இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0104



தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:104)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்

மணக்குடவர் உரை: தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர்.
பனையளவு- அதனுயர்ச்சி

பரிமேலழகர் உரை: தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)

இரா சாரங்கபாணி உரை: சிறு தினையளவு நன்மை செய்தாலும் அதனால் உண்டாகும் பயனை ஆராய்ந்துணர்பவர்கள் அந்நன்மையைப் பெரும் பனையளவாக மதிப்பார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.

பதவுரை: தினை-கூலவகைகளில் ஒன்று, தினைப்பயிரின் அலகு; துணை-அளவு; நன்றி-நன்மை, உதவி; செயினும்-செய்தாலும்; பனை--பனைமரம்; துணையா-அளவாக; கொள்வர்-கருதுவர்; பயன்-நன்மை; தெரிவார்-அறிபவர், அறியக்கூடியவர்.


தினைத்துணை நன்றி செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது;
பரிப்பெருமாள்: தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது;
பரிதி: ஆபத்துக் காலத்திலே தினையத்தனை நன்றி செயினும் அதனை;
காலிங்கர்: தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செயினும் மற்று அதனை;
பரிமேலழகர்: தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும் அதனை அவ்வளவிற்றாகக் கருதாது;

'தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செயினும் அதனை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறிதளவு நன்மை செய்தாலும்', 'ஒருவர் தமக்குச் செய்த உதவி தினையளவு சிறியதாயினும் அதை', 'ஒருவன் தமக்குத் தினையளவு நன்மை செய்தாலும்', 'தமக்குத் தினையளவு நன்மை செய்தாலும் அதனை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனை என்பது இப்பகுதியின் பொருள்.

பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். (பனையளவு- அதனுயர்ச்சி).
பரிப்பெருமாள்: பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பனையளவு- அதனுயர்ச்சி. பனை எண் எனினும் அமையும். இது மேற் காலத்தாற் செய்தார் முதலிய போலன்றிப் பிறவாற்றாற் செய்தெனவும் பெரிது என்றது.
பரிதி: பனையத்தனையாகக் கொள்வர் பயனறிவார் என்றவாறு.
காலிங்கர்: பனையளவாகக் கொண்டிருப்பர் செய்ந்நன்றி பயனறிவார் என்றவாறு.
பரிமேலழகர்: பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.

'பனையளவாகக் கொண்டிருப்பர் செய்ந்நன்றி பயனறிவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனறிந்தோர் பெரிய நன்மையாகக் கருதுவர்', 'பனையளவாக உயர்த்திப் பாராட்டுவார்கள் உதவியின் பயனை உணரக்கூடியவர்கள்', 'அதனால் விளையும் நன்மை முழுவதையும் ஆழ்ந்தறிகின்றவர்கள் அதனைப் பனையளவாகக் கருதுவர். (ஏனைய மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க)', 'பனையளவாகக் கருதுவர் உதவியின் பயனை அறியக்கூடியவர்கள். (தினை-பனை யென்பன அளவுப் பெயர்கள்)' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

பனையளவு பெரிய உதவியாகக் கருதுவர் உதவியின் பயனை அறியக்கூடியவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய உதவியாகக் கருதுவர் அதன் பயனை அறியக்கூடியவர்கள் என்பது பாடலின் பொருள்.
'தினை', 'பனை' குறிப்பன எவை?

எல்லா உதவிகளுமே நன்கு மதிக்கப்படவேண்டியவைதாம்.

செய்யப்பட்ட நன்மையின் பயனளவை அறிந்து கொள்ளத் தக்கவர், தினையளவே ஒருவன் உதவி செய்தாலும், அதனைப் பனை அளவு உயர்வாகக் கருதுவர்.
செய்யப்படும் எல்லா நற்செயல்களும் பயன்பாடுடையனவே. ஆனால் எல்லா உதவிகளும் நினைக்கப்படுவதில்லை. நன்றி பாராட்டப்படுவதும் இல்லை. அவ்வகை உதவி பெற்றவர்கள் நன்றி கொன்றவர்களாக இல்லாவிட்டாலும் நன்றியின் பயன் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். உதவியின் பயன் அறியக்கூடியவர்கள் அவர்கள் பெற்ற உதவி தினை அளவே போலும் இருப்பினும், அதைப் பெரிதாக மதிப்பர். அப்படி நடந்து கொள்பவர்கள் சிறந்த பண்பாளர்கள் ஆவர்.
மேலோட்டமாகப் பார்ப்போர்க்கும், பயன் தெரியாதவர்க்கும் செய்யப்பட்டது சிறு உதவியாகத் தோன்றினாலும் அவ்வுதவியின் பயனை அறிந்தவர்கள் அதை மிக உயர்வாகப் போற்றுவர். உதவி எவ்வளவிற்றாயினும் அதைச் சிறுமைப் படுத்தக்கூடாது என்பதை உணர வைக்கிறது இப்பாடல்.
தினை-பனை என்னும் ஒப்பீட்டுத் திறனோடு நன்றியுணர்வும் ஒத்து இயங்கும்போது மிகச் சிறியதும் மிகப் பெரியதாகிவிடுகிறது.

'ஆ' என்பது 'ஆக' என்னும் பொருளில், குறளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பனைத்துணையாக் கொள்வர் என்ற தொடர் பனைத்துணையாகக் கொள்வர் எனப் பொருள்படும்.

இங்கு சொல்லப்பட்டுள்ள தினை-பனை உவமையை நாலடியாரும் ஆண்டுள்ளது:
தினை அனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால்.
பனை அனைத்தா உள்ளுவர், சான்றோர்; பனை அனைத்து.
என்றும் செயினும்,-இலங்கு அருவி நல் நாட!
நன்று இல, நன்று அறியார்மாட்டு.
(நாலடியார் 344 பொருள்: தினையளவினதேயாயினும் செய்த உதவிமுன் இருக்குமானால் அதனைப் பனையளவினதாகக்கருதிக் கனிந்திருப்பர் மேலோர்; நாளும் பனையளவுஉதவிசெயினும், விளங்குகின்ற அருவிகளையுடைய உயர்ந்த மலைநாடனே, நன்மையறியாக் கீழோரிடத்தில் அவை சிறிதளவும் நன்றிபாராட்டுதல் இல்லாதனவாகும்.) என்றது அது.

'தினை', 'பனை' குறிப்பன எவை?

'தினை' 'பனை' என்பன நிலைத்திணைப் பெயர்கள் (அதாவது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தானே நகராமல் இருப்பவை). சிற்றளவைக்கும் பேரளவைக்கும் குறள் எடுத்தாளும் உவமை தினை, பனை ஆகியன. கண்ட அளவிலே வேறுபாடு புலனாகக்கூடிய இவ்விரண்டு பொருள்களைக் கொண்டு எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வண்ணம் தினை-பனை என்ற உவமை ஆளப்பட்டது. தினை என்பது எள், நெல் போன்ற சிறிய அளவிலான ஒரு கூலவகை [தானியம்]. இது புன்செய் நிலத்தில் விளைவது. பனை என்பது பெரிய அளவையை அதாவது நெடிதாய் உயர்ந்து நிற்கும் மரத்தைக் குறித்த சொல்லாகும். மிக மிகச் சிறியது - மிக மிகப் பெரியது என்கிற வேற்றுமையைக் காட்ட அமைந்த தினை-பனை ஒப்புமை வள்ளுவருக்குப் பிடித்தமானதாகத் தெரிகிறது; இக்குறள் தவிர்த்து இன்னும் இரண்டு இடங்களில் (குறள் 433, 1282) இவ்வொப்புமையை அவர் பயன்படுத்தியுள்ளார்.

தினை என்ற சொல்லை விளக்குவதில் உரையாசிரியர்களிடையே வேறுபாடு பெரிதாக இல்லை. ஆனால் பனை என்பது எதைக் குறிக்கிறது என்பதில் அவர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
பரிப்பெருமாள் பனையளவு- அதனுயர்ச்சி எனக் கூறி 'பனை எண் எனினும் அமையும்' என்று சொல்வதால் அவர் பனையை எண்ணளவையாகவும் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது. பரிமேலழகர் உரை 'தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை என்கிறது. செய்யப்படும் உதவியில் சிறுமை பெருமை காணமுடியாததால் இவ்வுரை ஏற்காது. திருக்குறளார் முனிசாமி 'தினை பனை என்பவை அளவைகள். குன்றி மணி அளவு தங்கம் என்பது போல். குறிப்பாக மருந்து விற்பனை செய்பவர்கள் மருந்துக்கான பொருள்களை நிறுத்துக் காட்டும்போது தினையெடை, பனையெடை எனக் கூறுவதுண்டு; ஆதலால் அவ்வாறு கொள்வதே பொருந்தும், பனைமரத்தைக் கொள்வது பொருந்தாது' என்கிறார். இரா சாரங்கபாணி ''கா என் நிறை’யெனத் தொல்காப்பியம் பிரித்துக் கூறுதலால் ‘பனை’ நிறையளவு குறிக்காது; ‘பனை’ ஈண்டு எண்ணுப் பெயராகக் கொள்ளல் அமையாது; பனையெடை என வழக்கிருப்பதாகக் கூறலின், தினை பனைகளை நிறுத்தலளவையாகக் கொள்ளல் பொருந்தும்' என்பார். ஏனைய மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க என்பது கா சுப்பிரமணியம் பிள்ளை உரை. இவ்வுரை பனையின் உயர முதலிய அளவைகளைக் குறிக்காமல் சிறுபயன் கொண்டு பெரும்பயனை நெடுங்காலம் தருவதைச் சொல்வது. தண்டபாணி தேசிகர் ''பனை என் அளவும்' எனத் தொல்காப்பியம் (எண்-160) ஓர் அளவுப் பெயர் எனக் கூறும்; தினை உவம ஆகு பெயராக அளவைக் காட்டுமே யன்றி அளவுப் பெயராகாது' எனக் கருத்துரைப்பார்.

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தான் (திருவள்ளுவ மாலை 5 பொருள்: தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம்) என்னும் கபிலர் பாடலும் தினை-பனைமரம் என்பனவற்றையே குறிக்கிறது.
மணக்குடவரும் பனையளவு என்பது பனைமரத்தின் உயர்ச்சி என்றே குறித்துள்ளார்.
காமாட்சி சீனிவாசன் 'தினை, பனை என்பன இப்பொருளில் (தானியத்தையும் மரத்தையும் குறித்து அவற்றின் அளவைக் காட்டுவனவாய்ப்) பிற இலக்கியங்களிலும் ஆளப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தினைப்பயிர், பனை மரம் ஆகியவற்றின் தோற்றம் கண்டு கூறும் அளவை என்பதே தினை-பனை என்பதற்குப் பொருத்தமாக உள்ளது.

'தினை' என்பது தினைப்பயிரையும் 'பனை' என்பது பனைமரத்தையும் குறிக்கும்.

தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் 'உதவியின் பயனை அறியக்கூடியவர்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்ந்நன்றியறிதல் முறை ஒன்று.

பொழிப்பு

தினையளவு சிறுநன்மை செய்யப்பட்டாலும் அதனால் உண்டாகும் பயனை உணர்பவர்கள் அவ்வுதவியைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.