இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0156



ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0156)

பொழிப்பு: தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

மணக்குடவர் உரை: ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்.
இது புகழுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை: ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
[ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]

நாமக்கல் இராமலிங்கம் உரை: தீங்குக்குத் தீங்கு உடனே திருப்பிச் செய்து தண்டித்து விடுவதில் அப்போதைக்குத்தான் இன்பம் உண்டு. ஆனால் பொறுத்து மன்னித்து விடுவதில் சாகும் வரை பிறர் அதைப் புகழ்ந்து பேசும் இன்பம் உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.


ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்:
பதவுரை: ஒறுத்தார்க்கு-தண்டித்தவர்க்கு; ஒருநாளை-ஒரு நாள்; இன்பம்-மகிழ்ச்சி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்;
பரிதி: கோபிக்கும் தன்னை வைதாரை வைதோம் என்று ஒரு நாளையில் இன்பம் உண்டு;
காலிங்கர்: இவர் நமக்கு எளியர் என்ற கருதிக்கொண்டு ஒறுத்தவர்க்கு மற்று அப்பொழுதை இன்பமே உளது;
பரிமேலழகர்: தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே;
பரிமேலழகர் குறிப்புரை: ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம்.

'ஒறுத்தவர்க்கு அற்றைநாளை இன்பமே உண்டாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தண்டித்தவர்க்கு அப்போதைய மகிழ்ச்சியே', 'தீமை செய்தவர்களைத் தண்டித்தவர்க்கு உண்டாவது ஒருநாளை இன்பமே', 'பிழைசெய்தவனைத் தண்டித்தவர்க்கு உண்டாவது ஒருநாளைப் பொய் இன்பமே', 'தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று உண்டாகும் ஒரு நாளை இன்பமே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தண்டித்தவர்க்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சியே என்பது இப்பகுதியின் பொருள்.

பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்:
பதவுரை: பொறுத்தார்க்கு-பொறுத்துக் கொண்டவர்க்கு; பொன்றும்-அழியும்; துணையும்-அளவும்; புகழ்-இசை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழுண்டா மென்றது.
பரிதி: பொறுத்தார்க்குப் பூமி பொன்றும் அளவும் புகழாம்.
காலிங்கர்: மற்று அங்ஙனம் ஒறுத்தவர் ஒறுப்பினைப் பொறுத்தவர்க்கு இவ்வுலகம் உள்ள அளவும் புகழாம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: துணை என்பது இவ்வுலகத்துள் சூழ்ந்திருக்கும் கடல் வெள்ளம் வந்து கூடிப் பெருகும் அளவும் புகழானது நசியாமல் நிற்கும், என்னுமாம்.
பரிமேலழகர்: அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது.

'பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும்/இவ்வுலகம் உள்ளளவும் புகழுண்டாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுத்தவர்க்கோ உலகம் உள்ளளவும் புகழ்', 'ஆனால், அதனைப் பொறுத்தவர்க்கு உலகம் அழியும் அளவும் புகழ் உண்டாம்', 'அதனைப் பொறுத்தவர்க்கு உலகம் அழியும்வரை புகழ்நிற்கும்', 'ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்வார்க்கு உலகம் அழியும் அளவும் புகழ் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பொறுத்தவர்க்கோ சாகும் வரை புகழ் நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்கு ஒறுத்த அன்று உண்டாகும் ஒரு நாளை இன்பமே; ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்வார்க்கு உயிர் அழியும் வரை புகழ் உண்டாகும்.

தண்டித்தவர்க்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சியே; பொறுத்தவர்க்கோ பொன்றும் துணையும் புகழ் நிற்கும் என்பது பாடலின் பொருள்.
யார் அல்லது எது 'பொன்றும் துணையும்'?

ஒறுத்தார்க்கு என்ற சொல்லுக்கு தண்டிக்கிறவர்க்கு என்பது பொருள்.
ஒருநாளை இன்பம் என்ற தொடர் அந்த ஒரு நாளைக்குத்தான் மகிழ்ச்சி என்ற பொருள் தரும்.
பொறுத்தார்க்கு என்ற சொல்லுக்கு பொறுத்துக் கொள்பவர்க்கு என்று பொருள்.
புகழ் என்ற சொல் புகழ் குறித்தது.

தீமைக்குச் தீய செய்தவர் 'பழிக்கு பழி வாங்கிவிட்டோம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பத்தால் அன்றைப் பொழுது மகிழ்ந்திருப்பார்; பொறுமை காட்டியவர்களோ தம் உயிர் அழியும் வரை புகழப்படுவர்.

ஒறுத்தல் பொறுத்தல் என்ற முரண்நிலையில் அமைந்த மற்றொரு குறள்.
ஒறுத்தவர்க்கு அன்று ஒருநாள் மட்டுமே இன்பம் உண்டாகும். அதுவும் செருக்குக் கொண்டு இருக்கும் போலி இன்பமே. ஆனால் தீமை செய்வர்களுக்குத் திருப்பித் துன்பம் செய்யாமல் பொறுத்துக் கொண்டவர்க்கு, வாழ்நாள் முழுதும் இன்பம்; அவன் உயிர் முடியும் காலம் வரைக்கும் புகழுமுண்டாம்.
நமக்குத் தீமை செய்த ஒருவனுக்கு நாமும் தீமை செய்து நம்முடைய வலிமையைக் காட்ட வேண்டும் என்று உள்ளத்தில் ஒரு வேகம் எழுவது இயல்புதான். சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி, தீமைக்குத் தீமை, கொலைக்குக் கொலை என்று போய்க் கொண்டிருந்தால் தீயவற்றுக்கு முடிவே இருக்காது. தண்டிப்பது என்கிற தவறின் மூலம் ஒருவர் செய்த குற்றத்தைச் சரி செய்யமுடியாது. உறுப்புக்கு உறுப்பு இழப்பு, பொருள் இழப்பு என்று துன்புறுவோன் அடைந்த துன்பத்தைத் துன்புறுத்தியவனும் அடைய வேண்டும் என்பது வஞ்சம் தீர்க்கும் ஒறுக்கும் நெறியாகும். தன் குடும்பமோ சமுதாயமோ நிலைத்து நல் வாழ்வு பெற வேண்டுமானால் இந்த ஒறுத்தல் நெறி மாறவேண்டும். தீமையைப் பொறுத்து அதை இழைத்தவரை மன்னிப்பது பெருந்தன்மை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்வதுவே மனித உறவுகளை மேலும் வளர்த்து சமுதாயத்தை அமைதியாக்கும். அந்த அமைதி நிலவ மனித உறவுகளுக்குள்ளே பொறுமை வேண்டும். அப்படியல்லாமல் ஒறுப்பதால் என்ன கிடைக்கிறது? தண்டிக்கும் செயல் வீரமுமல்ல. தன்மானம் காப்பாற்றும் செயலும் அல்ல. அப்படிச் செய்வது தொடர்புடைய அனைவர்க்கும் துயரமே தரும். வஞ்சம் தீர்த்துக் கொண்டவனுக்குக் கிடைப்பது, சினம் கொண்டு ஒறுத்த அந்த ஒருநாள் இன்பமே; எதிர்செய்ய வலிமையிருந்தும் பொறுத்தவர்க்கோ அவருடைய இறுதி மூச்சு உள்ள அளவும் இன்பமும் புகழும் உண்டு.

இக்குறளுக்கு 'ஒறுத்தவர்க்கு ஒருநாள் மட்டுமே பழி தீர்த்த இன்பம்; ஆனால் பொறுத்தவர்க்கு வாழ்நாள் உள்ளவரை புகழின்பம் உண்டு' என்றபடியும் உரை உள்ளது.

யார் அல்லது எது 'பொன்றும் துணையும்'?

'பொன்றும் துணையும்' என்ற தொடர் அழியும் அளவும் என்ற பொருள் தரும்.
அழியும் அளவு என்பதை விளக்க வரும் உரையாசிரியர்கள் சாமளவும், பொன்றும் அளவும், இவ்வுலகம் உள்ள அளவும், உலகம் அழியுமளவும், சாகும் வரைக்கும், வாழ்நாள் முடியும் காலம் வரைக்கும், இறக்குமளவும், அழியும் வரை, உலகம் அழியும்வரை எனப் பொருள் கூறினர்.
'பொன்றும் துணையும்' என்ற தொடர்க்கு உலகம் அழியும் அளவும் என்பதே பெரும்பான்மை அறிஞர்களின்/உரையாளர்களின் பொருளாக உள்ளது. இப்படிச் சொன்னவர்கள், புத்தர், ஏசு, காந்தி போன்ற மாமனிதர்களைக் கருத்திற் கொண்டு கூறியிருக்கலாம். அப்படிப்பட்ட மாந்தர் மிக மிகச் சிலரே தோன்றுவர். எனவே இறக்குமளவும் என்ற பொருளே பொருத்தமாகப் படுகிறது. அடுத்து, யார் இறக்கும் அளவுக்கும்? - தீமை செய்தவன் இறக்கும் அளவுக்குமா? தீமையைப் பொறுத்துக் கொண்டவன் இறக்கும் அளவுக்குமா?- என்ற வினா எழுகிறது. தீமையைப் பொறுத்துக்கொண்டவனே புகழுக்குரியவன். எனவே மிக்கவையைத் தாங்கிக் கொண்டவன் உயிர் அழியும் அளவும் என்பதே பொன்றும் துணையும் என்ற தொடர் குறிக்கிறது என்பது சிறக்கும்.

தீமைக்குத் தீமை என்று ஒறுக்காமல் அத்தீங்கைப் பொறுத்துக் கொண்டவனை 'பொன்றும் துணயும்' என்ற தொடர் குறிக்கிறது.

தண்டித்தவர்க்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சியே; பொறுத்தவர்க்கோ சாகும் வரை புகழ் நிற்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொறையுடைமையாரது இன்பமும் புகழும் வாழ்நாள் முழுதும் நீடிக்கும்.

பொழிப்பு

ஒறுத்தவர்க்கு அந்த நாள் மட்டும் இன்பம்; பொறுத்தவர்க்கோ சாகும் வரை புகழ் நிற்கும்.