இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0019



தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:19)

பொழிப்பு (மு வரதராசன்): மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

மணக்குடவர் உரை: தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின்.
இது தானமும் தவமுங் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின்.
(தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)

வ சுப மாணிக்கம் உரை: மேலுலகம் நீரை வழங்காவிட்டால் தானமும் தவமும் மறைந்து விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வானம் வழங்கா தெனின் வியன்உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா.

பதவுரை: தானம்-கொடை; தவம்-நோன்பு; இரண்டும்-இரண்டும்; தங்கா-நிலைத்து நிற்கா, உளவாகமாட்டா; வியன்-அகன்ற, விரிந்த; உலகம்-நிலவுலகம்; வானம்-முகில், வானிலிருந்து பொழியும் மழையை இங்கு குறிக்கும்; வழங்காது- நல்காது, பெய்யாது; எனின்-என்றால்.


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா அகன்ற வுலகத்துக்கண்;
பரிதி: தானம் தன்மம் தவசு உண்டாகா பூலோகத்தில்; [தன்மம்-தர்மம்]
காலிங்கர்: தானமும் தவமும் ஆகிய இவை இரண்டும் இவ்உலகத்து நிலைபெறா;
பரிமேலழகர்: அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா;
பரிமேலழகர் குறிப்புரை: தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.

தானம்,தவம் ஆகிய இரண்டு அறங்களும் அகனற உலகத்தின்கண் உளவாகா என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கண்டனர். பரிமேலழகர் தானத்திற்கும் தவத்திற்கும் விளக்கம் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்துக்குரிய தானமும் துறவறத்துக்குரிய தவமும் ஆகிய இரண்டும் நிகழமாட்டா', '(வானவர்க்குப் பூசை செய்வது மட்டுமல்ல) மனிதனுக்கு மனிதன் உதவி செய்யும் தான தர்மங்களும் மனிதன் தனக்கே நன்மையென்று செய்கின்ற தவமும் நடைபெறா', 'அகன்ற உலகத்திலே, பிறர்க்கு வேண்டுவன கொடுக்கும் கொடையும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் நிலைபெறமாட்டா', 'இப்பெரிய உலகத்தில் கொடை தவம் (தன் துயர் தாங்கிப் பிறிது உயிர்க்குத் துன்பம் செய்யாமை) என்னும் இரண்டும் அவற்றைச் செய்வார் இல்லாமல் நீங்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தானம் கொடுத்தலும் தவம் செய்தலும் இவ்வகன்ற நிலவுலகின்கண் நிலைபெறா என்பது இப்பகுதியின் பொருள்.

வானம் வழங்கா தெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மழை பெய்யாதாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது தானமும் தவமுங் கெடுமென்றது.
பரிதி: மழை வழங்காவிடில் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் விண்ணுலகமானது மழையை வழங்காதாயின் என்றவாறு.
பரிமேலழகர்: மழை பெய்யாது ஆயின்.

'மழை பெய்யாவிட்டால்' என்று அனைத்து பழைய ஆசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பரந்த உலகில் மழைபொழியாவிடில்', 'உலகத்தில் மழையில்லாவிட்டால்', 'மழை பெய்யாதாயின்', 'மழைபெய்யாது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வானம் மழையைக் கொடுக்காவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வானம் மழையைக் கொடுக்காவிட்டால் தானம் கொடுத்தலும் தவம் செய்தலும் இவ்வகன்ற நிலவுலகின்கண் நிலைபெறா என்பது பாடலின் பொருள்.
மழைக்கும் தானம், தவம் இவற்றிற்கும் உள்ள தொடர்பு என்ன?

மழை பெய்யாவிடின் உயர் மனிதப்பண்புகளான கொடை, நோன்பு என்றிவையும் இல்லாமல் போகும்.

மழை பொழியாவிடில் அகன்ற நிலவுலகில் கொடை, நோன்பு என்னுமிவை உளவாகமாட்டா.
இவை இரண்டும் பலவிடங்களில் இணைத்தே பேசப்படுகின்றன. தானம், தவம் இரண்டும் மண்ணுலகில் நடைபெற மழைபெய்தல் இன்றியமையாதது.
தானம்:
தானம் என்பது பிறர்க்கு கொடுப்பது பற்றியது. இது நல்வழியில் தேடிய பொருளை, அருளின் வெளிப்பாடாக இரப்போர்க்கு ஈடின்றிக் கொடுப்பதாம். நல்லார்க்கு ஈதலைத் தானம் என்றும் இல்லார்க்கு ஈதலை ஈகை என்றும் வேறுபடுத்திக் கூறி, இல்வாழ்வார் அறங்களில் சிறந்தது தானம் என்பார் வ உ சிதம்பரம் பிள்ளை. வறியவர்களுக்கும் காணார், கேளார், கால் முடப்பட்டோர் போன்ற ஊனமுற்றோர்க்கு வழங்குதலையும் தானமாகக் கொள்ளலாம்.
தவம்:
பொதுவாக உலக நன்மை நாடி, எதையேனும் வேண்டிப் பெறுதலுக்காகச் செய்வது தவம் எனப்படும். ஒருவர் தாம் உய்வதற்கு வழி தேடி அதாவது துறக்க உலகம் (வீடு/ மோட்சம்) அடைய மேற்கொள்வது ஒருவகைத் தவம். இதற்காகத் துறவறத்தார் காடு சென்று ஐம்புலன்களை அடக்கிக் கடுமையாக உடலை வருத்திக்கொள்வர்களாம். எளிமையாக வருத்திக் கொள்வனவாகிய உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியனவற்றையும் தவத்துள் அடக்குவர். துறவற ஒழுக்கங்களில் சிறந்தது தவம் என்பர்.

சென்ற குறளில் (18), மழை பெய்யாதாயின் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் விழாக்களும் வழிபாடுகளும், இல்லாமல் போகும் என்று சொல்லப்பட்டது. இங்கு தானம் தவம் இரண்டுமே நிலையாமற் போய்விடும் எனக் கூறப்படுகிறது. ஈகை, தவம் என்பன குறளில் தனித்தனி அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன; மழை இல்லாமற்போனால் அறங்களாகக் கருதப்படும் இவை இரண்டுமே நடைபெறா.
தானம், தவம் இவற்றின் உயர்வை ஔவையாரும் பாடியுள்ளார். உலகில் மிகவும் அரியது எது என வினா எழுப்பி அதற்கு விடையாக வரும் அவரது பாடல் ஒன்று: ...............................ஞானமும் கல்வியும் நயந்த காலையும், தானமும் ,தவமும் தான் செய்தல் அரிது. தானமும் தவமும் செய்தால் வானவர் நாடு வழி திறந்திடுமே. (ஒளவையார் தனிப் பாடல் : 57: ) என்கிறது. முழுப்பாடலின் பொருள்: உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும்.
தானம், தவம் என்னுமிவை பிறர்க்கு உதவியாகவும் நன்மை நாடியும் செய்யப்படுவன. மேலான மாந்தப் பண்புகளின் வெளிப்பாடுகளான இவை அடிப்படையில் மழையினாலேயே அமைகின்றன என்று அவற்றின் மூலக் காரணத்தைச் சொல்லி, மழை இன்றிப் போனால் தானமும், தவமும் கூட பொய்த்துப் போகும் எனச்சொல்லப்பட்டது.

வியன் உலகம் என்பது அகன்று பரந்த உலகம் என்ற பொருள் தரும். 'வெறும் வியன்மை தானத்தையும் தவத்தையும் நிகழ்த்த வல்லதாகுமா? தானத்துக்கும் தவத்துக்கும் மழை தேவை. மழையின் மாண்பை விளக்க 'வியன்' என்றார் வள்ளுவர். வியன் உலகுக்கும் மழை வேண்டும் என்றபடி' (திரு வி க.). நிலவுலகம்‌ பரந்து விரிந்து பெரியதாய் இருந்தாலும்‌, மழையானன்றி, அதற்கு அறப்பெருமை இல்லை என்பது தோன்ற 'வியனுலகம்‌' எனப்பட்டது‌,

மழைக்கும் தானம், தவம் இவற்றிற்கும் உள்ள தொடர்பு என்ன?

மழையே மாந்தரின் பொருள்நிலைக்கு ஆதாரம். மழை இல்லையேல் உலகில் உணவு வளம் இல்லை. இதனால்தான் வறுமை நீக்கத்துக்கு மழை வேண்டுமென்று வான் சிறப்பு அதிகாரத்தின் பல குறள்கள் மொழிகின்றன. உணவு இல்லையேல் பிறருக்கு வழங்கும் பண்பும் வற்றிவிடும். தவம் மேற்கொள்வார் உயிர்வாழவும் இல்லறத்தாரையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சமுதாயப் பொருள்நிலை சிறவாதிருக்கும்போது தானம் தவம் என்ற இவ்விரண்டு அறங்களும் தடைபடும். வறுமையுள்ளவிடத்தில் தானமும் தவமும் நிகழ்தல் அருமை. மழைபெய்து வறுமை யொழிந்து வளம் சிறக்கின் தானமும் தவமும் மீண்டும் நடைபெறும்.

மழை இல்லையேல் தானமும் இல்லை தவமும் இல்லை.

பரந்த இவ்வுலகில் மழைபொழியாவிடில் தானமும் தவமும் ஆகிய இரண்டும் நிகழமாட்டா என்பது இப்பாடலின் பொருள்.



அதிகார இயைபு

அறம் தழைக்க மழைபெய்தல் இன்றியமையாதது என்னும் வான்சிறப்பு கூறுவது.

பொழிப்பு

வானுலகம் நீரை வழங்காவிட்டால் அகன்று விரிந்த இவ்வுலகில் தானமும் தவமும் மறைந்து விடும்.