இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0116



கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்

(அதிகாரம்: நடுவுநிலைமை குறள் எண்:116)

பொழிப்பு (மு வரதராசன்): தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கி நினைக்குமாயின், 'நான் கெடப்போகின்றேன்' என்று ஒருவன் அறிய வேண்டும்



மணக்குடவர் உரை: தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.

பரிமேலழகர் உரை: தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக - அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.
(நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: தன்மனம் நடுநிலை நீங்கி தீயவற்றை நினைக்குமாயின், அந்நினைப்பு யான் கெடுவேன் என்பதை உணர்த்தும் முன் அறிவிப்பென உணர்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின், யான் கெடுவல் என்பது அறிக.

பதவுரை: கெடுவல்-அழிந்துபடுவேன், அழியக்கடவேன்; யான்-நான்; என்பது-என்று; அறிக-உணரவேண்டும், தெரிந்து கொள்க; தன்-தனது; நெஞ்சம்-உள்ளம்; நடுவு-நடுவு நிலைமை; ஒரீஇ-ஒழிந்து; அல்ல-அல்லன, தீயவை, ஆகாதவைகளை; செயின்-செய்தால்.



கெடுவல்யான் என்பது அறிக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனக்குக் கேடு வருமென்று தானே யறிக;
பரிப்பெருமாள்: எனக்குக் கேடு வருமென்று தானே யறிக;
பரிதி: தன்னெஞ்சம் நடுவு நிலைமையை விட்டால் அப்போதே தனக்கு விதனம் வருமென்று அறியவனாக வேணும்; [விதனம் - துன்பம் விசனம் என்பதன் போலி]
காலிங்கர்: தான் செய்யப்பட்டார் கெடுவதன்றி யானே கெடுவன் என்பதனை முதலே உணர்ந்துகொள்க;
பரிமேலழகர்: அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக. [உற்பாதம் -பின்வரும் நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் குறி (அடையாளம்)]

'எனக்குக் கேடு வருமென்று தானே யறிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேடுகாலம் என்று தெரிந்து கொள்க', 'யான் கெடுவேன் என்று ஒவ்வொருவனும் உணரல் வேண்டும்', ''யான் கெடுவேன்' என்று அறியும் உணர்வைக் கொள்க', 'ஈடுபடும் அப்பொழுதே யான் கெட்டுப் போவேன் என்பதை அவன் அறிந்து கொள்வானாக' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

யான் கெடுவேன் என்று உணரல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

தன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக. [நடுஅல்லாதவை-நடுவுநிலை அல்லாத செயல் சிந்தனை முதலியவை]
பரிப்பெருமாள்: தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நடுவு செய்யாக்கால் கேடுவரும் என்றது.
பரிதி: தனக்கு இறுதி வரும் என்ற காலம் நடுவுநிலைமையை விடும் என்றறிக என்றவாறு.
காலிங்கர்: தன்னெஞ்சமானது நடுவுநிலைமை நீங்கி மனக்கோட்டத்தினால் அல்லாதனவற்றைச் செயின் என்றவாறு.[மனக்கோட்டம் - மனத்தின்கண் கோணல் உடையனாதல்]
பரிமேலழகர்: ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; .
பரிமேலழகர் குறிப்புரை: நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.

தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.பரிமேலழகர் 'நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்' என உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் நெஞ்சம் நேர்மை தவறிச் செல்லின்', 'தனது நெஞ்சறிய முறையில்நின்று விலகித் தவறானவற்றைச் செய்தால் அதனால்', 'தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து தீயவை செய்ய நினைக்குமாயின்', 'ஒருவன் மனம் நடுவு நிலைமை நீங்கி அதற்கு மாறாக தீய செயல்களில் ஈடுபடுமானால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தன் உள்ளம் நடுநிலை நீங்கியவற்றைச் செய்ய நினைக்குமாயின்', என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
தன் நெஞ்சம் நடுநிலை நீங்கியவற்றைச் செயின் யான் கெடுவேன் என்று உணரல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'நெஞ்சம் செயின்' எனச் சொல்லப்பட்டுள்ளது. நெஞ்சம் என்ன 'செய்ய' முடியும்?

கெடுவான் கேடு நினைப்பான்.

தன் நெஞ்சம் நடுவு நிலைமையிலிருந்து நீங்கியவற்றைச் செய்ய நினைக்குமாயின் அது தான்கேடுறுவேன் என்பதை முன்உணர்த்தும் அறிவிப்பென உணர்க.
நெஞ்சறிய நடுவுநிலைமை தவறுவது தனது கேட்டிற்கே ஏதுவாம் என்கிறது இப்பாடல். நடுவு பிறழ்வனவற்றைச் செய்ய நினைத்த போதே மனச்சான்றின் எச்சரிக்கை மணியின் ஒலியை உணர வேண்டும்; ஒருவன் நல்லன செய்ய எண்ணும்போது ஆர்வமூட்டுவதும், தீயன செய்ய நினைக்கும் போது அவனை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து தடுப்பதும் மனச்சான்றே; இங்கு தன் நெஞ்சமறிய நடுவுநிலைமை பிறழ நினைப்பது ஒருவனது அழிவுக்கு அறிகுறி என்று சொல்லப்படுகிறது; அதாவது நேர்மையல்லாதவற்றை நினைத்தால் 'நான் இதனால் கெடப்போகின்றேன்' என்று அறியவேண்டும்; உணர்ந்து அந்தச் செயலைக் கைவிட வேண்டும் என்பது குறிப்பு. இதன் பொருள் நடுநிலையிலிருந்து விலக மனம் கோடினால், அது தான் கெட்டுப் போகும் வழியை வலிய உண்டாக்கி அழிவது போன்றது என்பதாம்; தன்னைத்தானே அழித்துக் கொள்ள ஒருவரும் முன் வரமாட்டார். மனம் நடுநிலை அறமற்றதை நினைப்பதை அறிந்து அது கோடாமல் நேர்மையாக இருந்து தனக்குக் கேடு விளையாமல் காத்துக்கொள்ளவேண்டும் என்பது கருத்து.

பொதுவாக வள்ளுவர் அறிவுரை நடையிலேயே பாக்களைப் படைப்பார். சில வேளைகளில் அச்ச நடையையும் பயன்படுத்துவார். இக்குறள் அச்ச நடையில் சொல்லப்பட்டது. ஒருவன் நடுவுநிலைமை தவறி ஒருதலையாக எண்ணும்போது அவனுடைய மனம் நான் கெடப்போவேன் என்று எச்சரிக்கும். இந்த எண்ணம் நம் அழிவுக்கு அறிகுறி என்று உணர்ந்து அந்தச் செயலைக் கைவிட வேண்டும்.
இக்குறள் ஒருவன் தன் மனச்சான்று சொல்வதைக் கேட்கவேண்டும் என்பதைச் சொல்வது. மனச்சான்றைத் தொட்டுக் காட்டும் மற்றொரு குறள்: தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். (வாய்மை 293 பொருள்: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்) என்பது.
இக்குறளின் நடையில் அமைந்துள்ள மற்றொரு பாடல்: கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. (பெரியாரைப் பிழையாமை 893 பொருள்: அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலே செய்யலாம்.)

'நெஞ்சம் செயின்' எனச் சொல்லப்பட்டுள்ளது. நெஞ்சம் என்ன 'செய்ய' முடியும்?

செயின் என்ற சொல்லுக்குச் செய்தால் என்பது பொருள். 'நெஞ்சம் செயின்' அதாவது நெஞ்சம் செய்தால் என்கிறது இப்பா. நெஞ்சத்தின் தொழில் நினைத்தல்; அது எதையும் செய்வதில்லை; செய்வது உடம்பின் தொழிலாம். பின் ஏன் நெஞ்சம் செயின் எனப்பட்டது? 'ஒருவனுடைய நெஞ்சம் நடுவுநிற்றலை ஒழிந்து, அல்லதைச் செய்ய நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்' என்று பரிமேலழகர் இதற்கு விளக்கம் தருவார். அதாவது கேடு நினைத்தலே இப்பாடலில் 'செயின்' எனச் சொல்லப்பட்டுள்ளது எனக் கொள்ளவேண்டும்.

'மனமாயினும் உடலாயினும் மொழியாயினும் தத்தம் தொழிலைச் செய்ய முற்படும்போது செயின் என்னும் வாய்பாட்டாற் சொல்வது பொருத்தமற்றது ஆகாது. இதனாலேயே பரிமேலழகர் போன்ற பண்டை உரையாசிரியர்கள் நினைத்தலை, செயின் என்றே உரையெழுதினர்' என்பார் தண்டபாணி தேசிகர். மேலும் அவர் 'நினைத்தலை மட்டும் தொழிலாகக் கொண்ட நெஞ்சத்திற்கு 'செயின்' என்னும் வினை புணர்த்து ஓதினார். நினைப்பதே பாவமாயினும் செயலுக்கு வாராவிடத்து வெளிப்படையாகத் தீமை விளையாது. அங்ஙனமாகத் தீமை எண்ணிய நெஞ்சம் தொழிற்படுத்தவும் தூண்டுமாயின் விளையும் கேடு பெரிது என்பதை விளக்கியவாறு' எனவும் உரைத்தார்.

நெஞ்சத்தின் செயல் நினைப்பது. நினைத்தலும் செய்தாற் போன்றதே. எனவே நெஞ்சம் செயின் எனச் சொல்லப்பட்டது.

தன் உள்ளம் நடுநிலை நீங்கியவற்றைச் செய்ய நினைக்குமாயின் யான் கெடுவேன் என்று உணரல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நடுவுநிலைமை இன்மையால் கேடுண்டாகும்.

பொழிப்பு

ஒருவன் தன் நெஞ்சறிய நடுவு நிலையல்லாதனவற்றைச் செய்ய நினைப்பானேயானால், அவ்வெண்ணம் தான் கெடப்போகிறேன் என்பதை உணர்த்துவது என்று தெரிந்து கொள்க..