இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0083



வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:83)

பொழிப்பு (மு வரதராசன்): தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

மணக்குடவர் உரை: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

பரிமேலழகர் உரை: வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை.
(நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)

இரா இளங்குமரனார் உரை: நாள்தோறும் தன்னிடத்து வரும் விருந்தினரைப் பேணுபவன் இல்வாழ்க்கை அவ்விருந்து செய்தல் வழியால் துன்புற்றுக் கெட்டுப் போவதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.

பதவுரை: வரு-வருகின்ற; விருந்து-விருந்தினர்; வைகலும்-நாடோறும்; ஓம்புவான்-பேணுபவன்; வாழ்க்கை-வாழ்வு, வாழ்தல்; பருவந்து-துன்புற்று; பாழ்படுதல்-கெட்டுப்போதல்; இன்று-இல்லை.


வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம்; ,
பரிப்பெருமாள்: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம்;
பரிதி: வருகிற விருந்தைப் பார்த்து நாளும் உபசரிப்பது நன்று. அங்ஙனம் உபசரிக்கிறவன் வாழ்க்கை;
காலிங்கர்: தன்னில்லத்து வருகின்ற விருந்தினை நாடொறும் குறிக்கொண்டு பூசிக்கும்; அவன் இல்வாழ்க்கையானது;
பரிமேலழகர்: தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; [புறந்தருவானது-பாதுகாப்பானது]

'தன்னில்லத்து வருகின்ற விருந்தினை நாடோறும் போற்றுவானது இல்வாழ்க்கை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக;', 'தம் இல்லம் நோக்கி வருகின்ற விருந்தினரை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை', 'தினந்தினம் வருகிற விருந்தினர்களுக்கெல்லாம் உணவளித்து உபசரிகின்றவனுடைய வாழ்க்கை', 'நாடோறும் வருகின்ற விருந்தினரைப் பேணி வாழ்பவனது இல்வாழ்க்கையானது' என்ற பொருளில் உரை தந்தனர்.

வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

பருவந்து பாழ்படுதல் இன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
பரிப்பெருமாள்: வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: விருந்தோம்பலால் பயனென்னை? என்றார்க்குப் பயன் கூறுவார் முற்படச் செல்வங் கெடாது எனக் கூறினார்.
பரிதி: வருந்திப் பாழாதல் இல்லை என்றவாறு.
பரிதி குறிப்புரை: அது எது எனில், சரீரத்தில் ஒரு பரு வந்து விதனமான காலத்துச் சீப்பரிய விதனம் மாறுவது போல வருவிருந்து உபசரிக்கில் வினையறும் என்றவாறு. [பரு- வெப்பத்தால் முக முதலிய இடங்களிற் கிளைக்கும் நோய்; விதனம்- துன்பம்; சிப்பரிய- நீக்கற்கு அரிய]
காலிங்கர்: துயருற்று நசிக்குமாறு வருதல் இல்லை என்றவாறு. [நசிக்குமாறு-அழியும் வகையில்]
பரிமேலழகர்: நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. [நல்குரவு-வறுமை]
பரிமேலழகர் குறிப்புரை: நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.

'வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்வு துன்பப்பட்டு அழியாது', 'துன்புற்றுக் கெடுதல் இல்லை', 'அதனால் வறுமையுற்றுக் கெட்டுப் போகுமென்பது இல்லை', 'வறுமையால் வருந்திக் கெடுவதில்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

துயருற்று கெட்டுப் போவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை பருவந்து கெட்டுப் போவதில்லை என்பது பாடலின் பொருள்.
'பருவந்து'' என்றால் என்ன?

நாளும் வரும் விருந்தினரைப் பேணிக்கொள்க.

தன்னை நாடி வருகின்ற விருந்தினரைப் போற்றுகிற இயல்புடையவனின் வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் இல்லை.
நாளும் விருந்தோம்பல் செய்யும் ஒருவனுக்குப் பொருட்குறை வந்து விடாது என்பதைச் சொல்ல வந்த பாடல் இது.
வருவிருந்து- என்றதற்கு வந்த, வருகின்ற, வரும் விருந்து என முக்காலத்தினும் விரித்துப் பொருள் கொண்டார்கள் என்றாலும் 'வருகின்ற விருந்தினர்' என்பதே பொருத்தமானதாகும் வருவிருந்து என்ற சொல்லாட்சியில் தம்மைப் பேணுவோன் நிலையுணர்ந்தே அவனை நோக்க விருந்தினர் மனங்கொள்வர் என்பது தொனிக்கிறது என்பார் திரு வி க.. 'முக்காலத்திலும் ஒத்தியல் நிகழ்ச்சியை நிகழ்காலம் தெரிவிக்குமாதலால் வருகின்ற விருந்தை ஓம்பும் முறையைக் கொண்டே வந்த விருந்தையும் வரும் விருந்தையும் எங்ஙனம் ஓம்புவர் என்பது பெறப்படுதலான்' என்பார் தண்டபாணி தேசிகர்.
வைகலும் என்றதால் உணவு வேண்டிவருவோரை நாள்தோறும் சலிப்பின்றி ஆதரித்தல் வேண்டும் என்பது பெறப்படும். இவ்விதம் நாள்தோறும் வருகின்ற விருந்தினர்க்கு உணவளித்து பசியாற்றுபவனுக்குப் பொருள்முடை ஏற்பட்டு. அதன் காரணமாக அவன் துன்புற நேரிடலாம். ஆனால் பாடல் அவன் துன்புற மாட்டான் என்கிறது. ஏன் அவன் செல்வம் குறையாது என்பதற்கு 'நாள்தோறும் விருந்தினரைப் பேணுபவனாயிருப்பவன் சோம்பலின்றி முயற்சியுடையவனாய் இருப்பான். எனவே அவனது ஆக்கத்தில் தேக்கம் இருக்காது' என்று விளக்கம் தருவர். விருந்தைப் பேணும் செயலுணர்வினாலும் தூண்டப்பெற்று மேலும் மேலும் வரவைப் பெருக்கிக்கொள்ளும் உயர் நோக்கில் பொருள் ஈட்டும் முயற்சியில் அவன் ஈடுபடுவதால் வறுமைப்படமாட்டான் என்பது மற்றொரு விளக்கம். விருந்தோம்பலால் வறுமைத் துன்பமோ பிற துன்பங்களோ உண்டாகா; மாறாகச் செழுமையே சென்று சேரும் என்பது உட்கருத்து.
விருந்தோம்புவான் ஆக்கம் பெற்று மேலும் செல்வம் சேர்ப்பான் என்று சொல்லப்படவில்லை; அவனுக்குத் துன்பம் வராது; அவனது இல்வாழ்கை வறுமையுற்றிடும் நிலையிலும் வருந்திடும்படி பாழ்படுவதில்லை என்று கூறப்பட்டது.

நல்லறங்களைக் கைக்கொள்வோர் நன்மையடைவர், அவர் செல்வம் குறையாது என்ற இக்குறள் நடையில் அமைந்த பிற குறட்பாக்கள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (இல்வாழ்க்கை 44 பொருள்: பழிவந்துவிடுமோ என்று அஞ்சியும் பகுத்து உண்டலையும் உடைய இல்வாழ்க்கை எக்காலத்திலும் இடரின்றிப் பயணிக்கும்), பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது (ஈகை 227 பொருள்: பங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை), துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு (இனியவைகூறல் 94 பொருள்: எல்லாரிடத்தும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல் பேசுகின்றவர்களுக்குத் துன்பமுறச் செய்யும் வறுமை இல்லையாம்) ஆகியன. எனினும் உலகில் நல்லோர் வறுமையினால் வருந்துவதும் துன்பமடைதலும் உண்டு என்பதையும் வள்ளுவர் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (அழுக்காறாமை 169 பொருள்: பொறாமை கொண்ட மனமுடையானது வளமையும் செம்மையான மனமுடையவனது வறுமையும் ஆராயப்படும்) போன்ற குறள்களில் எண்ணிப் பார்த்துள்ளமையும் நினையத்தக்கது.

'பருவந்து'' என்றால் என்ன?

'பருவந்து' என்ற தொடர்க்கு வருத்தமுற்று. வருந்தி, துயருற்று, நல்குரவான் வருந்தி, தரித்திரம் (வருவதில்லை), வறுமையால் வாடி, வறுமையால், துன்பப்பட்டு, துன்புற்று, வறுமையுற்று, வறுமையால் வருந்தி, வறுமையால் துன்புற்று, வறுமையால் துன்பமடைந்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பருவந்து என்றதற்குப் பொருள் துன்புறுதல் ஆகும். பருவா என்பது வேர்ச்சொல் என்பர்.
பருவருதல் என்றதற்கு வருந்துதல் என்பது பொருளாதலால், எதனால் வருந்துதல் எனக் கேட்டு, வறுமையுற்று என்ற சொல்லை வருவித்து, நல்குரவான் வருந்திக்கெடுதல் எனப் பொருள் கொள்கிறார் பரிமேலழகர்.
பருவந்து என்ற ஒரு சொல்லைப் பரு, வந்து என இரண்டாகப் பிரித்து உடம்பிலே பருவானது தோன்றி எனப் பொருள் கூறி அதற்கு விளக்கமாக 'உடலில் பருவாக வந்து வருத்தம் விளைக்கின்றபோது பருவிலே உள்ளே உள்ள 'சீ' யானது வெளிப்பட, வருத்தம் மாறுவது போல, வருவிருந்தினை உபசரிக்க துன்பம் அறும்'' என்று பரிதி உரைத்தார். இது புதுமையாக இருந்தாலும் சிறப்பாக இல்லை.
இக்குறட்பாவில் சொல்லப்பட்டுள்ள பருவரல், வாழ்க்கை பற்றிய துயருறுதல் ஆதலால் அது ஒருவனுக்குக் குடும்ப சமுதாயச் சூழல்களினான் வரும் வறுமை, பசி, பொறாமை முதலிய இடையூறுகளைக் குறித்தது என்பார் கா அப்பாத்துரை.
செல்வம் படைத்தோர் பொதுவாகப் பொருளைத் தவறான வழியில் செலவழித்து 'பருவந்துபாழ்படுவது' என்பது உலகியல். அத்தகையோர்க்கு ஒரு முற்காப்பாக அறுவுறுத்தும்படி இப்பாடல் அமைகிறது. விருந்தோம்பும் பயனைச் செல்வர்க்கு கூறிய நல்லறிவுரையாகக் கொள்ளலாம்.

'பருவந்து' என்பதற்குத் துயருற்று என்பது பொருள்.

வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை துயருற்று கெட்டுப் போவதில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விருந்தோம்பல் செய்வதால் ஒருவரது வாழ்க்கை குறைவுபட்டுப் போவதில்லை.

பொழிப்பு

நாள்தோறும் தம் இல்லம் நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது வாழ்க்கை துன்புற்றுக் கெடுதல் இல்லை