இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |





குறள் எண் 0037



அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:37)

பொழிப்பு (மு வரதராசன்): பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

மணக்குடவர் உரை: நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்.
இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.

பரிமேலழகர் உரை: அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் உரை: சிவிகை ஊர்ந்து செல்வோன் - தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது.
இதுவென வேண்டா: வியங்கோள்
"உள்ளது மறுத்தல்" என்ற குறிக்கோளுடையது இப்பா. பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர் துன்புறுதலை அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டால் அறம் பிழைத்துப் போய் விடுகிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை அறத்து ஆறு இது என வேண்டா.

பதவுரை: அறத்தாறு-அறத்தின் பயன், அறத்தினது வழி; இது என-இது என்று; வேண்டா-வேண்டாம், வேண்டுவதில்லை; சிவிகை-பல்லக்கு; பொறுத்தானோடு-சுமப்பவனோடு; ஊர்ந்தான்-பயணிப்பவன்; இடை-இடம்.


அறத்தாறு இதுவென வேண்டா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா;
பரிதி: தருமஞ் செய்வோரையும் பாவஞ் செய்வோரையும் விசாரிக்கவேண்டின்;
காலிங்கர்: உலகத்து அறத்தின் நெறி இத்தன்மைத்து என்று உமக்கு யாம் எடுத்துரைக்க வேண்டுவதில்லை;
பரிமேலழகர்: அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா;

அறத்தாறு என்ற சொற்றொடர்க்கு அறநெறி என்று மணக்குடவரும் காலிங்கரும் பொருள் கொள்ள பரிமேலழகர் அறத்தின் பயன் என்று உரை எழுதினார். பரிதி இத்தொடரை 'அறம் செய்வோரையும் அறமல்லாத செய்வோரையும் ஆராய்ந்தால்' என்று விளக்கினார். 'இதுவென வேண்டா' என்பதற்கு மணக்குடவர் இத்தன்மைத்து என்று அறிய வேண்டா என்றும் காலிங்கர் இத்தன்மைத்து என்று எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை என்றும் பொருள் கூறினர். பரிமேலழகர் 'அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா' அதாவது 'அறநூல்கள் மூலம் அறிவுறுத்த வேண்டியதில்லை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தின் பயனை மதிப்பிடாதே', 'அறநெறி இதுவெனக் கூற வேண்டா', 'நற்செய்கையின் பயன் இஃது என்று நூலினால் உணர்த்த வேண்டியதில்லை', 'இதுதான் அறத்தின் பயன் என்று கூறுதல் விரும்பத்தக்கதன்று' என்றபடி உரை நல்கினர்.

'அறவழி இது என்று கூற வேண்டாம்' என்பது இப்பகுதியின் பொருள்.

சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.
பரிதி: அத்தண்டிகைப் பத்தனையும் சுமப்பார்களையும் கண்டுகொள்க என்றவாறு. [தண்டிகைப் பத்தன் -பல்லக்கின் தலைவன்]
காலிங்கர்: சிவிகையைச் சுமந்தவனோடு மற்று அதன்மேலேறியிருக்கின்றவனுமே சான்று என்றவாறு.
பரிமேலழகர்: சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. [அறநெறியால் எய்தும் பயனை அறத்தாறு என்றே கூறியது கருவியாகு பெயர்; பின்னது ஆகலின் -பயன் பின்னே விளைவது; அறம் முன்னர்க் கைக்கொள்ளப்பட்டது; அதனை விளக்கவே 'பயன் பின்னதாகலின்' எனக் குறிப்புத் தந்தார்; உணரப்படும்- 'சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்பது பொருள் முடிவின்றி இருத்தலின் 'உணரப்படும்' என்னும் சொல்லைக் கொண்டு முடித்தார். ஆதலால் உணரப்படும் என்பதைச் 'சொல்லெச்சம்' என்றார்]

'பல்லக்கைத் தூக்குவான், அதைச் செலுத்துவான் ஆகிய இருவரிடைக் காணலாம்' என்பது மணக்குடவர் உரை. பரிதி 'பல்லக்குத் தலைவனையும் சுமப்பவர்களையும் கண்டுகொள்க' என்கிறார். காலிங்கர் 'பல்லக்கில் ஏறியிருப்பவனும் அதைச் சுமந்தவனுமே சான்று' என்று சொல்கிறார். பரிமேலழகர் 'பல்லக்கைத் தூக்குவான், அதைச் செலுத்துவான் ஆகிய இருவரிடையேயுள்ள காட்சியாலேயே உணரப்படும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து', 'பல்லக்கு சுமப்பவனையும் ஏறிச் செல்பவனையும் கண்டு', 'சிவிகையைத் தாங்குவோனுக்கும் அதில் ஏறிச் செல்வோனுக்குமுள்ள வேற்றுமையே அதைக் கண்கூடாகக் காட்டும்', 'பல்லக்கைத் தூக்கிச் செல்வாரையும் அதில் வீற்றிருப்பாரையும் காட்டி' என்றபடி உரைத்தனர்.

'பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செல்வார் இவர்களிடை' என்பது இத்தொடரின் பொருள்.


நிறையுரை:
பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செல்வார் இவர்களிடை அறவழி இதுவென வேண்டா என்பது பாடலின் பொருள்.
'இதுவென வேண்டா' என்ற தொடர் குறிப்பது என்ன?

அறக்கருத்து பிழைபடவேண்டாம் எனத் தெளிவுறுத்தும் குறட்பா.

சிவிகையைச் சுமப்பவன், அதில் அமர்ந்து செல்பவன் ஆகியவரிடையே, ‘அறத்தின் வழிப்பட்ட பயன் இது’ அதாவது அறத்தின் வழிமுறையாகவே, ஒருவன் பல்லக்கில் அமர்ந்து செல்கிறான்; இன்னொருவன் அதனைச் சுமந்து செல்கிறான் என்று கூற வேண்டாம்.
அறத்தாறு என்றதற்கு அறத்தினது வழி என்றும் அறத்தின் பயன் என்றும் பொருள் கொள்வர். சிவிகை என்பது பல்லக்கு என்றும் அறியப்படும். இருக்கைகளுடன் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும் இது ஓர் போக்குவரத்துச் சாதனமாகும். ஊதியம் பெறும் பணியாட்கள் அதில் பயணம் செய்பவரை, கல்லிலும் முள்ளிலும் கடுங்குளிர், சுடும் வெய்யில் வேளைகளிலும், தம் தோளில் ஏந்திக் கடுநடையாகத் தூக்கிச் செல்வர். சிவிகையைச் சுமப்பவரைப் பொறுத்தான் என்றும் அதனுள் அமர்ந்திருப்பவரை ஊர்ந்தான் என்றும் குறள் குறிக்கிறது. இன்று கோயில்களில் தெய்வ உருவச்சிலைகளைத் தூக்கிச் செல்லப் பல்லக்கு பயன்படுத்தப்படுகிறது.

செல்வநிலை ஏற்றத்தாழ்வை எளிதில் உணர்த்தும்-யாவருக்கும் உறுத்தலாகத் தோற்றமளிக்கும் - மனிதனை மனிதன் சுமக்கும் காட்சி ஒன்று இங்கு காட்டப்படுகிறது. இக்காட்சியில் சுமப்பவர் இன்னல்பட பயணம் செய்பவனுக்கு அந்தத் துன்பம் இல்லை. இருவரிடையே உயர்வு-தாழ்வு காண்கிறோம். (மனிதன் பொறுத்து மனிதன் பயணிக்கும் பல்லக்கு இன்றில்லை. ஆனாலும் மாந்தர்க்குள் பொருளாதார, இன்ப-துன்ப, வேறுபாடுகள் மிகுந்த இதுபோன்ற காட்சிகள் என்றும் நாம் காண்பவைதாம்) இக்காட்சியை முன்வைத்து வள்ளுவர் என்ன சொல்லவருகிறார் என்பதை விளக்குவதில் பலவேறு கருத்துக்கள் எழுந்தன. அவற்றை இருபெரும் பிரிவுக்குள் அடக்கலாம்.
முதல் வகைக் கருத்து வினைப்பயன் சார்ந்த ஒன்று. அது சொல்வது: 'ஏன் இந்த வேறுபாடு என்பதற்கு விளக்கம் காண அறநூல்களில் தேடவேண்டியதில்லை. பல்லக்குக் காட்சியைப் பார்த்த அளவிலேயே புரிந்து கொள்ளலாம்; இந்த உயர்வு தாழ்வுகள் ஒருவர் செய்கின்ற நல்வினை தீவினைப் பயனளவு வந்து சார்கின்றன; இப்பிறப்பிலே நன்மை செய்தவன், வரும் பிறப்பிலே நன்மையடைவான்; இப்பிறப்பிலேதீவினை செய்தவன் வரும் பிறப்பிலே தீமையடைவான்; சென்ற பிறப்பிலே அறம் புரிந்தவர்களே இப்பிறப்பிலே இன்புற்று வாழ்கின்றனர்; சென்ற பிறப்பிலே தீச்செயல் புரிந்தவர்கள் தாம் இப்பிறப்பிலே துன்புற்று வாழ்கின்றனர். இக்கொள்கையையே இக்குறள் எடுத்துக்காட்டுகிறது.' இது வினைக்கோட்பாட்டைத் ('கர்மா') தழுவியதாக உள்ளது. அதாவது உயர்வு-தாழ்வு அவரவர் செய்த அறத்தின் பயனால் வந்தன. பல்லக்கைச் சுமப்பவன் அறம் செய்யவில்லை; அதில் அமர்ந்திருப்பவன் அறம் செய்தவன் என்பவை எளிதில் உணரப்படும் என விளக்கம் செய்தனர். மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர், ஆகிய அனைத்துத் தொல்லாசிரியர்களும் இக்கருத்துத் தோன்ற உரை எழுதியுள்ளனர். 'அறம் செய்தால் அதன் பயன் தன்னை வந்தடையுமோ அடையாதோ என்று ஐயப்பட வேண்டா; சிவிகையைச் சுமப்பவனையும் ஏறிச் செலுத்துவானையும் பார்த்து அறிந்து கொள்க' என்றனர் இவர்கள். இக்காலத் தமிழ் அறிஞர்களுள்ளும் தேவநேயப் பாவாணர், வ உ சிதம்பரம், கா சுப்பிரமணியம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம், சுத்தானந்த பாரதியார், சாமி சிதம்பரனார் முதலியோரும் இக்கருத்துக்கு ஒத்திசைந்து உரை பகன்றுள்ளனர்.

ஆனால் வள்ளுவர் அப்படிச் சொல்லியிருக்கமாட்டார் என்று மறுப்புக் குரல் கொடுக்கும் இரண்டாவது வகையினர் இன்று மிகுதி. இவர்கள் 'உயர்வு-தாழ்வு என்பது அறிவால், ஆற்றலால், செல்வத்தால் உண்டாகிறது. பல்லக்குக் காட்சியை வைத்து அறத்தின் பயனை மதிப்பிட வேண்டாம். பல்லக்கைச் சுமப்பவனை அறம் செய்யாதவன் என்றும் அதில் அமர்ந்து செல்வோனை அறம் செய்தவனென்றும் பார்த்த உடனேயே எப்படிக் கூறமுடியும்? அது மிக எளிதாக்கப்பட்ட கூற்றாக உள்ளது. அறம் செய்யாதவர் இன்புற்றுப் பயணம் செய்வதையும், அறம் செய்தவர் துன்பம் துய்த்துப் பணி மேற்கொள்வதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே. சிவிகையைச் சுமப்பவன் மாசில்லாத மனத்தினனாகவும் அறச் செயல் ஆற்றியவனாகவும் இருக்க முடியாதா? அன்றி அதில் அமர்ந்து செல்வோன்தான் குறையுடையோனாகவும் குற்றம் செய்தவனாகவும் இருக்கக்கூடாதா? இதை எண்ணிப் பாராமல் காட்சியளவிலேயே- பல்லக்கில் செல்வதையும் பல்லக்கைத் தூக்குவதையும் வைத்துக்கொண்டு அறம் செய்தவர் அறம் செய்யாதவர் என்று முடிவு செய்யக்கூடாது. பல்லக்கில் அமர்ந்திருப்பவனிடமும் அப்பல்லக்கைச் சுமப்பவனிடமும் சென்று அவர்களது ஏற்றத் தாழ்வான நிலையை நிறுவ எந்த அறக்கருத்தும் பயன்படாது என்பதைத்தான் இக்குறளில் வள்ளுவர் பதிவு செய்துள்ளார்' என்பர். வ சுப மாணிக்கம், திரு வி க., கு ச ஆனந்தன், குன்றக்குடி அடிகளார், சி இலக்குவனார், தமிழண்ணல், இளங்குமரனார், வ செ குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் இந்த விளக்கத்தையே எதிரொலிக்கின்றனர்.

பழைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒரே கருத்தாகவும் இன்றைய உரையாசிரியர்களில் பெரும்பான்மையோர் முற்றிலும் மாறுபட்ட கருத்தும் கொண்டு உரை கண்ட, குறிப்பிடத்தக்க, தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டு வரும் குறள் இது.
பொருள்கோள் குறளமைப்புமுறையிலேயேதான் உள்ளது. ஆனாலும் இக்குறளின் பொருணோக்கத்தைப் பொருந்தச் செய்வதில் சிக்கல் உண்டாகிறது.
ஒரு பக்கம் 'உலகம் எளியது; நல்லது செய்தால் இன்ப வாழ்வு வாழலாம்; தீயது செய்தால் துன்பப்படவேண்டும்' என்று நம்புவர்கள். இவர்கள் "இது அவர்கள் விதி, வினைப்பயன்" என்று விரைந்து முடிவுக்கு வருகிறார்கள். மறுபுறம் 'உலகம் சிக்கலானது; நம் உலகவாழ்வு பிழையற்றதும், முழுமை பெற்றதும் அல்ல; நல்லது செய்பவர்கள் மட்டும் இன்பமாக இருக்கிறார்கள் என்பது இல்லை; தீயவர்களும் இன்பம் துய்க்கிறார்கள்; அறம் செய்தலுக்கும் அதன் இன்பப் பயனை அனுபவிப்பதற்கும் உள்ள கால இடைவெளி என்று ஏதாவது உண்டா? இன்ப-துன்ப துய்ப்பு அடிப்படையில் அறம் செய்தவர், அறஞ்செய்யாதவர் என்று முடிவு கட்ட முடியாது' என்று கருதுகிறவர்கள். இவர்கள் 'அறவினை-அதன்பயன் என்னும் கோட்பாடு இக்காட்சியை விளக்க இயலாது; எனவே அறத்தின் நெறி இதுதான் என்று கூறவேண்டாம்' என்பர். இவ்விரண்டில் எது சரி?

அறநெறி ஒழுகினால் சிவிகையில் ஊரலாம், ஒழுகாவிடின் அதைச் சுமக்கும் நிலைநேரிடும் என்று கூற'வேண்டா' என்பதை அறன்வலியுறுத்தல் அதிகாரத்திற்கு எப்படி இயைத்துக்காட்டுவது? காட்சி அளவை ஒன்றை மட்டும் வைத்து நிகழ்வுகளுக்கு எந்த ஒரு முடிவும் கொள்ள முடியாது. காட்சிகள் மாறுதலுக்கு உட்பட்டன; காலப்போக்கில் மேலது கீழாயும் கீழது மேலாயும் மாறும் இயல்புடையன. குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர் (வெற்றி வேற்கை 50 பொருள்: வெண்கொற்றக் குடையின் கீழிருந்து ஆட்சி செய்யும் மன்னர் யானைமேல் ஊர்வலம் செல்லும் உயர்ந்த நிலையில் இருப்பவர்; அவரும் தமது நிலையில் தாழ்ந்து, அந்த ஊரில் வாழ இயலாது வேறு ஓர் ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும்) என்பதில் சொல்லப்பட்டுள்ளது போல் சிவிகையில் ஊர்ந்தவர்க்கும் தாழ்நிலை ஏற்படும். இங்கு காட்டப்படும், பொறுத்தான், ஊர்ந்தான் இவர்களின் இப்பொழுதுள்ள நிலை அவர்கள் வாழும் காலங்களிலேயே மாறி விடும் தன்மையதே. எனவே வள்ளுவர் முற்பிறவி அல்லது இப்பிறவியில் செய்யப்பட்ட அறத்தின் வினைப்யயன் தான் ஒருவரது வாழ்வு நிலையை முடிவு செய்கிறது எனத் துணியமாட்டார்.
தூக்குபவன் சுமப்பவன் நிலையை வைத்து அறத்தாற்றினைக் கூற வேண்டாம். அவ்வேறுபாடு உண்டானது வேறானது; அது தனித்தது. புறத்தோற்றத்தில் காணப்படும் உயர்வுதாழ்வுகளைக் கொண்டு அறத்தினை அளந்தறியக்கூடாது என்பதுவே இக்குறள் கூறவரும் கருத்து. திரு வி க 'அறம் பொதுவானது. அஃது எல்லா உயிர்க்கும் உரியது. அஃது எல்லா உயிர்க்கும் பொதுவகையில் பயன்படுவது. அறநெறியும் அத்தகையதே. அறநெறியில் எவ்வுயிரும் செல்லலாம். அந்நெறியில் இவ்வுயிர் செல்லலாம், இவ்வுயிர் செல்லலாகாது என்னும் நியதி இல்லை. அது சிலவுயிர்க்கு விரிந்தும் சிலவுயிர்க்குச் சுருங்கியும் நிற்பதன்று. அஃது எவர்க்கும் பொதுமையில் இடந்தருவது' என இக்குறளுக்கு விளக்கம் தருவார். அறத்தாறு இருவருக்கும் பொது. சிவிகை ஊர்பவன் தாங்குபவன் இருவருமே அதில் பயணிக்கலாம் என்பதும் வள்ளுவர் தரும் செய்தி.

'இதுவென வேண்டா' என்ற தொடர் குறிப்பது என்ன?

'இது என' என்பது 'இது என்று சொல்ல' என்ற பொருள் தரும். இங்கு 'இத்தன்மையது அல்லது இன்னது நெறி என்று சொல்ல' எனப் பொருள்படும். இங்கு இது என என்பது சிவிகை. பொறுப்பானோடு ஊர்ந்தானோடு காணப்படும் ஏற்றத்தாழ்வைச் சுட்டுகிறது.
'ஏற்றத்தாழ்வு இன்னது, இத்தகையது என்று ஆகம அளவையான் அதாவது -அற நூல்களில் கண்டபடி சொல்லத் தேவையில்லை; பார்த்தாலே தெரியும்' என்றும் 'சிவிகை பொறுத்தான் ஊர்ந்தோன் இடையாகிய ஏற்றத் தாழ்வு அறத்தின் பயன் இது எனச் சொல்ல வேண்டாம்' என்றும் இருதிறமாக இத்தொடர் விளக்கப்பட்டது.
வேண்டா என்ற சொல்லாட்சி எதைக் குறிக்கிறது? உலகத்தார் நடைமுறையில் கொண் டிருக்கும் கருத்தினை மறுக்கும்போது 'வேண்டா' என்ற நடையை ஒரு உத்தியாக வள்ளுவர் ஆள்வார் என்பார் வ.சுப. மாணிக்கம். அதற்குப் 'புணர்ச்சி பழகுதல் வேண்டா...'(நட்பு குறள் 785), 'மழித்தலும் நீட்டலும் வேண்டா...' (கூடாவொழுக்கம் 280) ஆகிய குறள்களை அவர் எடுத்துக் காட்டுவார். அறமல்லாத செயல் புரிந்தவன் துன்பப்படுகிறான் அறங்கள் செய்தவன் மகிழ்வாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று உலகத்தார் கொண்டிருக்கும் மயக்கக் கோட்பாட்டை மறுக்குமாறு 'சிவிகைக் காட்சியை அறமென மயங்க வேண்டா' என்ற பொருளிலேயே 'வேண்டா' என்ற உத்தி இங்கு பயன்பட்டது. ஒருவரது வாழ்வின் வெற்றி தோல்விக்கும் அறவழியைப் பின்பற்றி நடப்பதற்கும் தொடர்பு இல்லை.
தூக்குபவன் - அமர்ந்திருப்பவன் இவர்களிடை காணப்படும் ஏற்றத் தாழ்வை விளக்க அறக்கருத்து எதுவும் பயன்படாது; அது அவர்களது அவ்வப்போதைய பொருள் நிலையால் உண்டாவது என்பதுவே 'இதுவென வேண்டா' உணர்த்துவது.

'இதுவென வேண்டா' என்ற தொடர் சிவிகையில் அமர்ந்திருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின் பயன் இதுவென மதிப்பிட வேண்டாம் என்பதைச் சொல்கிறது.

பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செலுத்துபவர் இவர்களிடத்து அறவழி இது என்று கூற வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

அறம் ஒரு சாரார்க்கு மட்டும் உரியதன்று; எல்லார்க்கும் உரியது என அறன்வலியுறுத்தல்.

பொழிப்பு

பல்லக்கு தூக்குபவன் மற்றும் அதன் மீது பயணிப்பவன் இவர்களிடம் அறத்தின் நெறி இதுதான் என்று கூற வேண்டாம்.





பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னரே பதிப்பிக்கப்படும்.