இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0176



அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்

(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:176)

பொழிப்பு (மு வரதராசன்): அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

மணக்குடவர் உரை: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்,
இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.

பரிமேலழகர் உரை: அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.
(இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன், பிறர் பொருளை விரும்பி அதனை அடைய, பொல்லாத செயல்களை எண்ணிக் கெடுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.

பதவுரை: அருள்-அருள்; வெஃகி-விரும்பி, நாடி; ஆற்றின்கண்-நல்வழியில், அறநெறிக்கண்; நின்றான்-நின்றவன், நின்று வாழ்பவன்; பொருள்-(பிறர்)பொருள், சொத்து; வெஃகி-அவாவி, கவர விரும்பி; பொல்லாத-தீய, குற்றநெறிகள்; சூழ-நினைக்க, எண்ண; கெடும்-அழியும், கெட்டுப்போகும்.


அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும்;
பரிதி: முத்தியை விரும்பித் தன்மநெறியிலே நின்றார்;
காலிங்கர்: தமது அறிவினால 'நமக்குவரும் இன்பம் துன்பம அனைவர்க்கும் ஒக்கும்' என்று அருளுவதோர் அருளினையே விரும்பி நூல் சொல்லுகின்ற வழிநின்றவர்;
பரிமேலழகர்: அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்;
பரிமேலழகர் குறிப்புரை: இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார்.

'அருளை விரும்பி அறனெறியிலே/நூல் சொல்லுகின்ற வழி/இல்லறத்தின்கண் நின்றவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அருளை நாடி உரிய வழியில் நிற்பவன்', 'அருளை விரும்பி அதற்குரிய அறத்தில் நின்றவன்', 'கருணையை விரும்பி இல்லற ஒழுக்கத்தின் நெறி கடக்காமல் இருக்கவென்றே இல்வாழ்க்கை நடத்துகிறவன்', 'அருள் ஒழுக்கத்தை விரும்பி நன்னெறியில் நிற்கின்றவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.

பொருள்வெஃகி பொல்லாத சூழக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
பரிதி: பொன்னாசையை விரும்பி, மனத்தில் அழுக்குடையராகில் கெடுவார் என்றது.
காலிங்கர்: முறைமையின்றிப் பிறனது பொருளை விரும்பி, மற்று அது காரணமாகப் பொல்லாதனவற்றை நினைப்பக் கெடுவர் என்றவாறு.
பரிமேலழகர்: பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.

'பொருளை விரும்பி குற்ற நெறிகளை எண்ணக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் பொருளைக் கவர நினைப்பின் கெடுவான்', 'பிறர் பொருளை விரும்பித் தீய நெறிகளை எண்ணுவானாயின் கெடுவான்', 'பொருளின் மேல் வைத்த ஆசையினால கெட்ட காரியங்களைச் செய்ய நினைப்பானாயின் இல்லறம் கெட்டுப் போகும்', 'பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளைப் பற்ற எண்ணுவானாயின், அவன் கெட்டு ஒழிவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர் பொருளை விரும்பி அதைக் கவரப் பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அருள்வெஃகி நல்வழியின்கண் நின்றவன் பிறர் பொருளை விரும்பி அதைக் கவரப் பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது பாடலின் பொருள்.
'அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்' யார்?

பிறர்பொருளைக் கைக்கொள்ள விரும்புபவனுக்கு என்ன அருள்வாழ்வு கிடைக்கப்போகிறது?

அருளை விரும்பி நன்னெறியில் ஒழுகுகின்றவன், பிறர் பொருளை விரும்பிக் குற்றமான செயல்களைச் செய்ய நினைத்தால், அவனது அருள்வாழ்வு பாழ்படும்.
முந்தைய குறளில் நுண்ணிய அறிவுடையவர்கள் பிறர்பொருளை நாடி அலையக் கூடாது என்று கூறப்பட்டது. இங்கு அருள் வேண்டி அறநெறியில் இருப்பவர்கள் பிறன்பொருள் வெஃகுதல் செய்யக் கூடாது எனச் சொல்லப்படுகிறது.
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலகு இல்லை. பொருள் அருள் என்னும் இரண்டும் நல்வாழ்வுக்குத் தேவையாகின்றன. அருளும் பொருளும் சேர்ந்த வாழ்வு இயலும்தான். ஆனால் அருள் தேடி நன்னெறியில் நிற்பவன், பிறர்பொருளைக் கவர விரும்பி, தீயன எண்ணினால் அழிவான். ஒழுக்க நெறியினை உலகிற்குணர்த்தும் அருளாளர்களும்கூடப் பிறர் பொருளை விரும்புதல் கூடும் என்பது உலகியல். பொதுவாக நன்னெறிக்கண் செல்ல விழைபவரும் பிற அறங்களைச் செய்பவருங்கூட ஓரோவழி பிறர் பொருள்மேல் விருப்பம் கொண்டு அதை அடையும் பொருட்டு பொல்லாதன செய்யக் கருதலும் கூடும். அப்படிப்பட்டவரை தீய நெறியிலிருந்து விலக்குவதற்காகக் கூறப்பட்ட அறிவுரை இது. பிறர்பொருள் கவர்தல் என்னும்போது பிறன்மனைவியை விரும்பி அடைய எண்ணுதலும் அடங்கும். அருட்செல்வனாகவும் அறியப்படுகிற இராவணன் பிறன்பொருளாளை விரும்பியது இப்பாடலுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
ஒருவன் அருள்வழியில் செல்லும் அதே நேரத்தில் பிறர் பொருள்மேல் ஆசை கொண்டு அதைத் தவறான வழியில் பெற நினைப்பது அறமற்ற செயலாகிவிடுகிறது. வெஃகுதல் அருள் ஆற்றிற்கு எதிர் என்கிறார் வள்ளுவர். அருள் வாழ்க்கை மேற்கொண்டிருந்து பிறர்பொருளை விரும்பித் தீதான வழிமுறைகளை மேற்கொள்ள திட்டமிடுவாராயின், அவருடைய அருள் நோக்கமும், அறவழியும், நல்வாழ்க்கையும் கெடும்.

குறள் கூறும் அறவொழுக்கம் அன்பின் வளர்ச்சியினைப் பின்பற்றுவது; அவ்வொழுக்கங்கள் ஒன்றினொன்று பிரிந்து வளர்ந்து போகின்றன. அருள்என்னும் அன்பீன் குழவி... (பொருள் செயல்வகை 757 பொருள்; அருள் என்று சொல்லப்படும் அன்பு பெற்றெடுக்கும் குழந்தை..) அன்பு வளர்ந்து அருளாக மலரும் என்பது வள்ளுவம். இங்கு சொல்லப்பட்ட அருளாளன் அற நெறியிலே நின்றவன் ஆவன். அவ்வருளாளன் பிறன் பொருளைக் கவர விரும்பி தீயன செய்ய நினைத்தால் விரும்பும் பொருள் அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கமாகுமாதலால் அவன் வாழ்க்கை கெடும்.

'அருள் நெறியில் நிற்போரது அறச் சொத்துக்களையும் காணிக்கைகளையும் கையாடலாகாது' என்று இக்குறட்கருத்தை வேறொரு வகையாக விளக்குகிறது மு கோவிந்தசாமியின் உரை.

'அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்' யார்?

'அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்' என்றதற்கு அருளை விரும்பி யறனெறியிலே நின்றவன், முத்தியை விரும்பித் தன்மநெறியிலே நின்றார், இன்பமும் துன்பமுமெல்லார்க்கும் பொது என்ற அருளினையே அறிவால் விரும்பி நூல் சொல்லுகின்ற வழி நின்றவர், அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன், அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், அருளை விரும்பி அறநெறியில் வாழ்பவன், அருளை விரும்பி அதனை அடைதற்குரிய நெறியில் நின்றொழுகுகுபவர்கள், அருளை நாடி உரிய வழியில் நிற்பவன், அருளை விரும்பி அதற்குரிய அறத்தில் நின்றவன், கருணையை விரும்பி இல்லற ஒழுக்கத்தின் நெறி கடக்காமல் இருக்கவென்றே இல்வாழ்க்கை நடத்துகிறவன், எவ்வுயிரிடத்தும் அருளை விரும்பி அறவழியில் நின்றவன், அருள் ஒழுக்கத்தை விரும்பி நன்னெறியில் நிற்கின்றவன், அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன், கருணையை விரும்பி அதைப் பெறுதற்குரிய நன்னெறியில் ஒழுகுகின்றவன், அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன், அருளை விரும்பி அதனைப் பெறக்கூடிய வழியாகிய தவ ஒழுக்கத்தில் நின்ற ஒருவன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அறவழியில் நிற்பவன் அல்லது கடவுளை நினைந்து வாழ்பவனும் ஏன் பிறன்பொருளைக் கவர விரும்பவேண்டும்? அறவழியில் நிற்பவன் என்று சொன்னபின் அவன் எப்படி தீய எண்னங்களுக்கு உள்ளாவான்? இவை இயல்பாக எழும் வினாக்கள்.
பிறன் பொருளைக் கவர்தல் இரப்போர்க்கு ஈவதற்கு என்று ஒரு விளக்கம் சொல்கிறது. அடுத்தவன் பொருளைக் கவர்வது பிறருக்கு உதவத்தான் என்பதால் அவர் செய்யும் தீய செயல் நன்றாகிவிடாது. ஊரார் சொத்தைத் திருடி ஏழைகளுக்கு உதவுகிறேன் என்பது எப்படி நல்லறமாகும்? 'உலகை உய்விக்க வந்த அருளாளர் ஒருபோதும் பிறர் பொருளை விரும்பார். விரும்பின் அவர்தம் அன்பு பொய்யன்பே; வாழ்வு-பொய் வாழ்வே; அவருடைய அருள் வாழ்வு-பிறரை அழிக்கும் வாழ்வே. பிறர்க்கு உதவுவாரே அருளாளர்; பிறர் பொருளை விரும்புவோர் அருளாளராக மாட்டார்கள்' என இக்குறட்கருத்தை விளக்குவார் இ சுந்தரமூர்த்தி.

அருளை விரும்பி நல்வழியின்கண் நின்றவன் பிறர் பொருளை விரும்பி அதைக் கவரப் பொல்லாத செயல்களை எண்ணக் கெடுவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அருளாளனுக்கு வெஃகாமை வேண்டும்.

பொழிப்பு

அருளை நாடி நல்வழியில் நிற்பவன் பிறர் பொருளைக் கவர, பொல்லாத செயல்களை, எண்ணக் கெடுவான்