இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0102



காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:102)

பொழிப்பு (மு வரதராசன்): உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும்.

மணக்குடவர் உரை: உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது.
இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

பரிமேலழகர் உரை: காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது.
(அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.)

தமிழண்ணல் உரை: உதவி தேவைப்படும் காலத்துச் செய்த உதவி ஆபத்துக் காலத்தில் செய்த உதவி, இறுதி நேரும் காலத்தில் காப்பாற்றச் செய்த உதவி என்பன தக்க காலத்தால் செய்த உதவிகளாகும். அது அளவால் சிறிதாயினும் அக்காலத்தை நோக்க, இந்த ஞாலத்தை விட மிகப் பெரியதாகும்.
அவ்வுதவியின்றேல், அவர் இந்த ஞாலத்தை இழக்க நேருமல்லவா? எனவே அவரைப் பொறுத்தவரை அது இஞ்ஞாலத்தைவிடப் பெரிதுதானே?


பொருள்கோள் வரிஅமைப்பு:
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும். ஞாலத்தின் மாணப் பெரிது

பதவுரை: காலத்தினால்-காலத்தோடு, உற்ற நேரத்தில்; செய்த-செய்த; நன்றி-உதவி, நன்மை; சிறிது-சிறியது; எனினும்-என்றாலும்; ஞாலத்தின்-உலகத்தைக் காட்டிலும்; மாண-மிக, பெருமையில், மட்சிமையில்; பெரிது-பெரியது.


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும்;
பரிப்பெருமாள்: உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும்;
பரிதி: ஒருவர்க்கு ஆபத்துக் காலத்திலே செய்த உதவிக்கு;
காலிங்கர்: தாம் இடருறுங் காலத்தின்கண் தமக்கு ஒருவர் செய்த நன்மைப் பொருளானது சிறிதே ஆயினும் அஃது இறுதிக்கண் உதவியது ஆகலான்; [இடர்-துன்பம்; இறுதிக்கண் - தம்முயிர்க்கு முடிவு நேர இருந்தபோது]
பரிமேலழகர்: ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம் தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க; [இறுதி வந்த எல்லைக்கண் - ஒருவனுக்குத் தன் உயிருக்கு முடிவு நேர இருந்தபோது; தன்னை நோக்க - உதவிய பொருளை நோக்க]
பரிமேலழகர் குறிப்புரை: அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.

'உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்த உதவி சிறிதாயிருந்ததாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்சமயத்துச் செய்த உதவி சிறியதாயினும்', 'இடருற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும்', 'ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யப்பட்ட சமய சந்தர்ப்பத்தை ஒட்டி அதை', 'ஒருவனுக்கு இன்றியமையாது வேண்டப்பட்ட காலத்தில் செய்த உதவி அளவிற் சிறிதாயிருந்தாலும் அதன் தன்மையைக் கருதும்போது அது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உற்ற நேரத்தில் செய்த உதவி சிறியதாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஞாலத்தின் மாணப் பெரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தினும் மிகப் பெரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது
பரிப்பெருமாள்: உலகத்தினும் மிகப் பெரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலத்திற் செய்தது உலகினும் பெரிது என்றது
பரிதி: பூவுலகமும் நிகரல்ல என்றவாறு.
காலிங்கர்: ஞாலத்தினும் மாட்சிமைப்பட பெரிது செய்ந்நன்றி அறிவார்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: நிலவுலகத்தினும் மிகப் பெரியது.

'உலகத்தினும் மிகப் பெரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் ஞாலத்தினும் மாட்சிமைப்பட பெரிது என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தைவிடச் சிறந்தது', 'அக்காலத்தை நோக்க அஃது உலகத்தினும் மிகப் பெரிதாம்', 'இந்த உலகத்தை விடப் பெரிதாக மதிக்க வேண்டும்', 'நிலஉலகத்தினும் மிகப் பெரிது' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.

உலகத்தைவிட பெருமையில் பெரியது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உற்ற நேரத்தில் செய்த உதவி சிறியதாயினும் அது உலகத்தைவிட மாணப் பெரிது என்பது பாடலின் பொருள்.
'மாணப் பெரிது' என்பதன் பொருள் என்ன?

தக்க சமயத்தில் செய்யப்பட்ட உதவியை அளந்து பார்க்க இயலாது.

இன்றியமையாது வேண்டப்படுங் காலத்துச் செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.
காலத்தினால் என்பது காலத்தின்கண் என்ற பொருளில் வந்தது. காலத்தினால் செய்த உதவி காலத்தின்கண் செய்த உதவி எனப்பொருள்படும். மிகவும் தேவையான காலத்தில் பிறனொருவன் செய்த உதவியானது சிறியதாக இருந்தாலும் அக்கால நிலைநோக்க அது உலகத்தினும் மிகவும் பெரியது ஆகும்.
காலத்தினால் செய்த உதவி என்பதிலுள்ள காலம் என்பதற்கு, உதவ வேண்டுங்காலம், ஆபத்துக் காலம், இடருறுங்காலம், இறுதிவந்த எல்லைக்கண் அதாவது ஒருவரது உயிருக்கு முடிவு நேர இருந்தகாலம், இடையூறு வந்த காலம், இன்றியமையாது வேண்டும் காலம், தக்க காலம். உற்ற காலம், இக்கட்டானகாலம், நெருக்கடியானகாலம் என உரையாளர்கள் விளக்கம் தருவர்.

உதவி சிறியதாக இருந்தாலும் அது தக்க சமயத்தில், பயன் மிகுதியும் அடையக்கூடிய காலத்தில் செய்யப்பட்டதாதலால் செய்ந்நன்றி அறிவார் அதன் பெருமையை உலகைவிடப் பெரியதாக எண்ணிப் போற்றுவர்.
விபத்தில் மாட்டிக்கொண்டு மயங்கிக் கிடப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது அவர் உயிரைக் காக்கும். ஒரு குவளைத் தண்ணீர்தான் என்றாலும் அது உயிரையே கொடுத்தது. இது காலத்தினால் செய்த உதவிக்கு ஓர் எடுத்துக்காட்டு. மேலும் உயிர் காக்கக் செய்யப்படும் குருதிக்கொடை, உயிருக்குப் போராடும் ஒருவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லல் மகப்பேற்று வலியில் துடிக்கும் பெண்டிருக்குச் செய்யும் உதவிகள் போன்றவை தக்க சமயத்தில் செய்யப்படும் உதவிகளாகும். உயிர் காக்கும் வேளைகளில் மட்டுமன்றி இக்கட்டான நெருக்கடியான காலத்தே, தேவை அறிந்து செய்யப்பட்ட உதவிகள் எல்லாமே நற்சமய உதவிகளாம். இவ்வுதவிகள் பொருளளவாலும் நேர அளவாலும் முயற்சியின் அளவாலும் பெரிதாக இல்லாவிட்டாலும் காலந்தப்பாது செய்யப்பட்டதால் நன்றி உணர்வு மிக்கவர்கள் அவற்றைப் பன் மடங்கு பெரியதாக மதிப்பர்.
தேவையான நேரத்தில் உதவி பெற்றவர் எந்த அளவு நன்றியுணர்ச்சியோடு இருப்பர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

'மாணப் பெரிது' என்பதன் பொருள் என்ன?

மாண் என்ற சொல்லுக்கு மடங்கு, மாட்சிமை, பெருமை என்ற பொருள்கள் உள.
மாணப் பெரிது என்பதற்கு மிகப் பெரிது என்றே பலரும் பொருள் கூறினர். செய்யப்பட்ட காலம் நோக்கி உதவியை மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது இக்குறட் கருத்து. உலகம் பெருமைக்குரியது. தக்க சமயத்தில் செய்யப்பட்ட உதவி பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெருமைப்படத் தக்கதாம். துன்புறும் வேளை உதவி செய்து துன்பம் களைவது எவ்வளவு பெருமைக்குரிய நன்மை! அது உலகைவிடப் பெரிதாகப் போற்றப்படும் என்கிறது குறள்.
'இறுதி நேரும் காலத்தில் காப்பாற்றச் செய்த உதவி என்பன தக்க காலத்தால் செய்த உதவிகளாகும். அவ்வுதவியின்றேல், அவர் இந்த ஞாலத்தை இழக்க நேருமல்லவா? எனவே அவரைப் பொறுத்தவரை அது இஞ்ஞாலத்தைவிடப் பெரிது' என விளக்கம் செய்வார் தமிழண்ணல்.
'காலத்தாற் செய்யப்படும் உழவு முதலிய முயற்சிக்கு ஏற்ப விளைபொருளைக் கொடுக்கும் ஞாலமும் காலத்தாற் செய்த நன்றியும் தம்முள் ஒருவகையால் ஒக்குமாயினும், முயற்சினளவாகப் பயன் கொடுக்கும் ஞாலம், பயனை மிகுதியாகக் கொடுக்கும் காலத்தாற் செய்த நன்றியைவிடச் சிறியது என்பது விளக்கியவாறு' என்பது தண்டபாணி தேசிகரது கருத்துரை.

மாணப் பெரிது என்பதற்கு மிகப் பெரிது அல்லது பெருமையில் பெரியது என்பது பொருள்.

உற்ற நேரத்தில் செய்த உதவி சிறியதாயினும் அது உலகத்தைவிட பெருமையில் பெரியது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்ந்நன்றியறிதல் அளவு நோக்கியதல்ல.

-
பொழிப்பு

தக்க சமயத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது உலகத்தினும் பெருமையில் பெரிதாம்