இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0022



துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:22)

பொழிப்பு (மு வரதராசன்): பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

மணக்குடவர் உரை: காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும்.
இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: துறந்தார் பெருமை துணைக் கூறின் - இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று - இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும்.
(முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.)

இரா சாரங்கபாணி உரை: பற்றற்ற துறவிகளின் பெருமைக்கு அளவு கூறின், அஃது உலகத்துப் பிறந்து இறந்தவர்களை எண்ணி அளவு காணப் புகுவது போல அரிதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பதவுரை: துறந்தார்-நீத்தார், பற்றினை விட்டவர்; பெருமை-சிறப்பு, உயர்வு; துணை-அளவு, ஒப்பு; கூறின்-சொன்னால்; வையத்து-உலகத்தில்; இறந்தாரை-இறந்தவர்களை, செத்தவரை; எண்ணி-எண்ணிக்கையிட்டு; கொண்டு-கொள்வது; அற்று-போல, அத்தன்மைத்து.


துறந்தார் பெருமை துணைக்கூறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின்;
பரிதி: காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்களையுந் துறந்தபேருக்கு உவமை கூறின்;
காலிங்கர்: இங்ஙனம் நீத்தாரது பெருமைக்கு உவமைகூறின்;
பரிமேலழகர்: இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்;

இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் 'துறந்தார் பெருமைக்கு அளவு கூறின்/உவமை கூறப் புகுந்தால்' என்ற பொருளில் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவிகளின் பெருமையை அளக்க முடியாது', 'முற்றுந் துறந்த அம்மகான்களின் பெருமை அளவிட முடியாதது. அதைக் கணக்கெடுப்பது', 'துறவிகளின் பெருமையை இவ்வளவினதென்று கூறலுற்றால்', 'தம் நலம் துறந்தவருடைய பெருமையை அளவிட்டுக் கூற முயன்றால்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'நீத்தாரது பெருமை இவ்வளவினது என்று சொல்லப்புகுந்தால்' என்பது இப்பகுதியின் பொருள்.

வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.
பரிதி: பூமியில் இறந்த செனனம் எத்தனையுண்டு அத்தனை அறிந்தால் அவர்கள் பெருமை அறியலாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று இவ்வுலகத்தின்கண் துறவாராகப் பிறந்து இறந்தாரை எண்ணிக்கொண்ட அவ்வளவிற்று என்றவாறு.
பரிமேலழகர்: இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். [இத்துணையர்-இவ்வளவினர்]
பரிமேலழகர் குறிப்புரை: முடியாது என்பதாம், 'கொண்டால்' என்னும் வினை எச்சம் 'கொண்டு' எனத் திரிந்து நின்றது.[முடியாது என்பது - துறந்தார் பெருமையை அளவிட்டுக் கூறமுடியாது என்பது; கொண்டால் அற்று என்பது கொண்டற்று என்று திரிந்தது]

பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிமேலழகரும் 'உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி அறிதல் போல' என்றும் பரிதி 'பூமியில் இறந்தோர் எத்தனை என்று அறிந்தால்' என்றும் காலிங்கர் 'இவ்வுலகத்தின்கண் துறவாராகப் பிறந்து இறந்தாரை எண்ணிக்கொண்ட அளவு' என்றும் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகில் இறந்தவர்களை எண்ண முடியுமா?', 'உலகத்தில் எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறந்தார்கள் என்பதைக் கணக்கெடுக்கப் புகுவதற்கு ஒப்பாகும்', 'இவ்வுலகத்திலே இறந்தவர்களை எண்ணியளவிடக் கருதினாற் போலும்!', 'அது உலகத்தில் இறந்து போனவர்களை எண்ணிக் கூற முயன்றதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உலகத்தில் இறந்து போனவர்களை எண்ணிக் கொள்வதை ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீத்தாரது பெருமையை அளந்து சொல்வது, உலகத்தில் இறந்தவரை எண்ணிக் கொண்டற்று என்பது பாடலின் பொருள்.
'எண்ணிக் கொண்டற்று' என்ற தொடர் குறிப்பதென்ன?

அளவிடற் கூடியதா தன்னலம்நீத்தார் பெருமை!?

நீத்தார் பெருமையை அளவிட்டுக் கூறமுயல்வது, இது வரையிலும் இந்த உலகத்தில் பிறந்திறந்து போனவர்களை எண்ணித்‌ தொகை காண முயற்சிசெய்வதை ஒக்கும்.
துறந்தார் என்ற சொல் தன்னலம் துறந்து பொதுப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களைக் குறிக்கும். இவர் தியாகி என்றும் அறியப்படுபவர். துறந்தார் பெருமை துணைக்கூறின் என்பதிலுள்ள துணைக்கூறின் என்ற தொடர்க்கு அளவு சொல்ல வேண்டுமானால் என்பது பொருள். துணை என்னும் சொல் அளவு என்ற பொருளில் இணைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் (விருந்தோம்பல் 87 பொருள்: விருந்திடுதலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவுடையதென்று கூறமுடியாது. விருந்தினரின் தகுதியே அதற்கு அளவாகும்) என்று மற்றொரு குறட்பாவிலும் ஆளப்பட்டுள்ளது. எத்தனை-எத்துணை-எவ்வளவு; அத்தனை-அத்துணை-அவ்வளவு என்றபடி துணை என்பதற்கு அளவு என்று பொருள். இச்சொல்லுக்கு ஒப்பு என்று பொருள் கூறி, துறந்தார் பெருமை துணைக்கூறின் என்றது துறந்தார் பெருமைக்கு ஒப்புமை சொல்லப்போனால் எனப் பொருள்படும் எனவும் உரைப்பர்.
இவர்கள் பெருமை உலகிலேயே உயர்ந்தது, இவர்கள் செயற்கரிய செய்வர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை கொண்டு ஒழுகுபவர், இவர்கள் கண்ணே உலகம் உள்ளது என்று பலவாறாக நீத்தார் சிறப்பைக் குறள் உயர்ந்தேத்தும்.

எல்லாவற்றிலும் அவாவுற்று வாழும் மாந்தரிடம் பெருமைப்பட என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு தந்நலம் கருதாது தொண்டாற்றும் நீத்தார் பெருமை அளவிடற்கரியது; அவர்தம் பெருமையை நினைத்துத்தான் பார்க்க வேண்டுமேயல்லாமல் சொல்லால் அளக்க முடியாது. நீத்தார் பெருமையை அளவிட்டுச் சொல்ல வேண்டுமானால் அது இவ்வுலகத்தில் பிறந்து இறந்தாரை எண்ணிக் கொள்வது போல என இறந்தார் தொகைமேல் வைத்து நீத்தார் பெருமைக்கு வரம்பின்மை சொல்லப்பட்டது. நீத்தார் பெருமையை அளவிட முயல்வது இவ்வுலகத்தில் பிறந்து இறந்தாரைக் கணக்கிட முயல்வதற்குச் சமம் எனக் கூறுகிறது பாடல் - இரண்டும் முடியாதன.

'எண்ணிக் கொண்டற்று' என்ற தொடர் குறிப்பதென்ன?

'எண்ணிக்கொண் டற்று' என்ற தொடர்க்கு இத்துணையார் என்று எண்ணி யறியலுற்றாற் போலும், எத்தனையுண்டு அத்தனை அறிந்தால் அவர்கள் பெருமை அறியலாம், எண்ணிக்கொண்ட அவ்வளவிற்று, எண்ணி இத்துணையர் என அறியலுற்றாற் போலும், நினைத்துக் கொள்ள வேண்டும், எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது, (இத்தனை பேரென்று) எண்ணி அறியப்புகுக்காற்‌ போலாம்‌, இத்தனை என எண்ணிப் பார்ப்பதற்கு ஒப்பாகும், எண்ணிச் சொல்ல முடியாதது போல, எண்ண முடியுமா?, எண்ணி அளவு காணப் புகுவது போல அரிதாகும், எத்தனைபேர் என்று கணக்கிடப் புகுவதை ஒக்கும், எத்தனை பேர் என எண்ணத் தொடங்கி முடியாமல் கைவிடுவது போன்றது, எண்ணியளவிடக் கருதினாற் போலும்!, எண்ணிக் கூற முயன்றதை ஒக்கும், கணக்கிட முயல்வதற்குச் சமமாகும், எண்ணி அளக்க முடியாது, எண்ணிக் கணக்கிடப் புகுந்தால் எப்படியோ அப்படியாகும் (முடியாது) என்றவாறு உரையாசிரியரகள் பொருள் கூறினர்.

கொண்டால் என்பது 'கொண்டு' எனத்திரிந்தது. கொண்டற்று என்பது கொண்டால் அற்று என விரியும். எண்ணிக் கொண்டற்று என்றது 'எண்ணிக் கொண்டால் போன்றது' எனப்பொருள்படும்.
'எண்ணிக் கொண்டு' என்ற தொடர்க்கு 'எண்ணிக் கொண்டு' அதாவது கணக்கெண்ணுதல் என்று ஒருசாராரும் நினைத்துப் பார்த்தல் என இன்னொரு சாராரும் விளக்கம் செய்தனர்.
முதல் வகையினர் பெரும்பான்மையர். அவர்கள் கூறுவதாவது: நீத்தார் பெருமை அளவில் அடங்காது என்று சொல்ல வந்த வள்ளுவர் அதற்கு உவமையாக இறந்தவர்களைக் கணக்கிட்டு அறிவதை ஒக்கும் என்பது. இறந்தவர்களை எண்ணித் தொகுத்தல் என்பது இயலாத செயல். விண்மீன்கள் எத்தனை என்றும் கடற்கரை மணல் எவ்வளவு என்றும் எண்ணிச் சொல்லமுடியுமா? இன்றுள்ள கணித அறிவு/அறிவியல் கருவிகள் மூலம் அவற்றைக் கணக்கிடுவதுகூட ஓரளவு இயலுமேயானாலும் கடந்தகாலத்தில் இறந்தவர் எத்துணை பேர் என்று அறிவது எப்படி? அது முடியவே முடியாத செயல். அதுபோல துறந்தார் பெருமையும் அளவிட முடியாதது எனச்சொல்லப்படுகிறது.
இவ்வுலகத்தின்கண் துறவாராகப் பிறந்து இறந்தாரை எண்ணிக்கொண்ட அவ்வளவிற்று என்றும், உலகநலனுக்குத் தன் பங்களிப்பாக ஒன்றும் நல்காமல் மண்ணில் மறைந்தோரை நினைத்துப் பார்த்துத் தந்நலம் கருதாது பணியாற்றும் நீத்தார் பெருமையின் அளவைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும், இறந்த நீத்தார் பெருமையை எண்ணி அவர்போல் செயற்கரிய செய்து புகழுடன் வாழவேண்டும் என்றும். இதுவரை இறந்தவரின் பெருமைகளை யெல்லாம் ஒருங்கிணைத்து எண்ணினால் எவ்வளவு பெருமை நலம் ஏற்படுமோ அத்தகைய பெருமையை உடையவர் நீத்தார் என்றும் கூறுவர் இரண்டாம் வகையினர்.
‘எண்ணிக் கொண்டற்று’ என்பதிலுள்ள எண்ணி என்பதற்கு நினைத்து எனக் கொள்வதினும் எண்ணலளவையாக எண்ணி எனக்கொண்ட உரையே பொருத்தமாகும்.
இங்கு சொல்லப்பட்ட உவமை உயர்வுநவிற்சியின் மேலெல்லையாக உள்ளது. இந்தஅளவு வள்ளுவர் வேறு எப்பொருளையும் உயர்த்திப் பேசவில்லை.

இவ்வளவுபேர் என்று அளவிடும் கணித எண்ணுதலே 'எண்ணிக் கொண்டு' என்பதற்குப் பொருத்தமான பொருள்.

நீத்தாரது பெருமையை அளந்து சொல்வது, உலகத்தில் இறந்து போனவர்களை எண்ணிக் கொள்வதை ஒக்கும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

இறந்தார் எத்துணையர் என்பது எண்ணத்தொலையாது; நீத்தார் பெருமை சொல்லி மாளாது.

பொழிப்பு

நீத்தார் பெருமை இவ்வளவினதென்று கூறுதல் இவ்வுலகத்திலே பிறந்து இறந்தாரை எண்ணி அளவு காணப் புகுவது போல.