இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0079



புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:79)

பொழிப்பு (மு வரதராசன்): உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

மணக்குடவர் உரை: உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

பரிமேலழகர் உரை: யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.?
புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

வ சுப மாணிக்கம் உரை: அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின், புறத்து உறுப்பெல்லாம் இருந்தும் என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
யாக்கை அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு, புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்?

பதவுரை: புறத்துஉறுப்பு-வெளிஉறுப்பு; எல்லாம்-அனைத்தும், எவையும்; எவன்செய்யும்-என்ன செய்யும்?; யாக்கை-உடம்பு; அகத்துஉறுப்பு - உள் உறுப்பு; அன்பிலவர்க்கு--அன்பு இல்லாதவர்க்கு.


புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?
பரிப்பெருமாள்: உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?
பரிதி: புறத்துறுப்பாகிய மெய், வாய், கண், மூக்குச் செவி அலங்காரமாயிருந்தும் என்ன பிரயோசனம்?
காலிங்கர்: ஒருவர் தமக்கு யாக்கையினது புறத்துறுப்பாகிய மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும் சால நல்லது எனினும் அவை அங்ஙனம் தோன்றிக் கெடுத்தல் அல்லது ஒரு நன்மை செய்வதில்லை;
பரிமேலழகர்: ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?
பரிமேலழகர் குறிப்புரை: புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன

'புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். புறத்துறுப்புக்கள் எவை என்பனவற்றை விளக்கியதில் இவர்கள் வேறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புறத்துறுப்பாகிய கை கால் முதலியவை என்ன உதவியைச் செய்யும்?', 'வெளியே காணப்படும் மற்ற அங்கங்கள் எல்லாம் அழகாக அமைந்திருந்தாலும் அவற்றால் என்ன பயன்?', 'அவர்கள் உடம்பின் புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் என்ன நன்மையைச் செய்யும்?', 'இடம் பொருள் ஏவல் போன்ற பல உறுப்புக்கள் இருந்தும் பயனைத் தரா' என்ற பொருளில் உரை தந்தனர்.

புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் என்ன செய்யும்? என்பது இப்பகுதியின் பொருள்.

யாக்கை அகத்துறுப்பு அன்பு இலவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்கு.
பரிப்பெருமாள்: உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்பின்றாயினும் பத்துவகைப்பட்ட இந்திரியங்களும் உளவாயின், அதனானே அறமும் பொருளும் இன்பமும் எய்தலாகும் மார்க்கமில்லையோ என்றார்க்கு அவையுளவாயினும் பயன்படா என்று கூறியவாறு.
பரிதி: அகத்துறுப்பாகிய அன்பிலாதவற்கு ஞானமில்லாதவனும் மரப்பாவையும் ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: அகத்துறுப்பாகிய அன்புபோல இவர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

'உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்கு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு', 'உடலின் உள்ளே அமைய வேண்டிய அங்கமாகிய அன்பு இல்லாதவர்களுக்கு', 'உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு', 'அன்பு என்ற உடலின் உள் உறுப்பு இல்லாதவர்க்கு' என்றபடி பொருள் உரைத்தனர்.

'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புறத்துறுப்பு எல்லாம் என்ன செய்யும்? என்பது பாடலின் பொருள்.
'புறத்துறுப்பு' குறிப்பது என்ன?

அன்பில்லா உடம்பால் என்ன நல்லது செய்ய முடியும்?

உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு அவர்கள் உடம்பின் புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் என்ன பயனைச் செய்யும்?
அன்பு என்னும் அகத்து உறுப்பு ஒருவர்க்குள்ள வெளியுறுப்புகளை இயக்குவதில் பெரிதும் துணை நிற்பது. அந்த அன்பு ஒருவனிடத்து இல்லையாயின் அப்புறத்துறுப்புகளால் பயன் இல்லையாம். யாக்கையின் உள் உறுப்பான அன்பு செயற்படாதார்க்கு உடம்பின் வெளியுறுப்புக்கள் என்ன பயன்கள் விளைவிக்கப் போகின்றன? எனக் கேட்கிறது இக்குறள்.
ஒருவருடைய உறுப்புகள் என்று சொல்லும்போது அவரது கை, கால், கண், செவி முதலியவற்றையே எண்ணுகிறோம். வள்ளுவர் அன்பை உடம்பின் அகத்து உறுப்பாக உருவகப்படுத்துகிறார். அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, புறஉறுப்புக்கள் எல்லாம் ஒரு பயனையும் செய்யாது என்கிறார்.

அகத்துறுப்பு என்பதற்கு உடற்குள்ளுறுப்பு என்றும் இல்லறத்திற்கு உள்ளுறுப்பு எனவும் பொருள் கூறினர். இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்புடையர் என்றனர். இல்லறத்தை இக்குறளில் இவ்விதம் இயைபுபடுத்துவது பொருந்துவதாக இல்லை.

'புறத்துறுப்பு' குறிப்பது என்ன?

'புறத்துறுப்பு' என்றதற்குப் பத்துவகைப்பட்ட இந்திரியங்கள் (உணர்வுகளுக்கான ஐம்புலன் கருவிகள் அதாவது தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவற்றுடன் தொழில்கருவிகளான கைகள், கால்கள், வாய், குதம் மற்றும் பால்குறி மொத்தம் பத்து), புறத்துறுப்பாகிய மெய் வாய் கண் மூக்குச் செவி, மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும், இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின,உடம்பின் புறத்து உறுப்புக்கள், கை, கால் முதலியன, இடமும் பொருளும் ஏவல் செய்வோரும் ஆகிய வெளியுறுப்புகள் கை கால் கண் செவி முதலிய உறுப்புகளுமாம், யாக்கையாகிய புறத்துறுப்பு, உடம்பின் புறத்தேயுள்ள உறுப்புக்கள், துணைக்கருவிகளான அழகு அறிவு ஆற்றல் வீரம் திறமை செல்வம் கல்வி என்ற புறப்பண்புறுப்புக்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும்' என்பதற்கு நேர் பொருள் புறத்துறுப்பு அனைத்தும் என்ன செய்யும் என்பது. புறத்துறுப்பு எல்லாம் என்றதால் இது பன்மை குறித்தது. யாக்கை அகத்துறுப்பு என்று அன்பு குறிப்பிடப்பட்டுள்ளதால் யாக்கைக்கு வெளியே கண்களுக்குத் தெரிவனவற்றையே புறத்துறுப்பு எனக் கொள்ளத்தகும் என்றாலும், மற்ற இடம் பொருள் ஏவல் போன்றவற்றையும் புறத்துறுப்பு எனக் கொள்வதில் குற்றமில்லை. அன்பில்லாதவரது இல்வாழ்க்கையில் புறத்துறுப்புகளாக எவை இருப்பினும் அவரது வாழ்வு மேம்படாது.

அன்பு இல்லையென்றாலும் புறத்துறுப்பு கொண்டவர்கள் எல்லாவகை நுகர்ச்சிகளையும் பெற்றுக் கொண்டுதாமே வருகிறார்கள்? அன்பற்றவர் கண்கள் பார்க்கின்றனவே; வாய் பேசுகிறதே. பின் ஏன் எவன்செய்யும் எனக் கேட்கிறது குறள்? அவை இயங்கலாம் ஆனால் அவற்றால் பயனில்லை; அன்பால் இயக்கப்பட்டால்தான் புற உறுப்புக்களால் பயனுண்டு; அன்பால் உந்தப்பட்ட கண்களுக்கே அருள் பார்வை உண்டு; அவர்களது வாயே இன்சொற்கள் கூறும் என்று விளக்கம் தருவர்.
பரிப்பெருமாள் உரை 'அன்பின்றாயினும் புறத்துறுப்பு கொண்டவர்கள் அறமும் பொருளும் இன்பமும் எய்தலாகும் வழிகள் உளவாயினும் பயன்படா' என்று சொல்லும்.
அன்பு இல்வாழ்க்கையின் பண்பு என்று முன்பு சொல்லப்பட்டது (குறள் 45). அந்தப் பண்புறுப்பு இல்லாவிடில் எல்லாப் புறத்துறுப்புகளும் பயனில்லாதொழியும். இல்லறவாழ்க்கை சிறவாது; வாழ்வியல் இடரின்றி நடைபெறாது; அன்புதான் புறத்துறுப்புக்களைச் செயற்படுத்துவது அதாவது அன்பு என்ற பண்புதான் இல்லறத்துப் புறஉறுப்புக்களை உள் நின்று இயக்கி அறவாழ்வு மேம்படச்செய்கிறது. 'வேர் கெட்டால் மரத்தின் உறுப்புக்களெல்லாம் பாழ்படுவதுபோல, அகஅன்பே எல்லாவற்றிற்கும் ஊற்று' என்பார் திரு வி கலியாணசுந்தரம்.


'உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பில்லாதார்க்கு புறத்தே உள்ள உறுப்புக்களெல்லாம் என்ன செய்யும்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லற வாழ்வு மேம்படுதற்கு அன்புடைமை என்ற அகஉறுப்பு இன்றியமையாதது.

பொழிப்பு

உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதார்க்குப் புறத்து உறுப்புகளெல்லாம் இருந்தும் என்ன?