செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்
குறள் எண்:101)
பொழிப்பு: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது
|
மணக்குடவர் உரை:
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.
பரிமேலழகர் உரை:
செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது.
(கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.)
வ சுப மாணிக்கம்: உரை:
கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும் வானமும் கொடுத்தாலும் ஈடாகா.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது..
|
செய்யாமல் செய்த உதவிக்கு:
பதவுரை: செய்யாமல்-செய்யாதிருக்க; செய்த-இயற்றிய; உதவிக்கு-நன்றிக்கு.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு;
பரிப்பெருமாள்: ['செய்யாமைச் செய்த' - பாடம்.] பிறர் செய்த உதவிகளில் செய்யாமைச் செய்தலும் காலம் தப்பாமற் செய்தலும், பயன் தூக்காது செய்தலும் வலிவுடையன. அவற்றுள் செய்யாமைச் செய்தலின் பெருமை வரையறுக்கப்பெற்றது.;
பரிதி: தனக்கு முன்னே ஒரு உதவி செய்தமைக்கு அறிந்து உதவி செய்வது நிகரல்ல கபடற்று முன்செய்த நன்றிக்கு; [கபடு அற்று -வஞ்சனையில்லாமல்]
காலிங்கர்: முன்னம் தான் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் தமக்கு இடர் வந்துறுங் காலத்துச் செய்த உதவியின் பெருமைக்குக் கைம்மாறு சீர்தூக்கின் அவர்க்கு; [கைம்மாறு - பிரதி உபகாரம்]
பரிமேலழகர்: தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு;
முன்னம் தான் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் தமக்கு ஒருவன் செய்த உதவிக்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'செய்யாமல்' என்றதற்கு 'செய்யாதார்' என்று மணக்குடவரும், செய்யாமை' என்று பரிப்பெருமாளும் பாடம் கொண்டனர். '
இன்றைய ஆசிரியர்கள் 'முன் உதவி செய்யாதிருக்க ஒருவன் தானே முன்வந்து செய்த உதவிக்கு', 'நம்மிடத்தில் ஓர் உதவியும் முன்னால் பெறாதவராக இருந்தும் தக்க சமயத்தில் ஒருவர் நம்க்குத் தாமாகவே செய்கிற உதவிக்கு', 'தான் உதவி யாதும் செய்யாதிருக்க தனக்கு மற்றொருவன செய்த உதவிக்கு', ' தான் முன் உதவி செய்யாமல் தனக்குப் பிறர் செய்த உதவிக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு என்பது இப்பகுதியின் பொருள்.
வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.:
பதவுரை: வையகமும்-மண்ணுலகமும்; வானகமும்-விண்ணுலகமும்; ஆற்றல்-ஒத்தல்; அரிது-உண்டாகாது.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது [நிறையாற்றுதல் - எடையால் ஒத்தல்]
பரிதி: பூமி ஆகாசம் இரண்டும் நிகரல்ல.
காலிங்கர்: இம்மை மறுமை இரண்டுலகும் நிறையாற்றல் அரிது என்றவாறு
பரிமேலழகர்: மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர். [மறித்து - திருப்பி]
'மண்ணுலகும் விண்ணுலகும் நிறையாற்றல் அரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது', ' ஈடாக மண்ணுலகம் விண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் போதாது', 'கைம்மாறாக மண்ணுலகமும் விண்ணுலகமும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா', ' மண்ணுலகமும் விண்ணுலகமும் ஈடாகா ' என்றபடி பொருள் இப்பகுதிக்கு உரைத்தனர்.
மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நாம் கேட்காமலேயே நம் தேவை அறிந்து செய்த உதவிக்கு இவ்வுலகமும் வானுலகமும் ஈடாகா என்னும் பாடல்.
முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்பது பாடலின் பொருள்.
நாம் ஒன்றும் செய்யாமல் ஒருவர் நமக்கு ஏன் உதவி செய்கிறார்?
|
செய்யாமல் என்ற சொல்லுக்கு செய்யாமலிருந்தாலும் என்பது பொருள்.
செய்த உதவிக்கு என்ற தொடர் (தானாக முன்வந்து) செய்யப்பட்ட உதவிக்கு என்ற பொருள் தரும்.
வையகமும் வானகமும் என்றதற்கு இவ்வுலகத்தையும் வானுலகத்தையும் என்று பொருள்.
ஆற்றல் அரிது என்ற தொடர் போதியதாகாது அல்லது ஒப்பாகாது எனப் பொருள்படுவது.
|
நாம் ஒருவர்க்கு ஒரு உதவியும் செய்யாமல் இருந்தபோதிலும் அவர் நமக்குச் செய்த உதவிக்கு மண்னுலகமும் விண்ணுலகமும் ஈடாகா.
செய்யாமல் செய்த உதவி என்பதற்கு முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த உதவி, முன்னம் தான் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் தமக்கு இடர் வந்துறுங் காலத்துச் செய்த உதவி, காரணமில்லாமல் செய்த உதவி, பயன் கருதுவதை மனத்திற் செய்யாது செய்த உதவி, திருப்பிச்செய்ய முடியாமல் செய்துவிடும் உதவி,
யாரும் செய்யாமல் கைவிட்ட போழ்து செய்த உதவி, செய்ய இயலாது, சிரமத்தின் ஊடே செய்யப்பட்ட உதவி, தான் செய்யாமல் பிறரைக் கொண்டு செய்த உதவி, வெளிக்கு உதவி செய்வதாகக் காட்டிக் கொள்ளாமல் ஒருவர் அவ்வப் போது செய்துவரும் உதவி என்று பலவாறாகப் பொருள் கண்டனர். முன்னர் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவர் பிறருக்கு செய்த உதவி என்பது பெரும்பாலோர் கருத்து. இவற்றினும் 'கேளாமலே முன்வந்து செய்த உதவி' என்ற வ சுப மாணிக்கம் உரைப்பொருள் சிறப்பாக உள்ளது.
குறளின் பிற்பகுதி உதவியின் அளவைச் சொல்கிறது. கடல் பெரிது. கடலினும் அதை உள்ளடக்கிய இந்த நிலவுலகம் பெரிது. அதனினும் அளவிட்முடியாத வானுலகம் இன்னும் பெரிது. நிலவுலகம், வானுலகம் இவை இரண்டையும் விடப் பெரிதாக எண்ணப்படவேண்டியது செய்யாமல் செய்த உதவி. இவ்வளவு பெரிய அளவுடையது அந்நற்செயல் என்று ஏன் சொல்லப்பட்டது? ஒருவர்க்கு ஓர் உதவி தேவைப்படுகிறது. யாரிடம் சென்று கேட்பது என்று புரியாமல்லும் நாண்கொண்டும் ஆவர் வாளாவிருக்கிறார். இவர் தேவையை அறிந்து, தக்க சமயத்தில், மனமுவந்து உறவினரோ, ந்ண்பரோ, அயலார் ஒருவரோ தானே முன் வந்து அதைச் செய்து விடுகிறார். அப்பொழுது உதவி பெற்றோர் மனநிலை எவ்விதம் இருக்கும்? கடவுளே அம்மனிதர் வடிவில் வந்து உதவினார என நினைப்பர். அவ்வுதவிக்கு ஒப்பு எதுவும் இல்லை என்றும் அதற்கு மண்ணுலகும் விண்ணுலகும் ஒரு சேரத் தந்தாலும் ஈடு ஆகாது. என்று உணர்வர். வானமும் நிலமும் ஈடில்லை என்று சொல்லப்பட்டதால் செய்யாமல் செய்யப்பட்ட உதவி பெற்றார், அவ்வளவு நன்றிவுணர்வோடு இருக்கவேண்டும் என்பது கருத்து.
செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று பரிப்பெருமாள் உரை கூறினார். கைம்மாறாகச் செய்தற்கு இயலாமை உள்ள இடத்து(காட்டாக ஏழைகளுக்கு)ச் செய்த உதவி என்று இதற்குப் பொருள். பயன் கருதுவதை மனத்திற் செய்யாது செய்த உதவி என்றும் கூறுவர்.
கம்பரும் இக்குறட்கருத்துக் கொண்ட பாடலை யாத்துள்ளார். அது: .
உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறு ஆக.
மதம் யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ (கம்ப இராமாயணம்,, கிட்கிந்தா காண்டம்., கிட்கிந்தைப் படலம், -56)
(பொருள்: மதங்கொண்ட யானையைப் போன்ற வீரனே! (தான் ஒருவனுக்கு) முன்பு எந்த உதவியும் செய்யாமலிருக்க(த் தனக்கு) அவன் செய்த; உதவிக்கு உதவியாக; வேறு கைம்மாறு; என்ன உள்ளது? ஒன்றும் இல்லை.)
|
நாம் ஒன்றும் செய்யாமல் ஒருவர் நமக்கு ஏன் உதவி செய்கிறார்?
நம்மிடத்தில் எந்த உதவியையும் முன்னால் பெற்றிராத ஒருவர் அவராக நமக்குத் தக்க சமயத்தில் செய்த உதவி பற்றிப் பேசுகிறது இப்பாடல். பொதுவாக உதவி செய்ப நினைப்போர்
ஒருவர் செய்த ஏதோ ஒன்றுக்குக் கைம்மாறாக உதவி செய்வர். இது ஈடு செய்யும் உதவி)யாகும். ஆனாலும் தான் எந்த ஒரு உதவியும் பெற்றிராதபொழுது ஒருவர் தானே முன்வந்து பிறரின் தேவை அறிந்து உதவி செய்யும் பெருங்குணத்தவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இது இயல்பாகவே அவர்களிடம் உள்ள உதவி செய்யும் மனப்பான்மையாலும் கருணைக் குணத்தாலும் உண்டாவது.
|
முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்பது இக்குறட்கருத்து.
நாம் உதவி செய்யாமல் நமக்குச் செய்யப்பட்ட அளப்பறிய செய்ந்நன்றியறிதல் வேண்டும்
நாம் கேளாமல் தாமே முன்வந்து நமக்கு ஒருவர் செய்த உதவிக்கு நிலவுலகும் வானுலகும் கொடுத்தாலும் ஈடாகா.
|