இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0082



விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:82)

பொழிப்பு (மு வரதராசன்): விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

மணக்குடவர் உரை: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

பரிமேலழகர் உரை: சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: சாவை நீக்கும் அமிழ்தமாக இருந்தாலும் தன்னைக் கருதி வந்த விருந்தினர் வீட்டுக்குப் புறத்தேயிருப்பத் தான் மட்டும் அதனை உண்ணுதல் விரும்பத் தக்கதன்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பதவுரை: விருந்து-விருந்து, விருந்தினர்; புறத்ததா-புறத்தது ஆக, வெளியில் இருப்ப; தான் உண்டல்-தான் (தனியாக) உண்ணுதல்; சாவா-சாவாமை; மருந்து-மருந்து; எனினும்-என்றாலும்; வேண்டல்-விரும்புதல்; பாற்று-பான்மைத்து, தன்மைத்து, முறைமையுடையது; அன்று-அல்ல.


விருந்து புறத்ததாத் தானுண்டல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல்;
பரிப்பெருமாள்: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல்;
பரிதி: விருந்து புறத்திலே இருக்கத் தான் உண்பது நன்றல்லது;
காலிங்கர்: விருந்து தன்கடைப் புறத்ததாகப்பெற்று வைத்துத்தான் அகத்திலிருந்து உண்டாலாகின்ற இது;
பரிமேலழகர்: தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்;

'விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'வந்த விருந்து வெளிப்புறம் இருக்க', 'விருந்தினர் வெளியே இருக்க', 'ஏதானாலும் பிறருக்கும் கொடுத்து உண்ணவேண்டும்', 'தன்னிடம் வந்த விருந்தினர் வீட்டுக்கு வெளியே இருக்கத் தானே தனியாக உண்டல்' ,என்ற பொருளில் உரை தந்தனர்.

விருந்து தன்இல்லத்துப் புறத்து இருக்கத் தானே உண்பது என்பது இப்பகுதியின் பொருள்.

சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
பரிப்பெருமாள்: சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: சாவா மருந்தாவது தன்னளவிற்கும் குறைந்து இதனானே இவ்வுயிர் கிடக்கும். இதனிற் குறையிற்சாம்; என்னும் அளவிற்றாய சில்லுணவு இதனை உலகத்தார் உயிர்போகாக் கஞ்சி என்பர். அமிழ்து என்பாரும் உளர். இது வாழ்வோர்க்கேயன்றி வாழாதாரும் விருந்து ஓம்பிட வேண்டும் என்றது.
பரிதி: நஞ்சாகிலும் கூடவிருந்து புசிப்பது நன்று என்றவாறு.
காலிங்கர் சாவாப்பதம் தருவதாகிய அமரர் உலகத்து அமுதமே ஆயினும் தான் விரும்பும் பான்மை நன்றன்று.
காலிங்கர் குறிப்புரை தானுண்டு சாகின்ற சோற்றினை மற்றில்லறத்திற்கு நல்வழிப்பாடாகிய விருந்து தன்கடைப் புறத்ததாகப் பெற்று வைத்து மற்றிதனைத் தானுண்டல் எக்கூற்றினிடத்ததோ அறிகிலேன் என்றவாறு.
பரிமேலழகர்: உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
பரிமேலழகர் குறிப்புரை: சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.

'சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் விரும்புதல் முறைமையுடைத்து அன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் உண்ணல் ஆகாது', 'கிடைத்தற்கரிய அமிழ்தமே ஆயினும் தான் மட்டும் தனியே உண்டல் விரும்பத்தக்கது அன்று', 'சாகாமல் இருக்கச் செய்வதான தேவாமிர்தத்தை உண்பதானாலும் விருந்தாளி இல்லாமல் தானே உண்பது விரும்பத்தக்கதல்ல', 'உண்ணப்படும் பொருள் சாவைப் போக்கும் அமிழ்தமாக இருந்தாலும் விரும்பத்தக்கது அன்று 'என்றபடி பொருள் உரைத்தனர்.

சாகாமல் இருக்கச் செய்வதான மருந்தேயானாலும் விரும்பத்தக்கது அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சாவா மருந்தேயானாலும், விருந்து தன்இல்லத்துப் புறத்து இருக்கத் தானே உண்பது விரும்பத்தக்கது அல்ல என்பது பாடலின் பொருள்.
'சாவா மருந்து' என்றால் என்ன?

விருந்து வெளியே காத்திருக்கத் தான்தின்னியாக எப்படி மனம் உடன்படுகிறது?

தன்னை நாடிவந்து உதவி கேட்கும் விருந்து வெளியே பசியோடிருக்க, தான் மட்டும் உண்ணுதல் விரும்பத்தக்கதல்ல - தாம் உண்ணும் அது சாகாமை வழங்கும் அரிய மருந்தென்றாலும்.
விருந்தினரை விடுத்து உண்ணல் முறைமை ஆகாது எனக் கூறுகிறது இப்பாடல்.
முற்காலத்தில், இல்லத்தின்முன் உள்ள புறத்திண்ணையில் விருந்துநாடி வருவோர் அமருவர். வீட்டிலுள்ளோர் உண்ணப்போகும்போகும் முன்னர் வெளியில்வந்து யாராவது விருந்தினர் அத்திண்ணையில் காத்திருக்கிறாரா என்று பார்த்துவிட்ட பின்னரே உண்ணச் செல்வது வழக்கமாயிருந்தது. இல்லத்திலுள்ள உணவு எத்தகையதாக இருந்தாலும், தான் உண்ணும் அளவு மட்டும் கொஞ்சமாகவே உள்ளது என்றாலும், அதையும் விருந்துடன் பகிர்ந்து உண்பர்; தன்னைக் கருதி வந்த விருந்தினரை வெளியில் உட்கார வைத்து விட்டுத் தான் மட்டும் உள்ளே அவர்க்குத் தெரியாமல் மறைவாக உண்ணுவது இழிவான செயலாகக் கருதப்படும். தன் வீடுதானே அதிலிருந்துகொண்டு எப்படி உண்டால் என்ன? என்று கேட்பது பண்பாடல்ல. உண்பது எதுவாயினும்‌ வஞ்சமின்றி அதனை விருந்தினருடன்‌ பகுத்துண்ணல்‌ வேண்டுமெனக் கூறப்‌பட்டது.
விருந்தினரை விடுத்துத் தனியே உண்பதை 'வேண்டற்பாற் றன்று' என்று நாகரிக மொழியால் இக்குறள் கடிகிறது. தாம்உண்ட பின்னர் விருந்தினரைப் பேணுதல் என எண்ணுவதும் ஆகாது என்பதும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
விருந்தினர் என்னாமல் விருந்து என ஏன் சொல்லப்பட்டது? விருந்தினர் வரவு இயல்பாக இயங்குவது; விருந்தோம்புவரின் விருந்தோம்பல் பண்பு அவர்களை வரவேற்கிறது. இதனாலேயே 'விருந்து' என்ற நயம் மிக ஆழமானது (தண்டபாணி தேசிகர்).

'வேப்பங்காயாய் இருந்தாலும் கொடுத்தே உண்பேன்’ என்பது உலகவழக்கு. இக்குறள் 'உண்டிக் கழகு விருந்தோடுண்டல்' என்ற பழமொழியையும் நினைவூட்டும். மருந்தே ஆயினும் விருந்தோடு உண் (கொன்றை வேந்தன் 70 பொருள்: கிடைத்தற்கரிய அமிழ்தமே யானாலும் விருந்தினரோடு புசி) என்பது ஔவையார் பாடல்.
புகழ்பெற்ற சங்கச்செய்யுள் ஒன்றில் கிடைத்தற்கரிய உணவு ஒன்றையும் பகிர்ந்துண்ணும் பண்பும் இவ்விதம் பாடப்படுகிறது:
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே.....
(புறநானூறு.182 பொருள்: உண்டேகாண் இவ்வுலகம்; இந்திரர்க்குரிய அமிழ்தம் தமக்கு வந்துகூடுவதாயினும் அதனை இனிதென்றுகொண்டு தனித்து உண்டலுமிலர்....... )

'புறத்தது ஆக' என்பது 'புறத்ததா' எனக் குறைந்து நின்றது.

'சாவா மருந்து' என்றால் என்ன?

'சாவா மருந்து' என்றதற்குச் சாவாமைக்கு உண்ணும் மருந்து, நஞ்சு, சாவாப்பதம் தருவதாகிய அமரர் உலகத்து அமுதம், அமிழ்தமே (சாவாமைக்குக் காரணமாகிய மருந்து), சாவாது பிழைக்க வைக்கும் அமிர்தம், சரீரத்திலே பதினெட்டுக்குட்டமும் தீரப்பொசிக்கிற அமிர்தம், அமிர்தம், சாவாமருந்தாகிய அமிழ்தம், மரணமில்லா வாழ்வைத் தரும் மருந்து, சாவாமருந்து, கிடைத்தற்கரிய அமிழ்தம், சாகாமலிருக்கச் செய்யக்கூடிய மருந்து, உயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்த உணவு, சாவை நீக்கும் அமிழ்தம், சாவைப் போக்கும் அமிழ்தம், என்றும் இறக்காமலிருக்கச் செய்யும் தேவாமிர்தம், மரணம் தவிர்க்கும் மா மருந்து, இறவாத பெருமை தரும் அரிய மருந்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள 'சாவா மருந்து' என்பது மருந்து போன்ற உணவாக இருக்கலாம்.
பல உரையாசிரியர்கள் சாவா மருந்து என்பதற்குத் தொன்மங்களில் கூறப்பட்டுள்ள அமிர்தம் என்றே கொண்டனர். அந்த அமிர்தம் அமுதம் என்றும் அமிழ்தம் என்றும் அழைக்கப்படுவது. இது தேவர்களாலும் அசுரர்களாலும் பாற்கடல் கடையப்பட்ட போது உண்டானது; இதை அருந்தியோர்க்கு சாவு உண்டாவதில்லை அதாவது இறப்பையே நீக்கி சாவா வாழ்வளிக்கும் உணவு என்று கூறப்படுவது. இவ் வமிழ்தமே சாவா மருந்து என இக்குறளில் குறிப்பிடப்பட்டது என்பர். உறுதோறுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்’ (புணர்ச்சிமகிழ்தல் 1106 பொருள்: சேரும் பொழுதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தொடுதலால் இவளுக்குத் தோள்கள் அமுதால் செய்யப்பட்டன) என்னும் குறட்பாவில் அமிழ்து உயிர் தளிர்க்கச் செய்யும் இயல்பு கொண்டது எனச் சொல்லப்பட்டுள்ளது.
உயிர்களைச் சாகாமல் இருக்கச் செய்யும் அமிர்தம் என்ற ஒன்று உலகில் கிடையாது. கேட்டார்க்கு கேட்டதைக் கொடுக்கும் தன்மை வாய்ந்த கற்பகமரம் என்று கற்பனை செய்யப்பட்டது போல அமிர்தமும் புனைவாகப் படைக்கப்பட்ட ஒன்றுதான்.
ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் என்னும் விவேக சிந்தாமணிப் பாடல் இங்கு நினைக்கத்தகும்.
பரிதி 'சாவு ஆம்' மருந்து எனக் கொண்டு 'நஞ்சாகிலும் கூட இருந்து புசிப்பது நல்லது' என உரை கண்டார். இச்சொற்சிதைவும் இவரது கருத்தும் சிறக்கவில்லை. 'நோவா மருந்து, மூவா மருந்து, சாவா மருந்து என்னும் மூவகை மருந்துகளுள் சாவா மருந்து தலை சிறந்தது; சாவா மருந்து சாவாமைக்குக் கரணியமாகிய மருந்து' என்பார் தேவநேயப் பாவாணர்.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாம் (சாவையொக்கும்); அங்ஙனம் உண்பது சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்று பிரித்தும் சொல்லப்பட்ட உரையும் உளது.

பரிப்பெருமாள் 'சாவா மருந்தாவது தன்னளவிற்கும் குறைந்து இதனானே இவ்வுயிர் கிடக்கும். இதனிற் குறையிற்சாம் (குறைந்தால் சாவு உண்டாம்)' எனப் பொருள் கூறுகிறார். இதன் கருத்து: 'ஒரு கவள அளவு சிறிய உணவு உள்ளது. அதை 'உயிர்போகாக் கஞ்சி' என வழங்கி, அதனையுண்டால்தான் தன் உயிர் நிலைக்கு மென்றாலும் அதனையும் விருந்தினர் வந்தால் பகிர்ந்துண்க' என்பது. இதைச் சொல்லியபின் 'இது வாழ்வோர்க்கேயன்றி வாழாதாரும் விருந்து ஓம்பிட வேண்டும் என்றது' அதாவது வளமுடன் வாழ்பவர் மட்டுமன்றி அன்றாட உணவுக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களும் விருந்தோம்ப வேண்டும் என்றும் அவர் உரை கூறுகிறது. விண்ணுலக அமிழ்தம் என்ற காணாப் பொருளைக் கொள்வதினும் 'உயிர்போகாக் கஞ்சி' என்ற பொருள் உலகியல் சார்ந்தது. இக்குறட்கு இவரது உரை சிறப்பாக உள்ளது.

சாகாமல் இருக்கச் செய்வதான மருந்தேயானாலும், விருந்து தன்இல்லத்துப் புறத்து இருக்கத் தானே உண்பது விரும்பத்தக்கது அல்ல என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எத்தகைய உணவாயினும் அதை விருந்தினரை விடுத்து உண்ணுதல் கூடாது என்பது விருந்தோம்பல் சிறப்பு.

பொழிப்பு

விருந்து வெளியே இருக்க, தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் தான் மட்டும் அதை உண்பது விரும்பத்தக்கது அன்று