிறது. இனிய சொல் பேசுதலையே வலியுறுத்தும் வள்ளுவர் இங்கு அறங்கருதி, அவனைத் திருத்தும் நோக்கில்‌ கண்ணறக்கூறலாம் என்கிறார். திருத்தும் முகத்தான் கண்ணறச் சொல்வதற்கும் திண்மையுடையவராயிருத்தல் வேண்டும்.
‘கண்ணறச் சொல்லினும்’ என்பதற்குக் கண்பார்த்தல் ஒழிய அதாவது கேட்டவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுமாறு சொல்லினும் எனப் பொருள் உரைப்பார் மணக்குடவர்.

'முன்இன்று பின்நோக்காச் சொல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

'முன்நின்று', 'முன்இன்று' என்று இரண்டு வகையான பாடங்கள் காணப்படுகின்றன. 'முன்நின்று' என்றவர்கள் 'பிற்காலத்து அவன் முன்னே நின்று' எனப் பொருள் கூறினர். 'முன்இன்று' எனக் கொண்டவர்கள் 'தன் முன்பு இலனாகக் கண்டு', 'அவன் எதிரின்றி' எனப் பொருளுரைத்தனர். முன்நின்று என்பது முதலடியில் சொல்லப்பட்ட கண்நின்று என்ற கருத்தையே தருவதால் முன்இன்று என்பதற்குப் புறம்பே அதாவது எதிர்இல்லாதபோது என்று கொள்வது சிறக்கும்.
'பின்நோக்கா' என்பதற்கு 'எதிர் முகம் நோக்கவொண்ணாத' என்று மணக்குடவரும் 'மற்று அவனைப் பின்பு முகநோக்கத் தகாத' என்று காலிங்கரும் உரை தருவர். இவர்கள் 'புறங்கூறியவன் பின்னர் யாரைப்பற்றிச் புறம் சொன்னானோ அவன் முன்னே நின்று முகம் நோக்காத அளவு நாணிக்கொள்ள வேண்டிவரும்' என்று பொருள் கொள்கின்றனர். பரிமேலழகரோ 'பின்வரும் குற்றத்தை நோக்காத' அதாவது 'பின்விளைவுகளை ஆராயாது' என்ற பொருளில் உரை அமைத்தார்.
'பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்' என்ற உரை பின்னதினும் பொருத்தம்.

இப்பகுதிக்கு உரையாசிரியர்கள் வேறுவேறுவகையாகப் பொருள் கூறினர். அவற்றிலிருந்து சில:

  • பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்கவொண்ணாத சொல்
  • அவனைக் காணாதவிடத்தில் புறஞ் சொல்லல்
  • ஒருவன் தன் முன்பிலனாகக் கண்டு மற்றவனைப் பின்பு முகநோக்கத் தகாத சொல்
  • அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்
  • முன்னே நின்று நல்லவார்த்தை சொல்லி அவன்போன பின்பு இகழ்ச்சி சொல்லல்
  • அவன் காணாத இடத்திலே அவன் பேரிலே பின்னுக்கு வரும் குற்றத்தை நோக்காத பேச்சு
  • அவன் எதிரில் இல்லாதபொழுது பின்னர் அவன் முகத்தை எதிர்நோக்கவியலாத சொற்கள்
  • அவன் இல்லாத இடத்தில் அவனைப் பற்றிய குற்றங்களைக் கூறுதல் - நேற்று முன் தினம் பழி சுமத்துபவரிடம் அன்பொழுகப் பேசிய சொற்களை நினையாது கூறல்
  • ஆளில்லாத போது கோள் சொல்லல்
  • அவன் எதிரே நின்று பின் முகத்தில் விழிக்க முடியாத சொல்லைக் கூறாதொழிக
  • அவன் முன்னால் இல்லாதபோது பின்னால் வரும் தீமைகளை நினைத்துப் பார்க்காத வார்த்தைகள்
  • ஒருவன் முன்னே இல்லாமல் பின்விளைவு கருதாது சொல்லும் புறங்கூறுதல்
  • அவனுக்கு முன்பு இல்லாமல் புறத்தேபோய் அவன் அறியாத பழிச்சொற்கள்
  • ஒருவன் இல்லாத பொழுது அவனைப்பற்றி இழித்துரைத்துப் பின் அவனைப் பார்க்க முடியாத நிலையை உண்டு பண்ணும் சொற்கள்
  • அவன் இல்லா இடத்துப் பின் விளைவு கருதாது பழிப்புரை கூறுதல்
  • ஒருவனைக் காணாதவிடத்து பின்பு அவனைப் பார்க்க முடியாத பழிச் சொற்கள்
  • அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்கள்
  • முன்னே புகழ்ந்து பேசிப் பின்னால் இகழ்ந்து பேசும் புறங்கூறல்
  • நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்
  • ஒருவர் தனக்கு முன்பாக இல்லாத நேரத்தில், (அவருக்கு புறமாக) பின்விளவுகளை ஆராயாமல் சொல்லுகின்ற புறங்கூறலை, பின் தூற்றிப் பேசுவது
  • முன்னால் இல்லாத போது (முதுகுக்குப்பின்னால்), பின்விளைவு பற்றிய எண்ணமில்லாமல் பழி பேசல்
  • ஒருவர் முன்னே நின்று புறத்தே [கண்ணால்] பார்க்காததைச் சொல்லும் சொல்

பின்பு அவனைப் பார்க்க முடியாத நிலையை உண்டு பண்ணும் சொற்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும், பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒருவனைப்பற்றி இழித்துப் புறங்கூறாமை பழகு.

பொழிப்பு

ஒருவன் கண் எதிரே நின்று இரக்கமற்று இழித்துப் பேசினாலும் அவன் எதிரே நின்று பின்னர் முகத்தில் விழிக்க முடியாத சொல்லைப் புறத்தே கூறவேண்டாம்.