இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0088



பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:88)

பொழிப்பு (மு வரதராசன்): விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.

மணக்குடவர் உரை: விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

பரிமேலழகர் உரை: பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.
("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.)

இரா சாரங்கபாணி உரை: விருந்தினரைப் பேணி விருந்தோம்பலாகிய வேள்விப்பயன் எய்தார் பொருளை வருந்திக் காத்துப் பின் இழந்து திக்கற்றவரானோம் என வருந்திக் கூறுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்

பதவுரை: பரிந்து-வருந்தி; ஓம்பி-காத்து; பற்று-பற்றுக்கோடு, தொடர்பு; அற்றேம்=இழந்தேம்; என்பர்-என்று சொல்வர், என்று இரங்குவர்; விருந்து-விருந்தினர்; ஓம்பி-பேணி; வேள்வி-வேட்டல், உதவிசெய்வது; தலைப்படாதார்-ஈடுபடாதவர், எய்தும் பொறியிலாதார்.


பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்;
பரிப்பெருமாள்: வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்;
பரிதி: இந்த சென்மத்தில் தரித்திரராய் தமக்கு ஒருவர் துணையற்றாம் என்று வியாகூலப்படுவர்; [சென்மத்தில்-பிறப்பில்; வியாகூலப்படுவர்-வருந்துவர்]
பரிமேலழகர்: நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; [பற்றுக்கோடு-ஆதாரம்; பற்றிக்கரையேறற்குரிய கொழுகொம்பு போன்றவர்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: "ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார்.

'பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஓம்பி என்றதற்குப் பரிதியும் பரிமேலழகரும் பொருள் காத்தல் பற்றிச் சொல்ல, மணக்குடவர் உடம்பைப் பேணுவது பற்றிக் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காத்த பொருளையும் இழந்து பின் வருந்துவர்', 'ஈட்டிய பொருளை வருந்திக் காத்துப் பின் இழந்து உதவி அற்றேம் என்று வருந்துவர்', 'ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டோம் என்று மிகவும் கடினமான துறவறத்தை மேற்கொண்டு நோன்பு காப்பார்கள்', 'தமது கைப்பொருளை வருந்திப் பாதுகாத்தும் அதனை யிழந்து ஆதரவற்றவராயினேம் என்று கூறி வருந்து நிலையினராவர்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பொருளை வருந்திக் காத்து பின் இழந்து ஆதரவற்றோம் என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார்,
பரிப்பெருமாள்: விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இது விருந்தோம்புவார்க்குக் குற்றம் என்னை என்றார்க்குக் கூறப்பெற்றது.
பரிதி: தனத்தைத் தேடிக்கொண்டு தன்மம் செய்யாதவர் அதனால் தானமும் விருந்தும் செய்து உபசரிப்பதே நன்று என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். [பொறியிலாதார்-செயற் பயனிலாதார்]
பரிமேலழகர் குறிப்புரை: 'வேள்வி' ஆகுபெயர். [வேள்வி அதனாலாகிய பயனைக் குறித்தலின் கருவியாகுபெயர்]

விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயன் எய்தும் பொறியிலாதார் என வேள்விப்பயன் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர்', 'விருந்தினரை ஓம்பி அதனால் வரும் பயனை அடைய முடியாதார்', 'வீட்டோடிருந்து விருந்தினரை உபசரிக்கும் நல்ல காரியத்தைச் செய்யத் தெரியாதவர்கள்தாம்', 'தன்னிடத்துள்ள பொருளைக் கொண்டு விருந்தோம்பி அதன் பயனை அடையாதவர்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

விருந்தோம்புதல் என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விருந்தோம்புதல் என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் வருந்திக் காத்துப் பின் (செல்வமெல்லாம்) இழந்து ஆதரவற்றேம் என்று சொல்வர் என்பது பாடலின் பொருள்.
விருந்தோம்பாமைக்கும் இழப்பு ஏற்படுதற்கும் என்ன தொடர்பு?

செல்வம் உள்ளபோதே விருந்தறம் செய்க.

விருந்தோம்பல் வேள்வியில் ஈடுபடாமல் தாம் கட்டிக்காத்த பொருள்களை இழந்தபின்னர் ஒரு ஆதரவும் இல்லாமல் போய்விட்டோமே என வருந்திக் கூறுவர்.
விருந்தோம்பல் என்ற சொல் விருந்தினர்க்குச் சோறிட்டு பசியாற்றுவதைக் குறிப்பது. இக்குறளிலுள்ள வேள்வி சென்ற சொல்லும் அப்பொருளிலேயே வந்துள்ளது.
ஒருவர் செல்வம் மிகுந்திருந்த நாட்களில் உணவுக்கொடைக்காக ஏதும் செலவழிக்காமல் பொருள்களைச் சேர்த்துக்கொண்டேயிருந்தார். மிகு துன்பப்பட்டு, முனைந்து, வருந்தி அச்செல்வத்தைப் பேணிக்காத்து வந்தார். காலப்போக்கில் அவரது செல்வம் மறைந்தது. செல்வமில்லாததால் சுற்றம் எதுவும் இப்பொழுது அவர்க்கு இல்லாமல் போய்விட்டது. அதன் தொடர்ச்சியாகச் சமுதாயத் தொடர்புகளும் விலகின. அன்று பசியாற்றல் அறம்பற்றி அறிந்திருந்தும் அதைச் செய்ய எண்ணாமல் இருந்து விட்டோமே. எந்த ஆதரவுமின்றி தனிமைப்பட்டு நிற்கிறேமே என்று அவர் கழிவிரக்கத்துடன் கூறுகிறார். இப்பொழுது வருந்தி என்ன ஆகப்போகிறது? செல்வத்தின் பயன்களுள் இன்றியமையாதது விருந்தோம்புதல். அதை ஒரு வேள்வியாகப் போற்றவேண்டும். ஈட்டிய பொருளைப் பசியாற்றல் அறம் செய்து மகிழ்ச்சியடைதல் வேண்டும் என்பது கருத்து.

அற்றேம் என்ற சொல்லுக்கு இழந்தேம் என்பது பொருள். பற்றற்றேம் என்றுள்ளதால் வேறு பல இழப்புகளும் உரைப்பொருளாகக் கூறப்பட்டன. இதனால் இக்குறளுக்கு வேறுவகையாகவும் விளக்கினர். இவர்கள், 'விருந்தினரைப் பேணுதலை மேற்கொள்ளாதவர்களே, மிக வருந்திப் 'பற்றற்றேம்' என்று துறவு பூண்டு இடர்ப்படுவர்', 'விருந்தினர்க்கு உபசாரம் செய்வதை மேற்கொள்ளாதவர்கள் பரிவோடு பல நோன்புகளைக் காத்து பற்றுகளை விட்டுவிட்டோம் என்பார்கள்', 'விருந்தோம்பாதார் காசின்மையால் இரந்தோ, எப்படியோ வயிறுவளர்த்து உடம்பை மட்டும் பேணி எமக்குப் பொருட்பற்றுச் சிறுதுமில்லை என்று பேசித்திரிவர்', 'சோம்பேறிகள் விருந்தோம்பலுக்கு அஞ்சிப் புறத்துறவு பூண்டொழுகலைக் கண்டு எள்ளி நகையாடுகின்றது இப்பாடல்' என்றவாறு உரைத்தனர்.
நிலையாத பொருள் நிலையும் போதே விருந்தோம்பலை மேற்கொள்க என்பது இக்குறட் கருத்தாதலின் பொருள்இழப்பு பற்றியே இக்குறள் பேசுகிறது என்பதே பொருத்தம்.

இக்குறளில் பயிலப்பட்டுள்ள வேள்வி என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் வேள்விப்பயன் எனப் பொருள் கொண்டார். அவர் உரைப்படி, நெருப்பு வளர்த்து அவி சொரிந்து வேண்டுதல் செய்வதால் உண்டாகும் பயன் விருந்தோம்புவதால் கிடைக்கும் என்பது. ஆனால் வள்ளுவர் குறிப்பிடுவது தெய்வத்தின் பெயரால் உணவு, மற்றும் விலைமதிப்புள்ள பொருள்களைத் தீயிலிட்டு பலவேறுபட்ட வேண்டுதல்கள் குறித்துச் செய்யப்படும் யாகம் எனப்படும் வேள்வியை அல்ல. ... விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு குறள் (81) என்ற இவ்வதிகாரத்து முற்குறளில் விருந்தோம்பி வேளாண்மைசெய்தல் என்றது விருந்திட்டு உதவி செய்தல் என்ற பொருளில் வந்தது. இங்குள்ள வேள்வி என்ற சொல்லும் அதே பொருளில் ஆளப்பட்டுள்ளது. தொண்டு விருப்பமுடன் செய்யப்படும் பசியாற்றுதலே விருந்தோம்பல் என்னும் வேள்வியாகும். பொருள்களை வீணடிக்காமல் அவற்றை உணவு வேண்டி இருப்பவர்களுக்கு உதவலாம் என்ற பொருளில் வேள்வி என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

விருந்தோம்பாமைக்கும் இழப்பு ஏற்படுதற்கும் என்ன தொடர்பு?

இதனைச் செய்யின் இன்ன பயன் விளையும் என்று சில இடங்களில் கூறும் வள்ளுவர் இதனைச் செய்யாது விடின் இன்ன தீமை உண்டாகும் என்று பிற இடங்களில் வலியுறுத்துவார். இங்கு விருந்தினரை ஓம்பாதார் வறுமை யுழப்பர்‌ அதாவது தமது செல்வத்தை இழந்து வருந்துவர் என்கிறார்.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று (83 பொருள்: வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை துயருற்று கெட்டுப் போவதில்லை) என்று இவ்வதிகாரத்தில் முன்பு கூறப்பட்டது. இங்கு விருந்தினைப் பேணாதவரது வாழ்க்கை பாழ்படுதல் சொல்லப்படுகிறது.
செல்வம் நிலையற்றது. செல்வத்தின் சிறந்த பயன் உணவிடுதல். எனவே பொருள் இருக்கும்போதே உணவு நாடி வந்தோர்க்கு விருந்திடல் வேண்டும். விருந்தோம்ப மனமின்றி பொருளை என்னதான் காத்து வைத்தாலும் அது போகும் வேளையில் யாராலும் தடுக்க முடியாது. அப்படி இழந்தபின் எவ்விதம் விருந்தோம்புவது? விருந்தோம்பாமைக்கும் இவ்விழப்புக்கும் நேர் தொடர்பு இல்லை; தேடிய பொருளைத் துன்புற்றுக் காத்து, உணவுக்கொடைக்கு உதவாமலும், தம்மாலும் துய்க்கப்படாமலும் தொலைந்து போகும் என்பது ஓர் அறன்வலியுறுத்தும் கருத்துதான். பொருள் இழப்பு வரவுக்கு மீறிய செலவு செய்ததால் ஏற்பட்டிருக்கலாம்; தொழிலில் பண இழப்பு ஏற்பட்டிருக்கலாம்; கொள்ளை போயிருக்கலாம். இவைபோன்ற வேறு காரணங்கள் இருந்தாலும், இங்கு சொல்லப்படுவது விருந்தோம்பாமையால் செல்வம் இழந்தான் அல்லது விருந்தோம்பல் செய்திருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது என்பதல்ல. விருந்தோம்பி இழந்திருந்தால் அறம் செய்தோமே என்ற மனநிறைவாவது ஏற்பட்டிருக்கும். இப்போழுது அதற்கும் வாய்ப்பு இல்லை. ஐயோ, நாடி வந்தோர்க்கு உணவிட்டிருக்கலாமே என்று இப்பொழுது வருந்தி பயன் இல்லை என்பது செய்தி.
உணவிட மனமில்லாது காத்து வைத்த செல்வம் எல்லாவற்றையும் இழந்த நிலையில் விருந்தோம்பாமல் போனோமே என வருந்துவது காலங்கடந்த உணர்தலாகிவிடும். எனவே வாய்ப்பு உள்ளபோதே பசியாற்றல் போன்ற அறங்கள் செய்க என்பது கருத்து.

பொருளை வறிதே காத்து இழந்து பின் வருந்தாமல் விருந்தோம்பலில் ஈடுபடுக என்பது அறிவுறுத்தப்படுகிறது.

விருந்தோம்புதல் என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் பொருளை வருந்திக் காத்து பின் இழந்து ஆதரவற்றோம் என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விருந்தோம்பல் ஓம்பாதவர் கைப்பொருளைத் தொலைத்து ஒட்டும் உறவுமில்லாமல் நிற்பர்.

பொழிப்பு

விருந்தோம்பல் வேள்வியில் ஈடுபடாதவர் வருந்திக் காத்த பொருளையும் இழந்தோமே எனச் சொல்வர்.