இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0036



அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:36)

பொழிப்பு (மு வரதராசன்): இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம்.
இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் உரை: அறம் செய்வதற்குரிய காலம் இதுவல்ல என்றும், அது வரும் காலம் அறிவோம். அப்போது செய்வோம் என்றும் எண்ணாது காலம் தாழ்த்தாது அறத்தினைச் செய்க. அங்ஙனம் செய்த அறம் இறுதிக்காலத்தில் அழியாத் துணை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பதவுரை: அன்று-பின்நாளில்; அறிவாம்-நாம் அறிந்து செய்வோம்; என்னாது-எனக் கருதாமல், என்று எண்ணாமல்; அறம்-நல்வினை; செய்க-செய்யவேண்டும்; மற்று-(அசைநிலை); அது-அஃது; பொன்றுங்கால்-அழியும் காலத்தில்; பொன்றா-அழிவில்லாத; துணை-உதவி. .


அன்றறிவாம் என்னாது அறம்செய்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க;
பரிதி: நாம் வறியார் என்றும் தன்மம் இல்லை என்றும் விசாரித்துச் செல்வமுண்டானபோது அறஞ்செய்வோம் என்னாமல் நினைத்தபோதே தருமம் செய்க; [விசாரித்து-ஆய்ந்து]
காலிங்கர்: அறஞ்செய்கைக்கு அறிவல்லது என்றும் அறிவாவதென்றுங் காலத்தைக் கழியாதே. கடிதாக அறத்தினைச் செய்து கொள்க;
பரிமேலழகர்: 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க;

'பின்பு அறிந்து அறம் செய்வோம் என்று எண்ணாது முன்பே அறம் செய்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சாகும்போது பார்த்துக் கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க', 'முதுமையில் அறம் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் இளைஞனாய் இருக்கும்போதே அறம் செய்யவேண்டும்', 'இறங்குங் காலத்திலே பார்த்துக் கொள்ளலாமென்று கருதாது அறத்தை எப்போதும் செய்ய வேண்டும்', 'பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை உடனே செய்க'

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
பரிதி: அது மரணாந்த காலத்துக்கும் பெருந்துணையாம் என்றவாறு. [மரண அந்தகாலத்து-சாக்காடு எய்தும் இறுத்திக்காலத்து]
காலிங்கர்: அதுவே அழியாத துணை என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

'அவ்வறம் உயிர் போகின்ற காலத்து அழியாத துணை' என்று மணக்குடவரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை தந்தனர். பரிதி 'அது மரண காலத்துப் பெருந்துணை' என்றும் காலிங்கர் 'அதுவே அழியாத துணை' என்றும் பொருள் கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுவே உயிர்த்துணை', 'அந்த அறம் ஒருவனுக்குச் சாகும்போது சாவாத் துணையாகும்', 'அஃது உயிர்போங் காலத்திலே அதற்கு அழியாத துணையாய் உடன்செல்வது', 'அவ்வாறு செய்யப்படும் அறம் நாம் இறக்கும்கால் அறியாத துணையாக இருக்கும்' என்றபடி உரை செய்தனர்.

அந்த அறம் இறுதிக்காலத்தில் அழியாத துணை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாது அறத்தினை இப்பொழுதே செய்க; அந்த அறம் இறுதிக்காலத்தில் பொன்றாத் துணை என்பது பாடலின் பொருள்.
'பொன்றுங்கால் பொன்றாத் துணை' குறிப்பது என்ன?

நல்லது செய்வதைத் தள்ளிப்போடக்கூடாது.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க; அவ்வறம், இறுதிக்காலத்தில், அழியாத துணையாக இருக்கும்.
மனத்துக்கண் மாசின்றிச் செய்யப்படும் அறவொழுக்கங்கள் அனைத்தும் அறச்செயல்கள்தாம். இச்செயல்களைப் பின்னாளில் செய்யலாம் என எண்ணாது இப்போதிருந்தே செய்க என்கிறார் வள்ளுவர்.
பலர்க்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டேயிருக்கும். ஆனால் அதைச் செய்யாமல் ஏதாவது ஒரு காரணம் கற்பித்து ஒத்திப்போடுவார்கள். இதனால் அற நினைவு தோன்றும் போதே அறம் செய்யத் தொடங்குக என அறுவுறுத்துகிறது இப்பாடல். இல்லையென்றால் நினைக்கின்ற காலத்தில் செய்ய முடியாமற் போனாலும் போய்விடும்; அந்த நல்ல செயலை விட்டுவிட்டோமே என்ற மனஉறுத்தல் நீடித்துக்கொண்டே சென்று அதைச் செய்ய இயலாமலும் போய்விடும்.
'அன்றறிவாம்' என்ற தொடரின் பொருள் என்ன? ஒருவரை நோக்கி 'அறஞ்செய்க' என்று அறிவுரை சொல்லும் பொழுது, பெரும்பான்மையினர் 'இப்பொழுதா? பின்னே பார்த்துக் கொள்ளலாம்' என்றே பதில் சொல்வர். இந்த உலக வழக்கே 'அன்றறிவாம்' என்று இப்பாடலில் வந்தது. அறச்சிந்தனை எழும்போது 'நமக்கு இன்னும் கொஞ்சம் செல்வம் சேரும்போது பார்த்துக்கொள்ளலாம்', 'நாம் இப்போது இளமை வாய்ந்திருப்பதால் வயது முதிர்ந்தபோது பார்த்துக் கொள்ளலாம்' அல்லது 'இது அறிவுடைய செயல்தானா அல்லவா?' என்றெல்லாம் ஒருவரது எளிய மனத்துள்ளே ஓர் போராட்டம் நிகழ்ந்து அவரை அறவழி செல்லவொட்டாது தடுக்கலாம். சிலர் நீண்டகாலம் வாழப்போவதாகக் எண்ணிக்கொண்டு, 'அன்றறிவாம்' என்பர். சாகும்பொழுது துணையாகும் என்று பாடலின் பின்பகுதி வருவதால் 'அன்று' என்ற சொல்லுக்கு 'அன்றைக்கு இறக்கும்போது' அல்லது 'முதுமையில்' என்று கொண்டு 'சாகப்போகிற (அன்றைக்கு) பொழுது பார்த்துக் கொள்வோம்', 'இறக்கிற அன்றைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என்று விளக்கம் தருவர். 'அறம் செய்தல் 'மேலே' போகிற வழிக்கு நல்லது' என்ற நம்பிக்கை மக்களிடை இருப்பதால் பலர் கடைசி காலத்தில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அறச்செயல்களைத் தள்ளிப்போடுகின்றனர். இவ்வெண்ணங்களையெல்லாம் நீக்கி, காலம் போக்காமல், அற நினைவு தோன்றும் போதே அதைச் செய்திடல் வேண்டும்.

உலகோர் தத்தம் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருப்பதால், அறச் செயல்களில் ஆர்வம் காட்டுவதில்லை. பிற்காலத்தில் அறம் செய்யலாமென்ற நோக்கில் அறச்செயல்களில் ஈடுபாடு காட்டாது பொருள் தேடுவதிலும் வாழ்க்கையில் உள்ள இன்பங்களை நுகர்வதிலும் நேரத்தைச் செலவிடும் மனப்பான்மையயே அனைவரிடமும் காணப்படுகிறது. இது உலக இயல்பு. 'அறம் செய்வதற்கு இப்பொழுது என்ன விரைவு? பின்னர்ப் பார்த்துக் கொள்வோமே' என்று நீண்டகாலம் வாழப்போவதாகக் கருதிக்கொண்டு, 'அன்றறிவாம்' என்று சொல்வது அறிவுடைமை ஆகாது. நற்செயல்களை செய்ய முற்படுவதையும், நல்வழி நடப்பதையும், தள்ளிப்போடுதல் உகந்த செயல் அல்ல. செல்வம் நீங்கலாம்; உடல் வலிமை குறையலாம்; உயிர் போகலாம். இதுபோல எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகளைக் கொண்டதுதான் வாழ்க்கை. நற்செயல்கள் ஆற்றுவதை வாழ்நாளின் பிற்பகுதிக்கு ஒதுக்க வேண்டாம், இறப்பு என்பது எப்போது வரும் என்பது தெரியாது. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் (நிலையாமை 335 பொருள்: நாக்குக் குழறி விக்கல் எழுவதற்கு முன்பே, அறச் செயல்களைத் தானே முற்பட்டுச் செய்ய வேண்டும்) என்று இறப்பு நெருங்கும் முன்னே நல்வினைகள் செய்ய வேண்டும் என்று பிறிதோர் இடத்தில் குறள் கூறும். நன்று செய்ய வேண்டும் என்று துணிபவன் அதை இன்றே, இப்போதே செய்துவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

'பொன்றுங்கால் பொன்றாத் துணை' குறிப்பது என்ன?

'பொன்றாத் துணை' என்றதற்குச் சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம், மரணாந்த காலத்துக்குப் பெருந்துணை, அழியாத துணை, உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம், சாகிற காலத்துக் கெடாத துணையாம், மரணாந்த காலத்துப் பெருந்துணையாம், இவ் உடம்பினின்று உயிர்போங்காலத்துத் தான் அழையாமல் துணையாய் வரும், சாகிற காலத்திலே அந்தப்புண்னியம் உயிருக்குச் சாகாத துணையாய் இருக்கும், உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும், இறக்குங்காலத்து அழியாத துணையாகும், இறுதிக்காலத்தில் அழியாத் துணை, உயிர்த்துணை, சாகும்போது சாவாத் துணையாகும், உடல் அழிந்த பின்னும் தான் அழியாமலிருந்து உயிருக்கு உதவி செய்யும், இறக்கும் பொழுதும் இறவாத்துணையாக இருக்கும், உயிர்போங் காலத்திலே அழியாத துணையாய் உடன்செல்வது, இறக்கும்கால் அழியாத துணையாக இருக்கும், வறுமை பிணி மூப்பு முதலியவற்றால் அழிவு நேர்ந்தபோதும் அது அழியாத துணையாக இருந்து அந்தத் துன்பங்களைப் போக்கும், அழிவு வரும்போதும் அழியாத் துணை, இறக்குங் காலத்து இறவாத் துணையாம், இறக்குங்காலத்தில் உயிர்க்கு அழியாத் துணையாக உதவி செய்து பின் தொடரும், இறக்கும் தறுவாயில் நிம்மதி தரும், (அவர்) இறக்குங்காலத்தில் அஃது இறவாமல் (அவருயிருடன்) செல்லும் துணையாம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பொன்றும் + கால் என்றது பொன்றுங்கால் ஆயிற்று. பொன்றும் என்பதற்கு அழியும் என்றும் கால் என்பதற்கு காலம் அல்லது பொழுது என்றும் பொருள். இங்கு பொன்றுங்கால் என்றதற்கு 'இறக்கும் பொழுது' அதாவது உடம்பு அழியும்போது என்று பொருள் கொள்வது பொருத்தம்.
பொன்றா என்பது 'அழியாத' என்று பொருள் தரும். பொன்றாத் துணை என்பதற்கு அழியாத துணையாகும் என்பது பொருள். பொன்றுங்கால் பொன்றாத் துணை என்பது சாகுங்காலத்தில் அறம் அழியாத துணையாம் எனப்பொருள்படும்.

அறச் செயல்களை அவ்வப்பொழுது செய்து கொண்டே போகாமல் 'நாளை, நாளை' என்று சொல்லிக் கொண்டு அறம் செய்யத் தவறி, சேர்த்த செல்வங்ளுடன் மறைபவர் பலர். 'இன்றே நம்முடைய நாள்; நாளை நடப்பதை யார் அறிவார்' என்பதை உணர்ந்து அறம் செய்தோர் மன அமைதியுடன் சாவை ஏற்றுக் கொள்வர். அறம் சார்ந்த வாழ்வு மேற்கொண்டவர்களுக்குச் சாவில் துன்பமில்லை. அறம் செய்யாதோர் சாவை எதிர்கொள்ள அஞ்சுவர். எனவே சாவு அவர்களுக்குத் துன்பம் தரும். சாகும் காலத்தில் 'ஐயோ! கடவுளே!, கடவுளே!’ என்று கதறாமல் வலியின்றி அமைதியாக உயிர் பிரிய இப்போதிருந்தே நன்மை செய்க என்பது பாடல் தரும் செய்தி.
அறம் ஒன்றே அழியாமல் துணை நிற்பதை வாழ்வின் கடைசி நாட்களில் மாந்தர் உணர்வர். இதுவே 'பொன்றாத்துணை' என்பது.

'பொன்றுங்கால் பொன்றாத் துணை' என்றது இறக்கும் பொழுதும் இறவாத்துணையாக இருக்கும் என்ற பொருள் தருவது.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க; அந்த அறம் சாகும்போது அழியாத துணையாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நிறைமனதுடன் சாவைத் தழுவ இப்போதிருந்தே நற்செயலாற்றும் அறன் வலியுறுத்தல்.

பொழிப்பு

பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறஞ்செய்க; அந்த அறம் ஒருவனுக்கு சாகுங்காலத்தில் அழியாத துணையாகும்.