இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0155



ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து

(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:0155)

பொழிப்பு: (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

மணக்குடவர் உரை: தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

பரிமேலழகர் உரை: ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.
(ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தீங்குக்குத் தீங்கு திருப்பிச் செய்து விடுகிறவனைக் குறிப்பிடத் தகுந்த ஒரு மனிதனாக யாரும் மதிக்க மாட்டார்கள். ஆனால் தீங்கு செய்தவனையும் மன்னித்து விடுகிறவனை மிகவும் குறிப்பிடத் தக்கவனாக மதித்து அவனுடைய பொறுமைக் குணத்தை எல்லோரும் தம்முடைய மனத்தில் போற்றி வைப்பார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் .


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே:
பதவுரை: ஒறுத்தாரை-தண்டித்தவரை; ஒன்றாக-ஒரு பொருள் ஆகும்படி; வையாரே-கொள்ளாரே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார்;
பரிப்பெருமாள்: தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார்;
பரிதி: பொறுமை யில்லாதார் ஒன்றுக்கும் அல்லார்;
காலிங்கர்: எளியவர் என்று கருதிக்கொண்டு ஒறுத்தாரை இம்மை மறுமை இரண்டுக்கும் உரியதோர் ஆக்கமுடையராக வைத்து எண்ணார் சான்றோர்;
பரிமேலழகர்: பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்;
பரிமேலழகர் குறிப்புரை: ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார்.

'தமக்குத் துன்பஞ் செய்தாரை ஒறுத்தாரை ஒரு பொருளாக மதித்து வையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். யார் வையார் என்றதற்கு உலகத்தார், சான்றோர், அறிவுடையார் என்று இவர்கள் விளக்கம் செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தண்டித்தவரை யார் மதிப்பர்?', 'குற்றம் செய்தாரைத் தண்டித்தவரை அறிவுடையார் ஒரு பொருளாக மதித்து மனத்துட் கொள்ளார்', 'தமக்குத் தீங்கு செய்தாரைப் பொறாமல், அவரைத் தண்டிப்பரை ஒரு பொருளாக அறிஞர் மதிக்கமாட்டார்', 'பிறர் தமக்குத் தீமை செய்தவழிப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைக் கடிந்தவரை அறிவுடையார் ஒரு பொருளாக மதியார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒறுத்தாரை ஒருபொருளாக உலகோர் மதியார் என்பது இப்பகுதியின் பொருள்.

வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து:
பதவுரை: வைப்பர்-கொள்வர்; பொறுத்தாரை-பொறுத்துக் கொண்டவரை; பொன்-தங்கம்; போல்-நிகராக; பொதிந்து-முடிந்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
பரிப்பெருமாள்: பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒறுப்பதினும் பொறுப்பதனை நன்கு மதிப்பர் என்றது.
பரிதி: பொறுமையுடையாரைப் பொன்போல யாரும் தலைமேற்கொண்டிருப்பார் என்றவாறு.
காலிங்கர்: அதனால் சிலர் தம்மை ஒறுக்க ஒன்றாக உட்கொள்ளாது உலகத்தார் பொன்னைக் குறிக்கொண்டு பேணிக் கொள்ளுமாப்போல் மற்று இவரைக் குறிக்கொண்டு பேணிக் கொள்வர் சான்றோர் என்றவாறு.
பரிமேலழகர்: அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.

'பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறுத்தவரையே பொன்போல் போற்றி மதிப்பர்', 'ஆனால் குற்றம் பொறுத்தவர்களைப் பொன்போல் மதித்து மனத்தில் வைத்துப் போற்றுவர்', 'அவ்வாறன்றிக் குற்றம் பொறுப்பாரைப் பொன்னைப் போல் அருமையாக நன்கு பேணிப் போற்றுவர்', 'ஆனால் பொறுத்துக்கொண்டவர்களைப் பொன் போல் போற்றி மதிப்பர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பொறுத்தவரைப் பொன்போல் போற்றி மதிப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொறாது தண்டித்தவரை உலகோர் ஒரு பொருளாக மதிக்கமாட்டார்; தீமையைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன் போல் போற்றி எப்பொழுதும் மனதுள் எண்ணிக் கொண்டு இருப்பர்.

ஒறுத்தாரை ஒருபொருளாக உலகோர் மதியார்; பொறுத்தவரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் என்பது பாடலின் பொருள்.
யார் 'பொன்போல் பொதிந்து' வைப்பர்?

ஒறுத்தாரை என்ற சொல்லுக்குத் தண்டித்தவரை என்பது பொருள்.
ஒன்றாக என்றதற்கு ஒருபொருளாக அல்லது ஒருபொருட்டாக எனப் பொருள் கொள்வர்.
வையார் என்ற சொல் மதியார் அல்லது மனத்துட் கொள்ளார் என்ற பொருள் தரும்.
வைப்பர் என்ற சொல் மதிப்பர் அல்லது மனத்துட் கொள்வர் என்ற பொருளது.
பொறுத்தாரை என்ற சொல்லுக்கு பொறுத்துக் கொள்பவரை என்று பொருள்.
பொன்போல் பொதிந்து என்ற தொடர் பொன்னைக் காப்பதுபோல் மூடிவைத்து என்னும் பொருள் தருவது.

தமக்கு தீமை இழைத்தாரைத் தண்டித்தவர்களை ஒரு பொருட்டாக உலகோர் மதியார். ஆனால் பொறுத்தவர்களைப் பொன்னாகப் போற்றி நினைவில் வைத்திருப்பர்.

ஒருவருக்குத் தீமை செய்தவரை அத்தீங்கைப் பொறுக்காமல் திருப்பித் தீமை செய்தவரை மக்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். இதை வள்ளுவர் 'ஒன்றாக வையார்' எனக் குறிப்பிடுகிறார். பரிதி அவரை 'ஒன்றுக்கும் அல்லார்' என அழைக்கிறார். வையார் என்ற சொல் வைக்கமாட்டார் என்னும் பொருளில் ஆளப்பட்டது. கெடுவாக வையாது...... (நடுவுநிலைமை குறள் 117) என்று பிறிதொரு பாடலில் வையாது என்ற சொல் வைக்காது என்ற பொருளில் வந்தது. பேச்சு வழக்கில் "அவனெல்லாம் ஒரு ஆளுன்னு வைத்துக் கொள்ளலாமா?" என்று சொல்வதைப் போன்றது இது. ஆனால் உலகத்தார் பொன்னைக் குறிக்கொண்டு பேணிக் கொள்ளுவதைப்போல, குற்றத்தைப் பொறுத்து மன்னித்து மறந்தவரை மதித்துப் போற்றி வைப்பார்கள். செ தண்டபாணி 'பொன்போல்' என்பதற்கு உலோகங்கள் பலவற்றுள்ளும் அருமையும் அழகும் மதிப்பும் சிறந்து நிற்றலோடு வன்மைமிக்கு எத்துணை மெல்லிதாக அடித்துப் பரப்பினும் ஒடியாது நிற்கும் தன்மையும் உடைமையின்' எனப் பொறுமை காட்டுவதை விளக்கினார்.
பொறுமையுடையார் உலகத்தார் உள்ளத்துள் எல்லாமுளராவர். இதைப் பரிமேலழகர் இடைவிடாது நினைப்பர் அதாவது பொறுத்தாரைப் பொன்னான மனிதனாக தன் நினைவில் பாதுகாப்பர் என விளக்குவார்.

ஒறுத்தல்-பொறுத்தல் என்னும் முரண் அமைத்துப் பொறுமையின் பெருமையைக் கூறுவது இக்குறள். ஒருவர் பொறுமை காப்பதால் பகை முதிராது. தீய மனத்தை திருத்துவதே தண்டிப்பதன் பயன் ஆதல் வேண்டும். இதை விடுத்துப் பிறர் குற்றம் பொறுக்காமல் பழிவாங்கும் முனைப்போடு ஒறுத்தால், அதனால் குற்றஞ் செய்தவர் திருந்தாமையோடு வாழ்வுக்கேடும் உறுவர். தண்டித்தவரின் மனமும் கெடும்; அவர் மனவலிமை அற்றவராகவும் கருதப்படுவார்.

யார் 'பொன்போல் பொதிந்து' வைப்பர்?

பொன்போல் பொதிந்து வைப்பர் யார் என்பதை விளக்கும்போது உரையாளர்கள் உலகத்தார், யாரும், சான்றோர், அறிவுடையார், நன்மக்கள், அறவோர், அறிஞர், உலகோர், பெரியோர், மக்கள் எனக் குறிப்பிடுவர்.

பொன்போல் பொதிந்து வைப்பர் உலகத்தார் என்பது பொருத்தமான பொருள்.

ஒறுத்தாரை ஒருபொருளாக உலகோர் மதியார்; பொறுத்தவரைப் பொன்போல் போற்றி மதிப்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொறையுடைமையாரைப் பொன்போல் உயர்வாக மதிக்கும் இவ்வுலகு.

பொழிப்பு

தண்டித்தவரை ஒரு பொருளாக மதியார்; பொறுத்தவர்களைப் பொன்போல் போற்றி மதிப்பர்.