இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0032



அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:32)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை.
இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அறம் செய்வதைவிட மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மறப்பதைவிடக் கொடிய கேடும் கிடையாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை.

பதவுரை: அறத்தின் -நற்செயலைக் காட்டிலும், அறத்தில்; ஊ(உ)ங்கு-மேற்பட்ட, விஞ்சிய; ஆக்கமும்-வளர்ச்சியும், மேன்மேல் உயர்தலும், செல்வமும்; இல்லை-இல்லை; அதனை-அதை (இங்கு அறத்தை); மறத்தலின்-மறத்தலைவிட; ஊங்கு-மேற்பட்ட; இல்லை-இல்லை; கேடு-அழிவு, தீமை, வறுமை.


அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை;
பரிதி: தருமத்தினும் ஆக்கமும் இல்லை;
காலிங்கர்: அறமானது இன்பம் பயக்குமாதலால் ஒருவர்க்கு இவ்வறத்தின் மேலாயிருப்பதொரு பேறும் இல்லை;
பரிமேலழகர்: ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;

ஒருவர்க்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை என்று இப்பகுதிக்கு உரை கூறினர் பழம் ஆசிரியர்கள்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறநெறியைக் கைக் கொள்வதன் மேற்பட்ட ஆக்கமும் இல்லை', 'ஒருவனுக்கு அறம் செய்தலினும் மிக்க நன்மையில்லை', 'அறத்தைப் பார்க்கிலும் மேன்மைப்படுத்துவது யாதுமில்லை', 'தர்மங்களைச் செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை' என்றபடி உரை தருவர்.

அறத்தினும் மேன்மையான பேறும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.
பரிதி: தருமத்தை மறப்பதுபோலக் கேடும் இல்லை.
காலிங்கர்: மற்றிதனை மறத்தலின் மேலாயிருப்பதொரு கேடுமில்லை.
பரிமேலழகர்: அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது. [அநுவதித்தல்-வழிமொழிதல்; அதனால்- அறம் செய்தலை மயக்கங் காரணமாக மறத்தலினால்; அது செய்யாவழி - அறம் செய்யாத இடத்து]

அறம் செய்ய மறத்தலைவிட மேற்பட்ட கேடும் இல்லை என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதை மறந்து கைவிடுதலை விடக் கேடும் இல்லை', 'அதனை மறத்தலினும் மிக்க தீமையுமில்லை', 'தர்மங்களைச் செய்யாமற் மறந்துவிடுவது போலத் தீமை தரக் கூடியதும் இல்லை.', 'அதனை மறந்தொழுகுவதைப் பார்க்கிலும் கெடுதியுமில்லை' என்றபடி உரை தந்தனர்.

அதை மறத்தலைவிடக் கேடும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறத்தினும் மேன்மையான பேறும் இல்லை; அதை மறத்தலைவிடக் கேடும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'அறத்தை மறத்தல்' என்றால் என்ன? அறம் செய்யாவிட்டால் கேடு வருமா என்ன?

அறத்தினை எப்பொழுதும் நினைவில் வைத்திரு.

அறம் செய்தலினும் மேம்பட்ட பேறும் இல்லை; அதனைச் செய்ய மறத்தலினும் மிக்க கேடானதும் இல்லை.
முந்தைய பாடலில் அறத்தினும் ஆக்கம் தருவது வேறொன்றுமில்லை எனக் கூறப்பட்டது. மீண்டும் அது இங்கும் கூறப்படுகிறது. 'இது கூறியது கூறியது ஆகாது; 'முன் சொன்ன அதனையே பின்னும் சொல்லி ஆண்டு எஞ்சி நின்றன சில கூட்டி உரைத்தல்' என்னும் 'பின்வருநிலை' அலங்காரம் இது; இது 'வலியுறுத்தல்' எனவும் 'வழிமொழிதல்' எனவும் வழங்கப்படும்' என்பர் இலக்கண ஆசிரியர்கள். இங்கு அதை மறப்பதால்‌ ஆக்க மிழப்பது மட்டுமல்ல, கேடும் வந்துசேரும்‌ என வலியுறுத்த முன்‌ கூறியதை வழிமொழிந்து கொள்ளப்பட்டது‌.
இப்பாடலிலுள்ள அறம் என்ற சொல் அற எண்ணம்கொள்ளல், அறநெறி நிற்றல், அறம் செய்தல் இவற்றைக் குறிப்பதாகக் கொள்வர்.
ஊங்கு என்ற சொல் மேற்பட்ட அதாவது மேம்பட்ட அல்லது மேலான என்ற பொருள் தருவது. 'அறத்தினூஉங்கு' என்னும் அளபெடை எழுச்சியையும் உயர்ச்சியையும் உணர்த்தியது என்பார் திரு வி க.
ஆக்கம் என்ற சொல்லுக்குச் செல்வம், உயர்ச்சி, ஊதியம், மேன்மைப் படுத்துவது, நன்மையானது, பேறு எனப் பலவாறாக விளக்கம் கூறினர்.
அதுபோலக் கேடு என்ற சொல்லுக்கு அழிவு, தீமை, வறுமை என்றபடி பொருளுரைத்தனர்,
இவ்விதம் அறத்தைக் கைக்கொள்வதன் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதை மறந்து கைவிடுதலை விடக் கேடும் இல்லை என்னும் கருத்தை இக்குறள் நல்குகிறது.

நல்லன எல்லாம் அறமே. ஒருவரது எண்ணமும் சொல்லும் செயலும் அறத்தின் அடிப்படையாய் அமைய வேண்டும். சிறப்பு, செல்வம், இன்பம் ஆகிய பயன்களை அறம் தருவதாக இவ்வதிகாரப்பாக்கள் கூறுகின்றன. அறச்செயல்கள் எவையெவை எனத் தொகுத்துக் கூறல் இயலாது. வள்ளுவர் தம் நூலில் விதந்து கூறியுள்ள சிலவிழுமிய வாழ்வியல் அறங்களாவன: 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' (34), 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' (49), 'அகத்தான்ஆம் இன்சொலினதே அறம்' (93), 'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்' (148), 'அறனறிந்து வெஃகாமை' (பிறர் பொருளை விரும்பாமை) (179), புறங்கூறாமை 'அறம் கூறும் ஆக்கம் தரும்' (183), 'பொய்யாமை பொய்யாமை (வாய்மை) ஆற்றின் அறம்' (297), 'அறவினை யாதெனின் கொல்லாமை' (321). மேலும் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' தலையாய அறம் (322) என அறவகைகள் பற்றிப் பிற இடங்களிலும் குறட்பாக்கள் குறிப்பாக உணர்த்தும்.
அறநெறியை உலகோர் எளிதில் கைக்கொள்வதில்லை. எனவே அதைப் பலபட வலியுறுத்துகிறார் வள்ளுவர். தீநெறி முதலில் பயன்தருவதுபோல் காட்டி முடிவில் அழிவையே தரும். அறநெறிமட்டுமே ஆக்கத்தில் கொண்டு சேர்க்கும். அதனை உணராத மக்கள் தீய வழிகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே நேர்முகமாகவும் எதிர்முகமாகவும் அறநெறி வற்புறுத்தப்படுகிறது.

அறத்தை மறத்தல் என்றால் என்ன? அறம் செய்யாவிட்டால் கேடு வருமா?

அறம் செய்யாது விடுவதையே அறத்தை மறப்பது என்று சொல்லப்படுகிறது. புறக்கணித்தல் என்று சொல்லாமல் 'மறத்தல்' என்கிறது குறள். புறக்கணித்தல் என்பது மனதால் அறிந்தே, செருக்காலோ பிறவற்றாலோ செய்வது. ஒருவனைக் கெட்டவன் என்று சொல்வதற்குப் பதிலாக நல்லவனல்லன் என்று சொல்வதே நல்லது. 'அறத்தை மறத்தல்' என்றதனால் 'அறத்தை மறத்தல் கூடாது' 'அது மறக்குந் தகையதன்று' என்பதை அறிவுறுத்தியவாறாம் (திரு வி க). மறந்து விடுவதனாலும் தீமை உண்டாக வாய்ப்புண்டு; அறம் நினைவில் இருந்தால் ஒருவர் அறமல்லாதவற்றைச் செய்யமாட்டார் என்பதும் கருத்து.
அறம் செய்வதனால் நன்மைகள் உண்டாகும் என்பது சரி. அதைச் செய்யாவிட்டல் அந்நன்மைகள் உண்டாகா, அவ்வளவுதானே. கேடு எப்படி வரும்?
அறநெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையும்; அறம் செய்யாவிட்டால் தீமை விளையும் என்றபடி உலக இயற்கை அமைந்திருக்கின்றது அதாவது அறத்தால் விளையும் நன்மையையோ அல்லது அது செய்யாமல் உண்டாகும் தீமையையோ மாற்றிவிட முடியாது என்பர். அற வழியில் சென்றால் நல்லது நடக்கும்; மாறாக, கையூட்டு, பொய், களவு, கொலை, கொள்ளை என்று மறவழியில் போய்க்கொள்கிறேன் என்று எண்ணிச்செயல்படும்போது பெரிய கேடுதான் வந்து சேரும் என்று பாடல் சொல்வதால் அக்கொள்கையில் வள்ளுவர்க்கு நம்பிக்கை உண்டு எனத் தெரிகிறது.

அறம் செய்யாமையால் ஒருவனுக்குப் பழி உண்டாகி அவன் அறியாமலே தனக்கு ஊறு விளைத்துக் கொள்கிறான் என்பதும் கருத்து. 'என்வரையில் நான் தீமை செய்யாமல் இருக்கிறேன். அது போதாதா?' என்று வாளா இருக்காது அறமும் செய்யவேண்டும் என்பது வலியுறுத்தப்பெறுகிறது.

முற்பகுதியில் சொல்லப்பட்டது போலவே 'ஊங்கில்லை கேடு' அதாவது அதனினும் கேடு உண்டாக்குவது வேறொன்றும் இல்லை என்கிறது இப்பகுதியும். தீமை செய்தால் கேடு தனக்கு உண்டாகும் என அறிந்திருந்தும், செருக்கு மிகுதியால் புறக்கணிப்பது, மிக்கக் கேட்டினைத் தரும் என்பதை உணர்த்தவே ஊங்கில்லை கேடு எனப்பட்டது.
ஒன்றினால் வரும் சிறப்பைச் சொல்லி, அவ்வாறில்லையென்றால் உண்டாகும் கெடுதியையும் கூறும் போது, செயலின் சிறப்பு நினைவில் தங்கும். எனவேதான் மீண்டும் மீண்டும் அறத்தின் ஆக்கத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார் வள்ளுவர். அறச் சிந்தனை கொண்டவாழ்வே உயர்ந்தது; அதுவே சிறந்த ஒழுகலாறு என்பது அறிவுறுத்தப்படுகிறது.

அறத்தினும் மேன்மையான பேறும் இல்லை; அதை மறத்தலைவிடக் கேடும் இல்லை என்பது இக்குறட்கருத்து



அதிகார இயைபு

அறஒழுகலாற்றினை எப்பொழுதும் நிறுத்தாதே என மீள மீளக் கூறி அறன் வலியுறுத்தல்.

பொழிப்பு

அறம் செய்வதிலும் மேற்பட்ட மேன்மை இல்லை; அதனை மறத்தலைவிடக் கேடு வேறில்லை.