இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0108



நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:108)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்

மணக்குடவர் உரை: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்.
இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று - அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.
(இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: உதவியை மறப்பது என்றும் நல்லதில்லை. உதவாமையை உடனே மறப்பது நல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று

பதவுரை: நன்றி-உதவி, செய்த நன்மை; மறப்பது-மறத்தல், நினைக்காமல் இருப்பது, மறந்துவிடுவது; நன்றுஅன்று-நல்லது ஆகாது, அறன் அன்று; நன்று-நன்மை; அல்லதுஅல்லாதது; அன்றே=அப்பொழுதே; மறப்பது-மறத்தல்; நன்று-நன்றாம், நல்லது, அறன்.


நன்றி மறப்பது நன்றன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல;
பரிதி: ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்றல்ல;
காலிங்கர்: உலகத்து ஒருவர் செய்த நன்றி பெரும்பயனைத் தரும். ஆதலால், தமக்கு ஒருவர் செய்த நன்மையைத் தாம் மறப்பது தமக்கு நன்மை அல்ல'.
பரிமேலழகர்: ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று;

ஒருவர் செய்த நன்றியை மறப்பது நன்றல்ல/அறன் அன்று என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறமாகாது', 'துன்பக் காலத்தில் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல', 'ஒருவன் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று', 'ஒருவர் செய்த உதவியை மறப்பது அறமன்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல பண்பல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நன்றல்லது அன்றே மறப்பது நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்.
மணக்குடவர் கருத்துரை: இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று
பரிதி: ஒருவர் செய்த குற்றத்தை அன்றே மறப்பது நன்று என்றவாறு.
காலிங்கர்: அதனால், நன்மை அல்லாதது ஒருவர் செய்யின் அதனை அப்பொழுதே மறந்து விடுவதே நன்மை என்றவாறு.
பரிமேலழகர்: அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.
பரிமேலழகர் கருத்துரை: இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு. [இரண்டும் - நன்மையும் தீமையும்; மறப்பதும் மறவாததும் - மறப்பது தீமை (நன்றல்லது) மறவாதது-செய்த நன்மை]

'அவர் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது நன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவர் செய்த நன்றல்லாத தீமையைச் செய்த அப்பொழுதே மறப்பது அறமாகும்', 'பின்னால் அவர்கள் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது', 'ஆனால் அவன் செய்த தீமையை செய்த பொழுதே மறப்பது நன்று', 'ஒருவர் செய்த தீமையை அப்பொழுதே மறப்பது அறம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல பண்பல்ல; அவர் செய்த நன்மையல்லாததை அன்றே மறந்துவிடுவது நல்லது என்பது பாடலின் பொருள்.
அன்றே என்ற சொல் குறிப்பது என்ன?

பெற்ற நன்மையை நினைவில் நிறுத்திக் கொள்க; உற்ற தீமையை உடனே மறந்துவிடுக.

தனக்குச் செய்யப்பட்ட உதவியை மறப்பது நல்ல குணம் அன்று; பிறர் செய்த தீமையானதை அப்பொழுதே மறந்து விடுவது நல்லது.
பிறர் செய்த உதவியை மறப்பதும், பிறர் செய்த தீங்கை நினைத்திருப்பதும் நல்லதல்ல. பிறர் தனக்குச் செய்த நன்மையை மறக்கிறது அதாவது நினைவிற்கொள்ளாமை நன்றியறியாமையாதலால் அது நல்ல பண்பாகாது; அறத்துக்குப் புறம்பானதாம்.
செய்யப்பட்ட தீமையை மறக்கிறது என்பது பொறுமை என்கிற அறத்தின் கூறாய் இருக்கிறதனாலே நல்லது எனச் சொல்லப்பட்டது. பிறர் செய்த தீங்கை மறக்காது இருந்தால் மனம் அமைதியுறாமல் நம்மை எதிர்த்தீமை செய்யத் தூண்டும். எதிர்த்தீமை செய்யாத ஒழுக்கம் குற்றத்தை மறப்பதன் மூலம்தான் பெற முடியும். நன்றல்லது மறத்தல் என்பது மறந்து எதிர்த் தீமை செய்யாமையாம்.

செய்யப்பட்ட நன்மையை மறப்பது நன்றன்று, நன்மையல்லாததை மறப்பது நன்று என்று பொதுவகையில் பல உரையாசிரியர்கள் பொருள் கூறினர். நன்றி செய்தவரும் நன்மையில்லாததைச் செய்பவரும் ஒருவரேயானால் அதாவது நன்றி செய்‌தாரே தீமையும்‌ செய்த விடத்து என்ன செய்வது என்பதாகக் கொண்டு சில உரையாளர்கள் பொருள் உரைத்தனர். இரண்டுமே ஏற்கத்தக்கனவே.
நன்றி (உதவி) முதலில் சொல்லப்பட்டுள்ளதால், தொடர்ந்துவரும் நன்றல்லது என்பதற்கு உதவாமை என்று பொருள் கூறுவார் வ சுப மாணிக்கம். உதவி கேட்டுப்போய் அது மறுக்கப்பட்டதை நினைத்து நினைத்து உதவாதவர் மீது பகையை வளர்த்துக் கொள்ளாமல் அதை அப்பொழுதே மறந்து விட வேண்டும் என்ற கருத்துக்கொண்ட இவர் உரையும் பொருத்தமாகவே உள்ளது.
ஒரே போன்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறுவதால் அவை நம் மனதில் ஆழமாக வேறூன்றி விடும் என்பதால், உடன்பாடு எதிர்மறை என்ற இருவகை நடைகளையும் இக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.

அன்றே என்ற சொல் குறிப்பது என்ன?

அன்றே என்ற சொல்லுக்கு அன்றே, அப்பொழுதே, செய்த பொழுதே, அப்போதே, அன்றைக்குத்தானே, உடனே என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அன்றே என்ற சொல் உடனே என்று விரைவு குறித்து நிற்கிறது.
தாம் அடைந்த உதவிகளை என்றும் நினைப்பதுபோல், நல்லதல்லாதவற்றை நிகழ்ந்தபொழுதே மறக்க வேண்டும்!
ஒருவர் நமக்கு உதவாததையும் அல்லது ஒருவர் நமக்கு செய்த தீமையையோ மனத்துட் கொள்ளாது அப்பொழுதே மறந்துவிடவேண்டும். ஒருவர் பல நன்மைகளைச் செய்து வந்து ஒரு தீமை செய்வாராயின், அவ்வளவு நன்மையையும் மறந்து தீமையை மட்டும் நினைப்பது உலகியல்பு. தமக்குத் தீமை செய்தோர்க்குத் தாமும் தீமை செய்வதற்கான காலத்தை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்பர். இதனால் பகைதான் பெருகி பெருந்தீமை பயக்க வாய்ப்பாகும். எனவே தீங்கை அன்றே, அப்பொழுதே மறந்து விடுக எனச் சொல்லப்பட்டது. பொறுமை என்ற பெயரில் அடக்கிவைத்து, சினம் பெருகுவதைவிட குற்றத்தை மறந்துவிட்டால், உள்ளே கனன்று கொண்டிருப்பது அடங்கிவிடும் என்பதனால் 'உடன்' மறத்தல் வற்புறுத்தப்பட்டது.

அன்றே என்றது அப்பொழுதே எனப் பொருள்படுவது.

ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல பண்பல்ல; அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நன்றி மறத்தல் செய்ந்நன்றியறிதல் இல்லாதவர் பண்பாம்.

பொழிப்பு

ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்ல பண்பல்ல; நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.