இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0072



அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:72)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

மணக்குடவர் உரை: அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்.
அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.

பரிமேலழகர் உரை: அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.
(ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.)

இரா சாரங்கபாணி உரை: அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன் கொள்வர். அன்புடையார் அப்பொருள்களே அன்றித் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்.

பதவுரை: அன்பிலார்-அன்பு இல்லாதவர், தொடர்புடையார் மாட்டு உள்ள நெகிழ்ச்சி இல்லாதவர்; எல்லாம்-அனைத்தும்; தமக்குரியர்-தமக்கு உரியனவாகக் கொள்வர், தங்களுக்கு உரிமையுடையார்; அன்புடையார்-அன்புடையவர்; என்பும்-எலும்பும், உடம்பும்; உரியர்--உரிமையுடையார்; பிறர்க்கு-மற்றவர்க்கு.


அன்பிலார் எல்லாம் தமக்குரியர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்:
பரிதி: மனத்தில் அன்பில்லாதார் எல்லாவற்றாலும் தமக்குரியர்.
காலிங்கர்: ஒருவர்மாட்டும் தன்நெஞ்சில் அன்பிலாதவர் யாவரே அவரே தம் உடம்பைப் பேணி பிறர்க்கும் ஈயாது பின்பும் நகைப்புக்கு உரியராவர்; .
பரிமேலழகர்: அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்;

'அன்பிலாதார் எல்லாப் பொருளையும் தமக்கு உரிமையாக உடையர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வர்', 'அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களும் தமக்கே உரிமை தாமே அநுபவிக்க வேண்டுமென்று எண்ணுவார்கள்', 'அன்பில்லாதவர்கள் தம்பொருட்டே எல்லாவற்றையுந் தேடித் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர்', 'அன்பில்லாதார் எல்லாவற்றையும் தமக்கே உரிமையாக்கிக் கொள்வர்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்.
மணக்குடவர் குறிப்புரை: அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.
பரிதி: அன்புடையர் என்பும் பலர்க்கும் பிரயோசனப்படும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இவ்வாறு அன்றிப் பிறர்மாட்டு அன்புடையார் தமது பொருள் எல்லாம் கொடுப்பதும் அன்றித் தமது உடம்பு தானும் பிற உயிர்க்கு ஓர் இடுக்கண்வரின் ஈந்துப் புகழினைப் பெறுவர் என்றவாறு.
பரிமேலழகர்: அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க. [என்பு என்னும் சிறப்புச் சினைப்பெயர் அதன் முதலாகிய உடம்பிற்கு ஆதலின் சினையாகு பெயர்]

'அன்புடையார் பொருளேயன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பினர் உடம்பையும் பிறர்க்கு வழங்குவர்', 'அன்புடையவர்கள் தம்முடைய உடலையும் பிறருக்கு உதவியாகத் தந்துவிடுவார்கள்', '.அன்புடையோர் தம்முடைய எலும்பையும் மற்றவர்களுக்கு உரியதாக்குவர்', 'அன்புடையார் தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்குவர்.' என்றபடி பொருள் உரைத்தனர்.

அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கே உரியதாக்கிக் கொள்ளுவர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பது பாடலின் பொருள்.
'என்பும் உரியர் பிறர்க்கு' குறிப்பது என்ன?

அன்புள்ளம் கொண்டவர் தன்னலம் கருதாதவராயிருப்பர்.

அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களும் தமக்கு உரியனவென்று கொள்வர். அன்புடையார் தமது உடம்பையும் பிறர்க்கு உரிமை ஆக்குவர்.
உலக மக்களுள் அன்புள்ளம் கொண்டவரும் இருக்கிறார்கள்; அன்பில்லாதவரும் உண்டு. அன்பிலார் தன்னலமே பேணுவோராய் எல்லா வகையாலும் எல்லாமே தமக்கு மட்டுமே உரியது என்று எண்ணி மற்றவர்களோடு எதையும் பகிர்ந்து கொள்ளாத இயல்புடையவர்களாக இருப்பர். அவருடைய பொருள், செல்வாக்கு, அறிவு, திறமை யாவும் தன்னலத்திற்கே பயன்படும். ஆனால் அன்புடையாரோ தம் என்பாலும் பிறர்க்குரியவராயிருப்பர்; அவர்தம் உடைமை, நேரம், உழைப்பு யாவற்றாலும் பிறர்க்குப் பயனளித்தல் மட்டுமன்றித் தம் உடம்பையும் அவர்களுக்காகக் கொடுக்க முன் வருவர்.
'எல்லாம்' என்றது எல்லாப்பொருளையும் குறிக்கும். தம் பொருள், பிறர் பொருள், தம் உழைப்பால் வந்தன, பிறர் உழைப்பால் வந்தன அனைத்தும் அடங்கியது அது.

இல்லறத்திற்குச் சிறந்த இலக்கணமாக அன்பைக் கொள்கிறார் வள்ளுவர். அன்பு என்பது உறவு, நட்பு போன்ற தொடர்புடையாரிடையே உள்ள நெகிழ்ச்சியைக் குறிப்பது. அன்பு உள்ளம் கொண்டவர், தாம் அன்பு செலுத்துபவர்களுக்கு இடுக்கண்வரும் நேரத்தில் உதவியாக, ஊன்றுகோலாக, அவர்களது நலம் விரும்பி செயலாற்றுபவராக இருப்பர். அன்பு நெஞ்சம் எதையும் கொடுத்து விட முந்தும். அன்புடைமையின் உச்சம் அன்பு செய்யப்பட்டார்க்கு உதவி செய்யத் தன்னிடத்திலுள்ள எதையும் கொடுத்துவிடத் தயங்காத நிலையாகும்.
இப்பாடல் அன்பின் இயல்பை அன்பிலார் வழியும் அன்புடையார் வழியும் விளக்குகிறது. அன்பின்மையின் சிறுமை முதலில் கூறப்பட்டு, அதன்பின் உடன்பாட்டில் அன்பின் பெருமை சொல்லப்படுகிறது. அன்பு இல்லாதவர்கள் எல்லாமே தமக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் கொண்ட தன்னலம் மிகுந்தவர்கள். இவர்கள் எல்லாப் பொருள்களும் தம் நன்மைக்காகவே இருப்பதாகக் கொள்வார்கள். பொருட்களின்பால் மிகுந்த பற்றுக் கொள்வோர் நெஞ்சத்தில் அன்பு வற்றிப்போகிறது. அன்புள்ள நெஞ்சம் கொண்டவர்கள். தம் உடம்பு கூட பிறர் நன்மைக்காக இருப்பதாகக் கருதுவார்கள் என்கிறது பாடல்.

பழம் பாடலில் தோன்றும் ஒரு காட்சி இக்குறட்கருத்துக்கான காட்டாக அமையும். காட்டில் வாழும் மான் இணைகள் தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு நீரையும் ஒன்று மற்றொன்றிற்காக விட்டுக் கொடுப்பதைக் காட்டும் அப்பாடல்:
சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்.
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்.
உள்ளம் படர்ந்த நெறி.
(ஐந்திணை ஐம்பது 38)
(பொருள்: காதலர் தமது மனத்தினாலே விரும்பிச் சென்ற வழியானது ஆண்மான் ஆங்குள்ள சுனையினது தண்ணீரை (பெண்மான்) குடிக்கப் போதாது என நினைத்தும் தன்னுடைய பெண்மான் நன்றாக குடிக்க விரும்பியும் பொய்யாக (குடிப்பதுபோல்) உறிஞ்சும் பாலை நிலவழியாகு மென்று சொல்லுவர்.)

'இக்குறளில் உள்ள தமக்குரியர், பிறர்க்குரியர் என்ற இரண்டு தொடர்களில் முன்னது ஒரு சீராக அமையப் பின்னது இரண்டு சீராக அமைந்து, பயனிலை முன்னிறுத்த மாற்றமும் பெற்றுக் கூடுதல் ஒலிநிறுத்தமும் பொருள் அழுத்தமும் பெற்றுள்ளன. எழுத்து மொழியிலும் இட இடைவெளி (Space) அதிகம் பெற்றுள்ளது. அந்த நிலையினால் பின்னது பரந்த மனப்பான்மையைக் குறிப்பதற்கு ஏற்பப் பரந்த இடம் என்றும், தமக்குரியர் என்பது குறுகிய மனப்பான்மைக்கு ஏற்ப குறுகிய இடம் என்று கூட விளக்கலாம்' (செ வை சண்முகம்).
ஒரு கருத்து நன்கு தெளிவுற உடன்பாடு எதிர்மறை என்னும் இருவகை நடைகளையும் பயன்படுத்துவது வள்ளுவரின் உத்திகளில் ஒன்று. இங்கு அந்நடைகள் இரண்டையும் பொருத்தி இருப்பதைக் காணலாம். .

'என்பும் உரியர் பிறர்க்கு' குறிப்பது என்ன?

எலும்பு என்பதன் மரூஉவான 'என்பு' சினையாகுபெயராக எலும்போடு கூடிய உடம்பு குறித்தது. பிறர்க்கு என்ற சொல் அன்பு செய்யப்பட்ட தொடர்புடையாரைக் குறிக்கும்.
'என்பும் உரியர் பிறர்க்கு' என்ற தொடர்க்கு 'அன்புடையார் தமது உடம்பையும் பிறர்க்கு உரியதாக்குவர்' என்பது பொருள். தனது எலும்பையோ அல்லது உயிரையோ தருவது என இதை விளக்குவர். அன்பு செய்யப்பட்டார் துயர் நீக்க, தங்கள் உடம்பின் துன்பத்தையும் கருதாது, தம் உழைப்பு முழுவதையும் அன்புடையார் தரத் தயங்கமாட்டார்கள் என்பது கருத்து.

என்பும் உரியர் என்று சொல்லப்பட்டதற்கு தொன்மக் கதையில் வரும் ததீசியை மேற்கோள் காட்டுவர். தேவர்களுடைய துன்பங்களை நீக்க- விருத்தாசூரனை வெல்ல- வச்சிராயுதஞ் செய்வதற்காக, இந்திரனுக்குத் தன் முதுகெலும்பைக் கொடுத்த முனிவரகப் புனையப்பட்டவர் ததீசி. அதுபோல தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த சிபியையும் உரையாளர்கள் எடுத்துக்காட்டினர். இப்பாடல் அன்புடையார் அன்பு செய்யப்பட்டார்க்கு உடலையும் தந்து உதவுவதைச் சொல்வது. அன்புடைமை அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள அன்பு இல்லறம் மேற்கொண்டோர் தம் தொடர்புடையாரிடம் செலுத்தும் அன்பு பற்றியது. மேலே கண்ட, புறாவின் இறப்பினை அஞ்சித் தன்னையே வழங்கிய சிபியின் செயல் போன்றவை அருளுடைமை காரணமாக அமைந்தவை. எனவே அவை இக்குறட்கருத்துக்கான பொருத்தமான காட்டுகள் ஆகாவென்றாலும் அருளைப்பயப்பதும்‌ இந்த அன்புதான் என்பதனை அருள்‌ என்னும்‌ அன்பீன்‌ குழவி.....(757) என்னும்‌ குறள்‌ சொல்வது இதற்கு அமைதியாகின்றது என்பர்.

இன்று மருத்துவ உலகில், உடல் உறுப்புகளில் பலவற்றைக் கொடையாக அளிக்க முடியும். இரத்தம், கண், சிறுநீரகம், இதயம் போன்ற பல உடல் உறுப்புக்களை அன்புடையார் கொடையாக தாம் வாழும்போதோ அல்லது இறந்த பிறகோ பிறர்க்குக் கொடையாக வழங்குகின்றனர். 'என்பும் பிறர்க்கு உரியர்' என்ற தொடர், உறுப்புக்கொடையையும் எண்ண வைக்கிறது.

அன்பு இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தமக்கு உரியதாக்கிக் கொள்ளுவர்; அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அன்புடைமை தன்னுயிரையும் கொடுக்கும்.

பொழிப்பு

அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே கொள்வர்; அன்புடையார் தம் உடம்பாலும் பிறர்க்குப் பயன்படுவர்